

ரங்க ராமானுஜ தாஸன் கார்த்திகை மாதம் முழுவதும் இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வது காலம்காலமாக அறிவியல் ரீதியாகவும் மக்கள் நலனுக்காகவும் நடைபெற்று வரும் வைபவம் ஆகும். கார்த்திகை மாத பௌர்ணமி நாளை ஒட்டி, தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீப வழிபாடு குறித்த தகவல்கள் சங்க நூல்களிலும் காணப்படுகின்றன.
மாலை வேளைகளில் வீடுகளின் வெளிப்புறம், வீட்டின் முற்றம் என்று அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி இவ்விழா கொண்டாடப்படுவது வழக்கம். கோயில்களில் தீப உற்சவம், சஹஸ்ர தீப வைபவம் என்று இவ்விழா பக்தர்களால் விரிவுபடுத்தப்பட்டது.
இல்லத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 தீபம் ஏற்றுவது சிறப்பான ஒன்றாக கூறப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளில் சொக்கப்பனைக்கு நெருப்பு வைத்து இறைவன் ஜோதிப் பிழம்பாக தோன்றிய நாளை நினைவு கூர்ந்து, அனைவரும் மகிழ்கின்றனர்.
கார்த்திகை தீபம் மூன்று தினங்களாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தீபமான குமராலய தீபம் முருகப் பெருமான் கோயில்களில் வழிபடும் முறையாகும். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் தீபத் திருநாள், சர்வாலய தீபமாகும். பெருமாள் கோயில்களில் ரோகிணி நட்சத்திரத்தில் வரும் நாளை விஷ்ணுவாலய தீபமாக கொண்டாடுகின்றனர்.
கார்த்திகை தீப திருநாளில் மிகவும் புகழ்பெற்ற திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இல்லங்களில் தீபம் ஏற்றினால் இருள் அகன்று ஒளி மிகுந்த வாழ்க்கையை சிறப்பாக பெற முடியும் என்பது ஐதீகம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று கூறப்படுகிறது. விளக்கேற்றியபிறகு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு முன்னர் அமர்ந்துகொண்டு, தீபம் ஜோதி பரப்பிரம்மம் தீபம் சர்வ தமோபஹம் தீபனே சாத்யத சர்வம் சந்த்யா தீப நமோஸ்துதே!
என்ற ஸ்லோகத்தை கூற வேண்டும். இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது சிறப்பு. இயலாதவர்கள் 3, 9, 11 என்ற எண்ணிக்கையில் கூறலாம். தீபத் திருநாள் வழிபாட்டால், அனைத்து செல்வங்களும் கிடைக்கும், வீடு, மனை யோகம் கிடைக்கும், இழந்தவை அனைத்தும் மீண்டும் கிடைக்கும், அனைவரும் இன்னல்களில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.