Published : 30 Jun 2014 10:18 AM
Last Updated : 30 Jun 2014 10:18 AM

கல்வெட்டுகளை ஆராய ஒரு படிப்பு

வரலாற்றுத் தகவல் களையும், தொன்மை யையும் படித்து அறிந்துகொள்வது ஒரு சுவாரசியமான அனுபவம். அவற்றை அறிய புத்தகங்களுடன் நின்றுவிடாமல் ஆவணங்களாகத் திகழும் கல்வெட்டுகள், அகழாய்வு பகுதிகள் போன்றவற்றை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்வது சுவாரசியத்தை அதிகரிக்கும். கல்வெட்டு ஆராய்ச்சி என்பது பாறைகள், தூண்கள், ஆலய சுவர்கள், செப்புத்தகடுகள் போன்றவற்றில் பதிவுசெய்யப்பட்ட எழுத்துக்கள், சித்திரங்கள், குறியீடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்வது ஆகும்.

கல்வெட்டு ஆராய்ச்சிப் படிப்பு

தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Institute of Epigraphy) கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வில் முதுகலை டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Epigraphy, Archaeology, Excavation) வழங்கி வருகிறது. பாரம்பரியமிக்க இக்கல்வி நிறுவனம் சென்னை எழும்பூரில் (குழந்தைகள் மருத்துவமனை அருகில்) தமிழ் வளர்ச்சி வளாகத்தில் இயங்கி வருகிறது.

ஓராண்டு காலம் கொண்ட இந்தக் கல்வெட்டு ஆராய்ச்சி டிப்ளமா படிப்பு 1973-ம் ஆண்டு முதலே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால் படிப்பு இலவசம். அத்துடன் மாதந்தோறும் பயிற்சி உதவித்தொகையும் வழங்கப்படும். முன்பு ரூ.1,000 ஆக இருந்த உதவித்தொகை இப்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் ஆகிய பாடங்களில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். அரசுப் பணியாளராக இருந்தால் பி.ஏ. பட்டம் போதும். தியரிக்கு மட்டுமின்றி களப்பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் வரலாற்றுச்சிறப்பும் புராதன முக்கியத்துவமும் வாய்ந்த இடங்களுக்குச் சென்று ஆய்வில் ஈடுபடலாம்.

கல்வெட்டு ஆராய்ச்சி டிப்ளமா படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வெழுதி அரசு அருங்காட்சியங்களில் தொல்லியல் அதிகாரி (Archaeology Officer) ஆகலாம்.

விண்ணப்பித்தல்

இந்த ஆண்டுக்கான கல்வெட்டு ஆராய்ச்சிப் படிப்புக்குத் தொல்லியல் துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சேர விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பத்தைத் தயார்செய்து “ஆணையர், தொல்லியல்துறை, தமிழ்வளர்ச்சி வளாகம், ஆல்ஸ் சாலை, எழும்பூர், சென்னை-8” என்ற முகவரிக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தவிர tnarch@tn.nic.in மற்றும் archcommissioner@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பலாம். பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x