Published : 29 Jan 2022 12:10 PM
Last Updated : 29 Jan 2022 12:10 PM

2021 மருத்துவ நூல்கள்

தொகுப்பு: நிஷா

போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை
l டாக்டர் சட்வா, நிகர்மொழி பதிப்பகம், தொடர்புக்கு: 8428455455

இயற்கை படைத்ததை இயற்கை காக்குமா? உடல் தானாகவே நோய்களைச் சரிசெய்துகொள்ளுமா? தடுப்பூசிகள் இல்லுமினாட்டிகளின் சதி என்று நம்புகிறீர்களா? இறைச்சி உணவு மனிதனுக்கு ஏன் அவசியம்? அறிவியலையும் போலி அறிவியலையும் எப்படிப் பிரித்தறிவது? பொதுச் சுகாதாரம் சந்தைமயம் ஆவதை அனுமதிக்க இயலுமா என்பது போன்ற மருத்துவம், மாற்று மருத்துவம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, அறிவியல் மூலம் விடை தேட முயலும் புத்தகம். அறிவியலுக்கு முரணான மாற்று மருத்துவ முறைகளின் மோசடி குறித்துத் தெளிவான புரிதலைத் தருகிறது. கரோனா குறித்தும், தடுப்பூசி குறித்தும் பெரும் மூடநம்பிக்கைகள் பரவிவரும் இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு அவசியம் தேவைப்படும் நூல் இது.

உயிரற்ற உயிர்
l டாக்டர் சுதா சேஷய்யன், வானதி பதிப்பகம்,தொடர்புக்கு: 9444126523.

கோவிட் 19 வைரஸ் குறித்து மட்டுமல்ல; உலகைத் தாக்கிய வைரஸ் வகைகள் குறித்துச் சாமானிய வாசகர்களுக்கும் புரியும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது. ‘வைரஸ்’ என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது, அதன் உயிர் ரகசியம் என்ன, அதைத் தெரிந்துகொள்வதற்காகத் தங்கள் உயிரையும் இழந்த மருத்துவர்கள், கொள்ளைத் தொற்றுநோய்களின் வரலாறு, பாதிப்புகள், அவை பரவும் விதம், அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் போன்றவை சிக்கலற்ற மொழியில் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளரவிடுங்கள்
l எஸ்.குருபாதம், என்.சி.பி.எச் வெளியீடு, தொடர்புக்கு: 044 - 26251968.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. குழந்தை வளர்ப்பில், அனுபவ அறிவின் போதாமைகளையும், அறிவியல் அறிவின் தேவையையும் உணர்த்தி, இன்றைய தலைமுறை குழந்தைகளைக் கையாளுவதற்குத் தேவைப்படும் உத்திகளை இந்தப் புத்தகம் நமக்குக் கடத்துகிறது. குழந்தைகளின் இயல்பறிந்து பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்,குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்,அவர்களின் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டும்,குழந்தைகளை எப்படிச் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்பது போன்றவை இதில் விளக்கப்பட்டுள்ளன.

இதுதான் வைரஸ்
l ஹேமபிரபா, பாரதி புத்தகாலயம்; தொடர்புக்கு: 044 – 24332924

உலகின் எங்கோ ஒரு மூலையில் வைரஸ் ஒன்று உருவாகி, சரசரவென பரவி, உலகை ஒட்டு மொத்தமாக முடக்கியபோதுதான்வைரஸின் திகில் முகம் நம் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் கரோனா குறித்த ஆய்வுகளின் வழியே வைரஸின் தன்மையைப் பேசுபவை. கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வைரஸ் தொற்றினால்தான் இன்று பாலூட்டிகளிடமும் மனிதரிடமும் உள்ள தாய்-சேய் இணைப்புத் திசு உருவானது, எத்தனையோ வைரஸ்கள் இருக் கின்றன. ஆனால், கரோனா வைரஸ் மட்டும் உலகம் முழுக்க எப்படிப் பரவியது என்னும் கேள்விக்கான பதில் இத்தொகுப்பில் இருக்கிறது.

வைத்தியர் அயோத்திதாசர்
l ஸ்டாலின் ராஜாங்கம், நீலம் பதிப்பகம், தொடர்புக்கு: 6369825175

சித்த வைத்தியம் மனித உடலில் நோயைத் தீர்ப்பதைத் தாண்டி முறையியலாகவும் பார்க்க முடியும். அம்முறையிலை வைத்து பண்டிதர் அயோத்திதாசர் பல்வேறு வைத்தியக் குறிப்புகளை எழுதி இருக்கிறார். இங்கு எவையும் தனித்தனியாக இருப்பதில்லை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவையாகவே இருக்கின்றன. இந்தப் புரிதலிலிருந்து பௌத்தமும் தமிழும் மட்டுமல்ல; வைத்தியமும்கூட இவற்றோடு பிணைந்தவையாக இருக்கின்றன என்கிற சமூகப் பண்பாட்டுக் கதையாடல் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

இதுதான் வைரஸ்
l ஹேமபிரபா, பாரதி புத்தகாலயம்; தொடர்புக்கு: 044 – 24332924

உலகின் எங்கோ ஒரு மூலையில் வைரஸ் ஒன்று உருவாகி, சரசரவென பரவி, உலகை ஒட்டு மொத்தமாக முடக்கியபோதுதான்வைரஸின் திகில் முகம் நம் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் கரோனா குறித்த ஆய்வுகளின் வழியே வைரஸின் தன்மையைப் பேசுபவை. கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வைரஸ் தொற்றினால்தான் இன்று பாலூட்டிகளிடமும் மனிதரிடமும் உள்ள தாய்-சேய் இணைப்புத் திசு உருவானது, எத்தனையோ வைரஸ்கள் இருக் கின்றன. ஆனால், கரோனா வைரஸ் மட்டும் உலகம் முழுக்க எப்படிப் பரவியது என்னும் கேள்விக்கான பதில் இத்தொகுப்பில் இருக்கிறது.

அஞ்சறைப் பெட்டி
l வி.விக்ரம் குமார், விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044 - 42139697

அஞ்சறைப் பெட்டியை அலங்கரிக்கும் நறுமணப் பொருள்கள் நம் ஆரோக்கியத்தை எப்படிக் காக்கின்றன, அவற்றின் மருத்துவக் குணங்கள் நம் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியமாகத் திகழ்கின்றன என்பதை விளக்கும் நூல். ‘சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, ‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ என்பது போன்ற முதுமொழிகள் மூலம் அஞ்சறைப் பெட்டிப் பொருள்களின் முக்கியத்துவத்தை அலுப்பூட்டாத எளிய மொழியில் உணர்த்தியுள்ளார்.

கேள்வி பதிலில் முதியோர் நல மருத்துவம்
l டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல அறக்கட்டளை, தொடர்புக்கு: 044-26412030

முதுமையை எப்படி எதிர்கொள்வது, அதன் துயர்களை எப்படிக் களைவது, அதன் சிக்கல்களை எப்படித் தீர்ப்பது, அன்றாடப் பிரச்சினைகளில் தொலைந்த மகிழ்ச்சியை எப்படி மீட்பது என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டு இருக்கும் புத்தகம் இது. எளிய கேள்வி-பதில் வடிவிலான இந்தப் புத்தகத்தின் மூலம், முதியவர்களின் சந்தேகங்களை நூலாசிரியர் தீர்த்துவைத்திருக்கிறார்.

பேசும் காச்சக்கார அம்மன்
l டாக்டர் இடங்கர் பாவலன், பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 – 24332424

பெரியம்மை, காலரா, மலேரியா போன்றவற்றி லிருந்து விடுதலை தரும் தெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்மன்களை நாட்டுப்புற உழைக்கும் மக்கள் படைத்தனர். இப்படிக் கரிசல் காட்டின் மானாவாரி மனிதர்கள் படைத்த தெய்வமே காச்சக்கார அம்மன். இந்த அம்மனை முன்வைத்துக் காய்ச்சல் குறித்து எளிய மக்களின் மனங்களில் படிந்திருக்கும் நம்பிக்கைகள், நடைமுறைகள் போன்றவற்றை அறிவியல்பூர்வ பார்வையுடன் விமர்சிக்கிறார் மருத்துவர் இடங்கர் பாவலன். மருத்துவக் குறிப்புகளும், பண்பாட்டு அசைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கலந்த சுவையான நடையில் எழுதப்பட்டுள்ளது.

கரோனாவை வெற்றி கொள்வோம்
l டாக்டர் கணேசன், இந்து தமிழ் திசை, தொடர்புக்கு: 7401296562

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழியாக மூத்த மருத்துவரும் எழுத்தாளருமான கு.கணேசன், கரோனா வைரஸ் குறித்து எழுதிய 51 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தொற்றின் அத்தனை அம்சங்களையும் இந்த நூலில் அலசியுள்ளார். கரோனா குறித்த அனைத்துச் சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தெளிவாகவும் முழுமையாகவும் பதில் இருக்கிறது. அந்தப் பதில்களைப் புரியும் விதத்தில், எளிய தமிழில் விளக்கியிருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. பெருந்தொற்றுக் காலத்தில், கரோனாவைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையோடு வாழ வழிகாட்டும் கையேடு இது.

சில தருணங்களும் சில நிகழ்வுகளும்
l டாக்டர் கல்யாணி நித்யானந்தன், இந்து தமிழ் திசை, தொடர்புக்கு: 7401329402

மூத்தோரது அனுபவங்களில் பல நமக்குப் புதிய பாதைகளை அறிமுகப் படுத்தும். எண்பது வயதைக் கடந்த இதய நோய் நிபுணர் கல்யாணி நித்யானந்தனின் அனுபவங்களும் அதைத்தான் செய்கின்றன. பால்ய கால நினைவுகள் தொடங்கி, கல்லூரிக் காலம், மருத்துவப் பணி, மறக்க முடியாத மனிதர்கள், வெளிநாட்டுப் பயணம், மருத்துவ ஆலோசனைகள், முதியோர் நலன் என்று வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் சுவைபட அவர் விவரித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x