Last Updated : 15 May, 2023 06:12 PM

 

Published : 15 May 2023 06:12 PM
Last Updated : 15 May 2023 06:12 PM

2023 நெட் தகுதித் தேர்வு.. விண்ணப்பிப்பது எப்படி?

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் ‘நெட்’ (National Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்தத் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு ஜூன் 13 முதல் 22ஆம் தேதிக்குள் கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு மே 10 முதல் தொடங்கியுள்ளது.

‘நெட்’ தகுதித் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://ugcnet.nta.nic.in/ இல் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்கலாம். மே 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளலாம்.

இணையவழி விண்ணப்பப்பதிவின்போது விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி, தேவையான ஆவணங்கள், ஒளிப்படம், கையொப்பம் ஆகியவற்றைப் பதிவுசெய்து இறுதியில் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1150 விண்ணப்பக் கட்டணமும், இடபிள்யூஎஸ், ஓபிசி, கிரீமிலேயர் அல்லாத (என்சிஎல்) பிரிவினர் ரூ. 600 கட்டணமும், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ரூ. 325 கட்டணமும் செலுத்த வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில் முதல் கட்டத் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாம் கட்டத் தேர்வு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெற உள்ளன. இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வின் வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் வெற்றிபெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in என்கிற இணையதளத்தைப் பார்வையிடவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x