Published : 08 Sep 2017 09:30 AM
Last Updated : 08 Sep 2017 09:30 AM

கோலிவுட் கிச்சடி: 20 கோடியில் விஜய் சேதுபதி

புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’என்ற படத்தைத் தாயரித்திருக்கிறார் விஜய் சேதுபதி. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் கூறிய கதை பிடித்துவிட, அந்தப் படத்தை நடித்து, தாமே தயாரிக்கிறார். இதுவரை இல்லாத வகையில் 20 ரூபாய் கோடி தயாரிப்பில் இந்தப் படம் உருவாகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ படத்தில் அறிமுகமான சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.‘ஜுங்கா’ எனத் தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கிய யோகி பாபு, ‘ஜுங்கா’வில் படம் முழுவதும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்க இருக்கிறாராம்.

 

அஜித் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்

வேட்டிக் கட்டிய கிராமத்து மனிதராக அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. தற்போது இந்தப் படத்தின் இந்தி மறுஆக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திப்பட இயக்குநரான ஃபர்ஹத் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் நாயகனான முதலில் சல்மான் கான் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து முடித்திருக்கும் மற்றொரு முன்னணி இந்தி நடிகரான அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘லொல்’ என்று(LOL - LAND OF LUNGI ) என்று தலைப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

அள்ளித் தந்த தரமணி

அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற 'தரமணி' படத்தில் பெயரில்லாத கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் லிஸி ஆண்டனி. இந்த ஒரு படம் தந்த புகழால், ராமின் அடுத்த படமான 'பேரன்பு ', 'சூ மந்திரக்காளி' , மாரி செல்வராஜ் இயக்கத்தில் ' பரியேறும் பெருமாள் ', 'மூடர் கூடம்' ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் உட்பட மொத்தம் ஐந்து புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த லிஸி ஷிப்பிங் துறையில் அனுபவம் மிக்க அதிகாரியாகப் பல உலகநாடுகளை வலம் வந்தவர். இயக்குநர் ராம் 'தங்க மீன்கள்' படத்தில் இவரை ஆசிரியையாக நடிக்க வைத்திருந்தார். அப்போது தொடங்கிய பயணம் தற்போது ‘தரமணி’யால் வேகமெடுத்திருக்கிறது.

 

மீண்டும் ‘களவாணி’ கூட்டணி

அமைதியாக இருந்த விமல் அதிரடியாக இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். 'வெற்றிவேல்' பட இயக்குநர் வசந்தமணி இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் படம் இதில் ஒன்று. அடுத்து விமலுக்குத் திருப்புமுனையாக அமைந்த ‘களவாணி ’படத்தின் இரண்டாம் பாகம். தற்போது மாதவன் நடிக்கும் படத்தை இயக்கிவரும் சற்குணம் அடுத்து ‘களவாணி-2’ இயக்குகிறார். சூரி, கஞ்சா கருப்பு கூட்டணியும் இதில் தொடர்கிறது. இந்த இரண்டு படங்களையும் தயாரித்து நடிக்கும் விமல், சத்தமில்லாமல் தற்போது நடித்துத் தயாரித்திருக்கும் படம், ‘மன்னர் வகையறா’. தரமான பொழுதுபோக்குப் படங்களை இயக்கி வந்திருக்கும் பூபதி பாண்டியன் இயக்கி முடித்திருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

ஒரேயொரு கதாபாத்திரம்!

தயாரிப்பில் இருக்கும் ‘ஒன்’ என்ற படத்தில் நடித்து, தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்து சாதனை படைத்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். தற்போது கதாநாயகன் மட்டும் படம் முழுவதும் வரும் ஒற்றைக் கதாபாத்திரத்தைக் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது ‘கார்கில்’. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் காரில் செல்லும் கதாநாயகனுக்கு காதலியுடன் சின்ன விரிசல். அந்த விரிசலே கார்கில் சண்டை போல மாற, நாயகன் போராடி வெல்லும் காதல் கதையாம் இது. சிவானி செந்தில் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலியாக சில காட்சிகளே தோன்றும் கதாபாத்திரத்தில் பிரேமா நடிக்க, கதாநாயகனாக அறிமுகமாக இருப்பவர் ஜிஷ்னு. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x