Last Updated : 25 Jun, 2014 01:33 PM

 

Published : 25 Jun 2014 01:33 PM
Last Updated : 25 Jun 2014 01:33 PM

நிலா டீச்சர் வீட்டில்: மண் பானையும் ஜில் தண்ணீரும்

கோடை வெயில் இன்னும் குறைந்தபாடில்லை. கடைக்குச் சென்று வந்த அப்பா களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

“கவின்! குடிக்க தண்ணி கொண்டு வா” என்று குரல் கொடுத்தார்.

சில்வர் குடத்தில் இருந்த தண்ணியை எடுக்கச் சென்றான் கவின்.

“கவின்! அந்த தண்ணி வேண்டாம். மண்பானையிலிருந்து எடுத்துட்டு வா” என்றார் அப்பா.

கவின் கொண்டு வந்து கொடுத்த ஜில் தண்ணியை குடித்தப் பிறகு, களைப்பு குறைந்தது அப்பாவுக்கு.

“அப்பா! ஏன் குடத்து தண்ணி வேண்டாம்னு சொன்னீங்க?” என்று கேட்டாள் ரஞ்சனி.

“ இந்த வெயிலுக்கு மண்பானையில உள்ள ஜில் தண்ணிய குடிச்சாதான் பிடிக்குது. குடத்துத் தண்ணிய குடிச்சா, தண்ணி குடிச்ச மாதிரியே இல்ல” என்றார் அப்பா.

“அப்பா! குடத்து தண்ணியவிட மண்பானையில இருக்குற தண்ணி ஜில்லுன்னு இருப்பது எப்படி?” என்று கேட்டான் கவின்.

“இதோ, உங்க அம்மா வந்துட்டாங்க. இந்த கேள்வியை எல்லாம் அவங்ககிட்ட கேட்டுக்கோங்க” என்று கூறி நழுவினார் அப்பா.

“என்ன கவின், என்ன சந்தேகம்?” என்று கேட்டபடியே வந்தார் நிலா டீச்சர்.

“மண்பானை தண்ணி மட்டும் ஜில்லுனு இருக்குதே. அது எப்படி?” என்று கேட்டான் கவின்.

“மண்பானையிலிருந்து எனக்கு ஒரு டம்ளர் தண்ணி எடுத்துட்டு வா. உன் கேள்விக்கு பதில் சொல்றேன்” என்றார் நிலா டீச்சர்.

கவின் கொண்டு வந்து கொடுத்த ஜில் தண்ணீரை குடித்த பின், பதில் சொல்லத் தொடங்கினார் நிலா டீச்சர்.

“மண்பானைல ஏராளமான நுண்துளைகள் இருக்கு. அந்த நுண்துளைகள் வழியே கொஞ்சம் தண்ணி வெளியேறி ஆவியாகிக்கிட்டே இருக்கும். அப்படி ஆவியாகத் தேவையான வெப்பத்தை பானைக்குள் இருக்குற தண்ணிலேர்ந்து எடுத்துக்கும். இதனால மண்பானைல இருக்குற நீரின் வெப்ப அளவு குறைஞ்சிடுது. அதனால மண்பானைல ஊத்துன தண்ணி கொஞ்ச நேரத்துல ஜில்லுனு ஆயிடுது” என்றார் நிலா டீச்சர்.

“அப்படியா... ஆமா, தண்ணிய கொதிக்க வெச்சு அது 100 டிகிரி செல்சியஸை அடையுறப்பதானே ஆவியாகும். மண்பானையில் இருக்குற தண்ணி, அப்படி காய்ச்சாமலேயே எப்படி ஆவியாகும்?” என்றாள் ரஞ்சனி.

“குட். நல்ல கேள்வி கேட்ட ரஞ்சனி. உன் சந்தேகம் தீரணும்னா என்னோட கேள்விக்கு நீ முதல்ல பதில் சொல்லு. தண்ணில துவைச்ச துணியை காய வைக்கிறோம். ஈரமா உள்ள துணி எப்படி காயுது?" என்று கேட்டார் நிலா டீச்சர்.

கவினும் ரஞ்சனியும் முழித்தனர்.

“சரி.. சரி.. நானே சொல்றேன்” என்ற நிலா டீச்சர், காரணத்தை விளக்கினார்.

“தண்ணியோட கொதிநிலை 100 டிகிரி செல்சியஸை அடையறப்ப ஆவியாவது உண்மைதான். ஆனால், சாதாரண வெப்பநிலையிலும் நீர் ஆவியாகிட்டுதானே இருக்கு. கடல், ஆறு, ஏரி, குளங்களோட மேல்மட்டத்துல உள்ள தண்ணி சாதாரண வெப்பநிலையில், அதன் அளவுக்கு ஏற்ப தொடர்ந்து ஆவியாகிட்டே இருக்கும். அதனாலதான் நமக்கு மழை கிடைக்குது இல்லையா?

அதே தண்ணியை பாத்திரத்துல ஊத்தி கொதிக்க வைச்சா தண்ணியோட வெப்ப நிலை உயரும்போது, ரொம்ப வேகமா ஆவியாகும். சாதாரண வெப்பநிலைல அதே ஆவியாதல் மெதுவா நடந்துகிட்டே இருக்கும்.

இப்படி சாதாரண வெப்ப நிலைல எப்போதும் ஆவியாதல் நடக்கிறதாலதான் துவைச்சுப் போடுற ஈரத் துணிகளும் காய்கின்றன. கை, கால்களை கழுவிய பின்னாடி துடைக்காவிட்டாலும்கூட கொஞ்ச நேரத்துல கை, கால்கள் உலர்ந்து போவதற்கும் இதுதான் காரணம்.

அதேபோலத்தான் மண்பானைல உள்ள நுண்துளைகளின் வழியா சின்ன அளவுல தண்ணி வெளியேறி, ஆவியாகிட்டே இருக்கும். அப்படி ஆவியாகத் தேவைப்படற வெப்பத்தை பானையில் உள்ள தண்ணிலேர்ந்து எடுத்துக்கிறதால, மண்பானை தண்ணி ஜில்லுன்னு இருக்கு” என்று சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.

“ஆஹா! நம்ம கண்ணுக்கு தெரியாம நடக்கும் ஆவியாதல்ல இத்தனை அற்புதங்களா?” என்று தன் வியப்பை வெளிப்படுத்தினாள் ரஞ்சனி.

மண்பானை தண்ணி ஜில்லுனு இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட திருப்தியோடு, அதிலிருந்து தண்ணியை எடுத்து மடக் மடக்கென்று குடித்தான் கவின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x