Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

நலம்தானா 19: நீரிழிவு ஒரு வணிக நோயா?

நோயாளியின் ரத்த சர்க்கரை அளவை அறியச் சாப்பிடும் முன், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின், HbA1C ஆகியவற்றுடன் (OGTT) என்கிற பரிசோதனை செய்யப்பட்டு நீரிழிவு உறுதிப்படுத்தப்படுகிறது.

நோய் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து உங்களுக்குச் சர்க்கரை வந்துவிட்டது என்று நினைப்பீர்கள். ஆனால், அது ஏற்கெனவே வந்திருக்கலாம். எனவே, அதிக ரத்த சர்க்கரை உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும் என்பதால், கண்களைப் பரிசோதிக்க மருத்துவர் பரிந்துரைப்பார்.

சிறுநீரகம், இதயம், நரம்பு, ரத்த நாளங்கள் தொடங்கி அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள பல்வேறு பரிசோதனைகளுக்கும் ஸ்கேன் செய்வதற்கும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

அடுத்து சர்க்கரை மிகுதியாக இருந்தால் உணவு, உடற்பயிற்சி போதாது என்று மருந்து எழுதிக்கொடுப்பார். அவற்றைத் தொடர்ந்து சாப்பிட வேண்டி இருக்கும். இதெல்லாம் சர்க்கரை நோயைக் கண்டறிந்தவுடன் ஏற்படும் செலவுகள். இன்சுலின் தேவைப்பட்டால் மேலும் செலவாகும்.

அடுத்த கட்ட செலவு

அடுத்து அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்படுகிறதா என்பதைக் கண்டறியவும் பரிசோதனை அவசியம்.

சிலருக்கு எந்த வகை சர்க்கரை நோய் என்பது தெரியாது. அதைக் கண்டறிந்தால் சரியாகச் சிகிச்சை அளிக்க முடியும். எனவே, இதற்கென பிரத்தியேக பரிசோதனைகள், மரபணு பரிசோதனைகள் செய்ய வேண்டியது வரும்.

நீரிழிவு பல்வேறு காரணங்களால் கட்டுப்படாமல்போனால், அது அமிலத்தன்மையை அதிகரித்து (DKA) உடலை மோசமான பாதிப்புக்கு இட்டுச்செல்லலாம்.

திடீரென சர்க்கரை குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனாலும் நோயாளி பாதிக்கப்படலாம். இந்த இரண்டுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்படலாம்.

கூடுதல் நோய்கள்

சர்க்கரை நோயுடன், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எனப் பல்வேறு பிரச்சினைகளும் பலருக்கும் சேர்ந்தே இருக்கலாம். ஆக, அவற்றுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாமல் போகும்போது, அடிக்கடி தொற்றுகள் ஏற்பட்டு ஆண் உறுப்பில் தோல் நீக்கம் தொடங்கிப் பல மேம்பட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம்.

நரம்பு, ரத்த நாள பாதிப்புகளால் கால் பாதிக்கப்பட்டுக் கால் விரலை, ஏன் காலையே அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

இதயம் பாதிக்கப்பட்டு பைபாஸ் செய்ய வேண்டிய நிலை வரை போகலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரலாம். இப்படி உண்டாகும் ஒவ்வொரு பாதிப்புக்கும் பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் அதிக செலவாகும்.

உண்மை என்ன?

வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவு 100 மி.கி.க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்ட இரண்டுமணி நேரத்தில் 140 மி.கி.க்குள் இருக்க வேண்டும். இப்படி அளவு நிர்ணயிக்கப்பட்டதன் மூலம் நிறையச் சர்க்கரை நோயாளிகளை நவீன மருத்துவர்களே உருவாக்கிவிட்டார்கள் என்று பலரும் குற்றம் சாட்டுவது உண்டு.

அது என்ன அளவு? கொஞ்சம் முன்னே பின்னே இருந்தால் என்ன என்று சிலருக்குக் கேள்வி வரலாம்? ஆனால், மேற்கூறிய அளவிலிருந்தால்தான் உடலிலுள்ள செல்களும் உறுப்புகளும் ஆரோக்கியமாகச் செயல்பட முடியும்.

இந்த அளவைவிட ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும்போது, செல்கள் நலிவடைந்து உறுப்பு பாதிக்கப்பட்டுவிடும். ரத்த சர்க்கரை கட்டுப்பாடு இல்லாமல் போகும்போதுதான் பல்வேறு பிரச்சினைகளும் வரிசைகட்டி வருகின்றன. இன்றைக்கு கரோனோ தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருபவர்களும் நீரிழிவு நோயாளிகள்தாம்!

அதற்காகத்தான் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தச் சொல்லி நவீன மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சர்க்கரை நோயைக் கண்டறிய, சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் செலவு குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள‘மக்களைத் தேடி மருத்துவம்’எனும் புதிய திட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x