Published : 24 May 2023 06:05 AM
Last Updated : 24 May 2023 06:05 AM

டிங்குவிடம் கேளுங்கள்: யாருக்கு அதிகமான சிலைகள்?

உலகில் யாருக்கெல்லாம் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன, டிங்கு?

- பி. கோகுல், 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

உலகம் முழுவதும் ஏசுவையும் புத்தரையும் பின்பற்றுபவர்கள் அதிகமாக இருப்பதால், அவர்கள் இருவருக்கும் சிலைகள் அதிகமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் லெனினுக்கு சோவியத் ஒன்றியத்திலும் உலகின் பல பகுதிகளிலும் சிலைகள் அதிகம் இருந்தன. அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனுக்கு அதிகமான சிலைகள் இருக்கின்றன. இந்தியாவில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் அதிக எண்ணிக்கையில் சிலைகள் இருக்கின்றன.

இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவில் காந்திக்கு அதிகமான எண்ணிக்கையில் சிலைகள் இருக்கின்றன. இவ்வளவுக்கும் காந்தி அமெரிக்காவுக்குச் சென்றதில்லை. யாருக்கு எவ்வளவு சிலைகள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம், கோகுல்.

டி-20 கிரிக்கெட்டில் ப்ளே ஆஃப் சுற்று என்றால் என்ன, டிங்கு?

- ஜி. இனியா. 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

அரை இறுதிச் சுற்றில் 4 அணிகள் இரண்டு போட்டிகளில் மோதும். முதல் போட்டியில், சிறப்பாக விளையாடி முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். இரண்டாவது போட்டியில் மீதி இருக்கும் இரண்டு அணிகள் மோதும். இப்படி மோதும்போது முதல் போட்டியில் மோதிய அணிகளிலிருந்து வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும்.

இரண்டாவது போட்டியில் மோதிய அணிகளில் இருந்து வெற்றி பெறும் அணி, முதல் போட்டியில் தோற்ற அணியுடன் மோதும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணியுடன் மோதும். இதைத்தான் ப்ளே ஆஃப் என்கிறார்கள் இனியா. இந்த ப்ளே ஆஃப் முறை மூலம் மிகச் சிறப்பாக விளையாடிய அணிக்குக் கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைப்பது நல்லதுதானே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x