Last Updated : 28 Jul, 2014 12:00 PM

 

Published : 28 Jul 2014 12:00 PM
Last Updated : 28 Jul 2014 12:00 PM

சோதனைக் குழாய் அற்புதங்கள்: ஜூலை 25 உலகக் கருவியல் தினம்

உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயி ப்ரவுன் பிறந்தபோது, உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக் கிடந்த பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கைக் கீற்று கிடைத்தது. முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினம்தான் உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர், ஆண் இனப்பெருக்கத் தொகுதி நிபுணர், ஹார்மோன் நிபுணர் போன்ற நிபுணர்களுடன் சேர்ந்து பணிபுரிபவர்களாக கருவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். பல சமயங்களில் அவர்களின் முகம்கூட வெளித் தெரிவதில்லை.

“ஒரு கருவியல் நிபுணரின் பணி என்பது விந்தணு மற்றும் சினைமுட்டையைச் சேகரித்த பிறகு கருவூட்டல், கருவின் வளர்ச்சியைக் கண்காணிப்பது, வளர்ந்த கருவை அடுத்த கட்டப் பயன்பாட்டுக்கு உட்படுத்துவது மற்றும் கருக்கொடைக்கான நெறிமுறை விதிகளைப் பராமரிப்பதுமாகும்” என்கிறார் மருத்துவர் சசிகலா நடராஜமணி. இவர் க்ரியா கன்சப்ஷன்ஸ்சின் மூத்த ஆலோசகராகவும் இயக்குநராகவும் இருக்கிறார்.

“நகரும் திறனுள்ள விந்தணுவை நகரும் திறனற்ற விந்தணுவிலிருந்து பிரிக்கும் வேலையை ஒரு கருவியல் நிபுணரே செய்கிறார். ஆரோக்கியமான, நீந்தும் திறனுள்ள விந்தணுக்களைச் சேகரிப்பது அவசியம். நவீன வாழ்க்கை முறையாலும், வேதிப் பொருட்கள், மின்காந்த அலைகள், வெப்பம், கஃபீன், நிகோடின் பொருட்களால் பாதிப்புகள் இருப்பதால் மேலோட்டமாக ஆரோக்கியமாகத் தெரிந்தாலும் நல்ல மரபணுவை வைத்திருக்குமா என்பதும் சந்தேகமே” என்கிறார் மருத்துவர் ஹிஷம் க்ரீசிஸ்.

கவனம் தேவை

நாடு முழுவதும் கருத்தரிப்பு மையங்கள் என்ற பெயரில் பல மருத்துவமனைகள் முளைத்துள்ள நிலையில் ஐவிஎஃப் மூலம் செயற்கைக் கருவூட்ட சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் தம்பதிகள் சரியான நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகியுள்ளது.

“செயற்கைக் கருவூட்டல் முறையில் சிக்கல்கள் தோன்றும்போது சரியான அனுபவமும் மருத்துவப் பின்னணியும் உள்ள கருவியல் நிபுணரே சரியான தீர்வை அளிக்க முடியும். செயற்கைக் கருவூட்டலுக்கு உட்படுகிறவரைச் சரியான முறையில் தயார்படுத்தாமல் இருந்தால் பல நேரங்களில் கருத்தரிப்பு தோல்வியில் முடியும். சினை முட்டைகள் மற்றும் விந்தணுவைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதில்தான் வெற்றிகரமான கருவூட்டல் சாத்தியம்” என்கிறார் க்ரீசிஸ்.

ஆரோக்கியமான கருத்தரிப்புக்கு

புகைப்பிடித்தல், மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும். மதுவில் உள்ள ஆல்கஹால், ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்க நேரிடலாம்.

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவேண்டும். விந்தணு எண்ணிக்கைக் குறைபாட்டுக்கு உடலில் உள்ள கொழுப்பு ஒரு காரணியாக உள்ளது. முறையான உடற்பயிற்சியால் கொழுப்பு குறையும். அத்துடன் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, ஹார்மோன்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் அதீதமாக உடற்பயிற்சி செய்தால் மாதவிடாய் பருவங்களில் ஏற்றத் தாழ்வு ஏற்படலாம்.

சரியான வேளையில் சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். விட்டமின் சி, ஈ, துத்தநாகம், செலினியம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். விந்தணுக்களின் நகர்வுத் திறனும் அதிகரிக்கும். பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். கீரை வகைகள், முட்டை, பால், கொட்டை உணவுகள் மற்றும் சிட்ரஸ் உணவுகள் போதுமான சத்தை அளிக்கும்.

டீ, காபி, சாக்லேட்கள் மற்றும் செயற்கைப் பானங்களைத் தவிர்க்க வேண்டும். சைக்கிளில் உள்ள இருக்கை கடினமாக இருத்தல் கூடாது. சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சரியான தூக்கமின்மை ஆண், பெண் இருவரிடமும் ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும். எட்டு மணி நேர தூக்கம் அவசியம். எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அவசியம்.

©தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x