Published : 22 Dec 2022 03:27 PM
Last Updated : 22 Dec 2022 03:27 PM

கணித மேதை ஶ்ரீநிவாச ராமானுஜன் 135 ஆம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

ஜி.கோபாலகிருஷ்ணன்

இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் ஒப்பற்ற கணிதமேதையாகத் திகழ்ந்த இந்திய கணித மேதை ஶ்ரீநிவாச ராமானுஜன் பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர். 22-12-1887இல் ஈரோட்டில் ஶ்ரீநிவாசர், கோமளம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். அவரது தந்தையார் கும்பகோணத்தில் ஒரு துணிக்கடையில் குமாஸ்தாவாக பணியாற்றியதால் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் தொடக்க கல்வியும், சிறப்பு பெற்ற கும்பகோணம் டவுன் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் பயின்றார்.

கோவில் மண்டபச் சுவர்களில் சாக்பீசைக் கொண்டு பல கணக்குகளை போட்டு அதற்கு விடைகளையும் எழுதிப் பார்ப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார் ராமானுஜன். விடைகள் கிடைக்காத கணக்குகளுக்கு தூங்குவதற்கு முன் படுத்தபடியே விடைகள் கண்டுபிடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

பொ.ஆ.1909 இல் ஜானகியை கரம்பிடித்த ராமானுஜன் சென்னை துறைமுக அலுவலகத்தில் குமாஸ்தாவாக மாதம் ₹20 சம்பளத்தில் சேர்ந்தார்.
கணிதப் பயிற்சி செய்வதை அப்போதும் அவர் நிறுத்தவில்லை.

பெர்னோலியன் எண்கள் பற்றிய அவரது சிறப்பு கட்டுரையை பொ.ஆ.1911 ஆம் வருடம் இந்திய கணித சங்கம் வெளியிட்டு பெருமைப்படுத்தியது. அக்கட்டுரையை ஆங்கிலேயர் ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தார். அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சூத்திரங்களும் குறிப்புகளும் பல்கலைப் பேராசிரியர்களை வியக்கவைத்தன. அதையடுத்து அவர் இங்கிலாந்திற்கு அழைக்கப்பட்டார். பொ.ஆ. 1914 இல் ராமானுஜன் இங்கிலாந்து சென்றார். அவருடைய கணிதத் திறமையை அறிந்த இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்து சிறப்பு செய்தது. கேம்ப்ரிடஜ் பல்கலைக்கழகமும் பெலோஷிப் பதவியளித்து கௌரவித்தது. 1918இல் எப்.ஆர்.எஸ்.பட்டமும் அவருக்கு கிடைத்தது.

உடல்நிலை சரியில்லாததால் பொ.ஆ. 1919 இல் இந்தியா திரும்பினார். சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் ஏப்ரல் 26,பொ.ஆ.1920 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இந்த வையகம் உள்ளவரை அவரது கணித சூத்திரங்களின் பயன்பாட்டினால் அவர் புகழ் ஓங்கி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ராமானுஜன் எண் 1729 இன் சிறப்புகள்:

ஒருமுறை இங்கிலாந்து பேராசிரியர் ஹார்டியுடன் அவரது காரில் ராமானுஜன் பயணம் செய்யும் போது தனது கார் எண் 1729 ஐ மிக மோசமான எண் என பேராசிரியர் கூற உடனே நம் கணிதமேதை இடைமறித்து கீழ்க்கண்டவாறு கூறி வியப்பில் ஆழ்த்தினாராம்.

1. இவ்வெண்ணை இரு எண்களின் கணங்களின் கூடுதலாக இரு வெவ்வேறு வழிகளில் எழுதமுடியும்.

1^3 +12^3 = 1 + 1728 = 1729
9^3 + 10^3 = 729 + 1000 = 1729.

2. 1729இல் இலக்கங்களாக இருக்கும் எண்களின் சிறப்பாவது :

1 - பகு எண்ணும் அல்ல. பகா எண்ணும் அல்ல.
2 - முதல் பகா எண். மேலும் ஒரே இரட்டைப்படை பகா எண்ணாகும்.
7 - பகா எண்.
9 - பகு எண். வர்க்க எண்ணும்கூட (3^2=9).

3. 17, 29 என இரண்டு ஈரிலிக்க பகா எண்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 1729 ஒரு பகு எண்ணாகும்.

4. 1729 = 7 × 13 × 19 ஆகிய மூன்று பகா எண்களின் பெருக்கற்பலனே 1729.

5. 1, 2, 7 மற்றும் 9 ஆகிய 4 இலக்கங்களைக் கொண்டு பயன்படுத்திய இலக்கத்தை பயன்படுத்தாமல் உருவாக்கப்படும் நான்கிலக்க எண்களின் எண்ணிக்கை 4*3*2*1! = 24. அவ்வாறு உருவாக்கப்படும் நான்கிலக்க எண்களில் 2197 என்ற எண் 13இன் கணமாகும். இதே போன்று 7921 என்ற எண் 89இன் வர்க்கமாகும். இங்கு 13 மற்றும் 89 வும் பகா எண்களே

இவற்றால் 1729 என்னும் எண் ராமானுஜன் எண் என்றே அழைக்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் ஶ்ரீநிவாஸ ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்
2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘ராமானுஜன்’ திரைப்படத்தை ஞான ராஜசேகரன் எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்திய அரசால் 1972 ஆம் வருடம் சென்னை நகரில் கணிதமேதை ராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. மேலும் ராமானுஜம் உருவம் பொறித்த தபால் தலைகளை வெளியிட்டு அவரை இந்திய அரசு கௌரவித்தது.

2012இல் ராமானுஜனின் பிறந்தநாளான டிசம்பர் 22ஐ தேசிய கணித நாளாக இந்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணிதநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. .

4000க்கு மேற்பட்ட கணித சூத்திரங்களை கணித உலகிற்கு அளித்த நம் நாட்டு கணிதமேதையின் 135ஆம் பிறந்தநாளான இன்று (22-12-2022)அவருடைய அளப்பரிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துவோம்.

கட்டுரையாளர் - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x