

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுடலைஆண்டி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் நல்லப்பன், உடுமலையைச் சேர்ந்த அப்துல் கலாம் மற்றும் லட்சுமி அம்மாள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுத்தாயி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பராஜா, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பெரியசாமி ஆகியோர் இயற்கை வேளாண்மை முறையில் தென்னை சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற்றுள்ளனர்.
முன்னதாக, மட்டை உரித்த பின்பு சுமார் 350 கிராம் மட்டுமே இருந்த இவர்களின் தேங்காய் எடையானது, தங்களின் முறையான இயற்கை சாகுபடி மற்றும் பராமரிப்பு உத்திகள் காரணமாக, தற்போது 850 கிராம் முதல் 1,250 கிராம் (ஒன்னேகால் கிலோ) வரை அதிகரித்துள்ளது.
முறையான பராமரிப்பின் மூலம் ஒரு வெட்டுக்குக் கிடைக்கும் காய்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக இவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். உவர்ப்பு நிலம் மற்றும் நீர் வளம் குறைந்த மண்ணிலும் இந்த மகசூல் சாத்தியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால வளர்ப்பு முறைகள்
தமிழகத்தில் தென்னை சாகுபடி பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், தரமான கன்றுகளைத் தேர்வு செய்தல், முறையான இடைவெளி விட்டு நடுதல், மண்ணின் தன்மைக்கேற்ற சத்துக்களை வழங்குதல், நோய் மற்றும் வண்டுகளின் தாக்குதலைத் தடுக்கும் ஆரம்பகால வளர்ப்பு முறைகள், மாதவாரியான பராமரிப்பு, முறையான நீர் மேலாண்மை ஆகியவை விவசாயிகளுக்கு நிச்சயம் வெற்றியைத் தேடித்தரும்.
தென்னை மரங்களுக்குத் தேவையான சத்துக்களையும், பாசனத்தையும் முறையாக வழங்கி வந்தால், நோய், வண்டுகள் பாதிப்புகளிலிருந்து மரங்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, நல்ல விளைச்சல் கிடைக்கும்.