Last Updated : 12 Dec, 2016 11:37 AM

 

Published : 12 Dec 2016 11:37 AM
Last Updated : 12 Dec 2016 11:37 AM

குறள் இனிது: போகப் போகத் தெரியும்!

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்

(குறள்: 514)

இந்த ஆண்டு காரக்பூரில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் பட்டம் பெற விருக்கும் ஒரு மாணவருக்கு கிடைக்க விருக்கும் அதிகபட்ச சம்பளம் என்ன தெரியுமா? வருடத்திற்கு ரூ1.54 கோடி! அவருக்கென்ன 22 வயது இருக்கலாம். அதிபுத்திசாலியாகத் தான் இருக்கணும். ஆனால் இப்படிக் கொட்டி கொடுப்பதற்கு முன்னால் சல்லடை போட்டு சலிச்சிருப்பாங்கள்ல?

முப்படைகளுக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்வதில் நேர்முகத் தேர்வின் பங்கைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘கொடுக்கப்படும் குறிப்பிட்ட அப்பணிக்கு அவர் பொருத்தமானவரா என்பதைச் சோதிப்பதற்காக’ என்பார்கள்! எனவே நம்ம ஆள் அவர்களிடம் தமது திட்டங்களைச் சொல்லி அசத்தியிருக்க வேண்டும்! இல்லாவிட்டால் முன் அனுபவம் இல்லாதவருக்கு, முன்னைப்பின்னைத் தெரியாதவருக்கு எப்படிங்க இவ்வளவு சம்பளம் கொடுக்க சம்மதிப்பாங்க? அது சரி, இப்படி பெரிய எதிர்ப்பார்ப்புகளோடு எல்லாம் ஆளை எடுத்த பின்பு கூலிக்கேற்ற வேலை நடக்குதான்னு பார்ப்பாங்கள்ல?

எல்லோருமே எதிர்பார்த்த அளவு பணி செய்திடுவாங்கன்னு சொல்ல முடியாதே! ‘வேலைக்கு ஆள் எடுப்பது என்பது கடினமானது. அது வைக்கோல் போரில் ஊசிசைத் தேடுவது போன்றது. ஒரு மணி நேர நேர்காணலில் போதுமான அளவு தெரிந்து கொண்டுவிட முடியாது. கடைசியில் ஏதோ உள்ளுணர்வு சொல்வதை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டியதாகிறது...' என்று அங்கலாய்த்தவர் யார் தெரியுமா? ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ்!

இதுதாங்க நிதர்சனமான உண்மை. புதிதாய்ப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பொழுதும் மட்டுமில்லைங்க, தம் நிறுவனத்தில் 10, 20 ஆண்டுகள் பணி செய்தவருக்கு பதவி உயர்வு கொடுக்கும் பொழுதும் இதே கதை தான்! இதுவரை திறமையாகவும் நேர்மையாகவும் பணி புரிந்துள்ளார் என்பதற்காகப் புதிய பெரிய பொறுப்புக்களைக் கொடுத்துவிட்டு ஏமாற்ற மடைவோர் பலர்! ‘ஒவ்வொருவரும் தம் பணியில் தம்முடைய திறமைக்கு மேற்பட்ட நிலை வரையே உயர்கின்றனர்’ எனும் பீட்டரின் கோட்பாடு (Peters Principle) ஓர் நடைமுறை உண்மையல்லவா? இதற்கு முதற்காரணம், தேர்வுமுறைகளின், தேர்வாளர்களின் வரம்புகள்.

அடுத்த காரணம் பதவி தரும் அதிகாரம், போதை! பயோடேட்டாவை ஆராய்ந்து, தொலைபேசியில் சில முறை பேசிப் பார்த்து, தொழில்நுட்பப் பரிட்சை வைத்து, நேர்முகத் தேர்வும், மன நிலை குறித்த (stress test) தேர்வுகளும் நடத்தியிருந்தாலும், நாற்காலியில் உட்கார்ந்த பின் அவர் என்ன செய்வார் என்பது வெறும் ஊகம் தானே? அதனால் தானே இந்த பயிற்சி பணி காலம் (probationary period). பாரத ஸ்டேட் வங்கியின் விளம்பரத்தைப் பாருங்கள் அவர்கள் கோருவது அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்களை அல்ல, பயிற்சி பணி கால அதிகாரிகளுக்காகத்தான்! குறிப்பிட்ட ஒரு வருடத்தில் ஆள் தேறுவாரா எனப் பார்ப்பார்கள்.

சரியில்லை என்றால் பயிற்சி காலத்தை நீட்டிப்பார்கள். அல்லது வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அண்ணே, எங்குமே கடிவாளத்தைக் கையில் வைத்துக் கொள்வது நல்லதில்லையா? பலவகைகளாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், பணியில் அமர்த்தப்பட்ட பின்னர் செயல்பாட்டில் மாறிவிடுபவர்கள் பலர் என்கிறது குறள்.

-somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x