Published : 14 Mar 2023 09:52 AM
Last Updated : 14 Mar 2023 09:52 AM

சென்னையில் இன்று முதல் ஈரானியப் படவிழா!

தோழர்களுடன் சந்தோஷமாக விளையாடிக் களித்துக் கொண்டிருந்த பதினோரு வயதே நிரம்பிய ஆஷோவுக்கு ஒரு திடீர் நெருக்கடி. ஆவனது சந்தை மீது கொலைக் குற்றச்சாட்டுப் பதியப்படுகிறது. இதனால், அவன் தனது அப்பாவை விட்டு பிரிந்து செல்லவேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு சிறுமியைப்போல் ஆடை அணிந்து கொண்டு, சகோல் என்கிற பெயரில் மாறு வேடத்தில் ஆப்பிள் பள்ளத்துக்குக்குச் சென்றுவிடச் சொல்கிறார் அவனது அப்பா. நிலமை சீரடையும் வரை அவன் அங்கே மறைந்து வாழ வேண்டிய நிலை. ஆப்பிள் பள்ளத்துக்குப் பகுதிக்கு அவனை அழைத்துச் செல்பவன், அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரனான பரி. ஆனால் ஆப்பிள் பள்ளத்தாக்குப் பகுதியை அடையும் அந்தப் பயணம் அவனுக்கு பல சவால்களை வைத்துக் காத்திருக்கிறது. சிறுவயதில் இறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த தன்னுடைய தாயின் முகத்தை அவன் அப்பிள் பள்ளத்தாக்கில் தன்னையும் அறியாமல் தேடுகிறான். அது ஏன் என்று அவனுக்கும் தெரியவில்லை. அந்த ஆப்பிள் பள்ளத்தாக்கின் காற்றில் அவனது தாயின் சுவாசம் கலந்திருக்கிறதோ என்னவோ. இயற்கை எழில் சூழ்ந்த அந்த மலைப் பகுதில் அவன் தேடுகிற தன் தாயின் முகத்தை அவன் கண்டறிந்தானா, இல்லையா என்பதுதான் ஈரானிய புதுயுக சினிமா இயக்குநர்களில் ஒருவரான பெரேதூன் நஜாபி இயக்கத்தில் 2020இல் வெளிவந்த ‘வுல்ஃப் கப்ஸ் ஆஃப் ஆப்பிள் வேலி’ (Wolf Cubs of Apple Valley/2020/Dir. Fereydoun Najafi) என்கிற ஈரானியத் திரைப்படம்.

இப்படத்தை சென்னையில் நாளை தொடங்கி (மார்ச் 14) வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் ஈரானியத் திரைப்பட விழாவில் ‘ஓபனிங் பிலிம்’ ஆக காணலாம். சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச் சாலையில் உள்ள அலையான்ஸ் பிரான்சே கலாச்சார மையத்தில் நடைபெறவிருக்கும் ஈரானியப் படவிழாவில் மார்ச் 14, 15, 16 ஆகிய 3 நாட்களும் மாலை 6 மணிக்கும் அதன்பின்னர் 7.40 மணிக்கும் தலா இரண்டு படங்கள் வீதம் மோதம் 6 தற்கால ஈரானியப் படங்கள் திரையிடப்படுகின்றன. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சாரத் தூதரகத்துடன் (Culture House of the Islamic Republic of Iran in Mumbai) இணைந்து இண்டோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் (ICAF) திரைப்படச் சங்கம் இப்படவிழாவை ஒருங்கிணைத்துள்ளது.

தற்காலத்தின் ஈரானியப் படங்கள் சில

படவிழாவின் முதல் நாளில் இரண்டாவது திரைப்படமாக ‘எமத் அண்ட் தூபா’ஸ் ரொமாண்டிசிசம்’ (Emad and Touba’s Romanticism/2019/Dir.Kaveh Sabbaghzade) என்கிற படம் திரையிடப்படுகிறது. எமத் - துபா இருவரும் ஒருவருள் மற்றொருவர் காதலை கண்டுகொள்ளும்போது, உற்சாகம் பீறிடுகிறது. கிளர்ந்தெழும் உணர்வுகளை விட அக்காதல் உடைந்து நொறுங்கிவிடாமல் இருக்க மனதளவில் இருவருமே சர்க்கஸ் செய்யவேண்டிய நிலையைக் காதல் அவர்களுக்குக் கொடுக்கிறது. ஆனால், காதலை சர்க்கஸ் கலைஞர்களைப்போல சமாளிக்க முடியுமா என்பதை இப்படத்தின் வழி சித்தரித்துள்ளார் இயக்குநர் கேவா.

‘சீ பாய்ஸ்’ (Sea Boys/2021/Dir. Afshin Hashemi, Hosein Jami) என்கிற படம் 15ஆம் தேதி மாலை 6 மணிக்குத் திரையிடப்படவிருக்கிறது. தேசத்தின் இருவேறு திசைகளில் வாழும் இரண்டு பையன்கள். வடக்கு ஈரானில் வாழ்பவன் தந்தையை இழந்தவன். அவனது உலகம் அம்மா மட்டும்தான். தெற்கு ஈரானில் வாழ்பவன் தாயை இழந்தவன. அவன் தந்தையையின் அன்பில் தாயை தினம் தினம் தரிசித்துகொண்டிருப்பவன். என்றாலும் தங்களது பெற்றோருக்கு வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடக் கூடாது என்று இருவருமே நினைக்கிறார்கள். அதற்காக அப்பாவுக்கு ஒரு துணைத் தேடத் தொடங்குகிறான் வடக்குப் பையன். அம்மாவுக்கு ஏற்ற துணையைத் தேடுகிறா தெற்கவன். இந்தத் தேடலில் இந்தக் குடும்பம் கலந்ததா என்பதைத்தான் ‘சீ பாய்ஸ்’ திரைப்படம் உணர்ச்சிகரமான ஒரு பாசப் போராட்டத்தை நம் முன் நிறுத்துகிறது.

இந்தப் படத் திரையிடலைத் தொடந்து 7 மணிக்கு ‘லெஜண்ட் ஆஃப் பொனசந்தே ஜீனி இந்த த லேம்ப்’ (Legend of Bonasanthe Genie in the Lamp/2021/Dir. Habib Ahmadzadeh) என்கிற 96 நிமிட படம் திரையிடப்படுகிறது. இஸ்லாமிய புராணக் கதை மரபில் விளக்கில் மறைந்திருக்கும் ஜீனி பூதம் செழுமை மற்றும் அன்பின் குறியீடாக இருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு தனி மனிதர்களின் கதைகள் பேசப்பட்டுள்ளன. தொன்மக் கதையை தற்காலத்தின் வாழ்க்கையுடன் பொருத்தி மீள் சொல்லலாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் ஹபீப்.

படவிழாவின் இறுது நாளான மார்ச் 16 ஆம் தேதி முதல் திரைப்படமாக ‘மெஹ்ரன்’ (Mehran/2021/Dir. Rogiye Tavakoli) திரையிடப்படுகிறது தற்காலத்தின் கவனிக்கப்படும் ஈரானிய இயக்குநராக உருவெடுத்துள்ள ரோகியே தவகோலி இயக்கியிருக்கும் இப்படம், ஒரு புதிய நகரத்தில் வாழ்க்கையை அமைத்துகொள்ள வரும் ஒரு குடும்பம் சந்திக்கும் எதிர்பாராமையைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். மெஹ்ரான் என்று அழைக்கப்படும் எல்லையோர நகரத்திலிருந்து இந்த குடும்பம் யாஸ்ட்டின் என்கிற பரபரப்பான நகரத்தில் குடியேறுகிறது. அங்கே, போரினால் மனைவியை இழந்ததங்கள் மகனுக்கு மறுமணம் செய்துவிக்கும் முயற்சியில் பெற்றோர் இறங்க, புதிதாக வந்த ஒரு குடும்பத்தின் அடையாளச் சிக்கல், அவர்களை எவ்விதமான நெருக்கடிகளில் நிறுத்துகிறது என்பதை படம் சித்தரிக்கிறது.

இரவு 7 மணிக்குத் திரையிடப்படும் பட விழாவின் ‘குளோசிங் ஃபிலிம்’ ஆக ‘லாஸ்ட் விஸ்பர்ஸ் இன் தி டிஸ்டன்ஸ்’ (Lost Whispers in the Distance/2021/Dir.Mansour Forouzesh) என்கிற படம் திரையிடப்படுகிறது. ஈரானிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் புலம் பெயர்ந்த அகதிகள் குழு செர்பியாவில் உள்ள முகாம்களில் வாழ்கிறது. அவர்கள், ஐரோப்பாவைப் பற்றிய கனவுகளைத் தாங்கிக்கொண்டிருப்பவர்கள். அதே நேரத்தில் சில குர்திஷ் குடும்பங்களின் குழு சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லையை கடக்க முயற்சிக்கிறது. சட்ட விரோதமாக எல்லையைக் கடக்க உதவும் தொழில்முறை ஆட்கள் கேட்கும் அதிக தொகையை கொடுக்க முடியாத காரணத்தால் அவர்கள் தாங்களாகவே எல்லையைக் கடக்க முடிவு செய்கிறார்கள். அதில் நிறைந்திருக்கும் உயிராப்பது, வாழ்வா, சாவா என்கிற போராட்டத்தைக் கொண்டது. அதனால்தானோ என்னவோ அவர்கள் இந்த இடம் மிகுந்த புலப்பெயர்தலை ‘கேம்’என்று குறிப்பிடுகிறார்கள். கேம் என்னவானது அந்தக் குடும்பங்களின் கேம் என்னவானது என்பதை இப்படத்தின் பதைப்பதைப்பான நிமிடங்கள் வழியே திரை அனுபவமாகப் பெறலாம்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x