Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

சூபி தரிசனம்: இசை தந்த இதம்

நஜ்மூதின் குப்ரா, சூபி ஞானி செய்க் அவர்களைத் தனது சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக தேடி அலைந்துகொண்டிருந்தார். இஸ்லாம் தொடர்பிலான முழுமையான கல்வியைப் பெற்றிருந்தார். அப்படியான ஒரு பயணத்தில் அவர் ஒரு நகரத்துக்கு வந்துசேர்ந்தார். அங்கே அவர் முற்றிலும் அந்நியராக இருந்ததால் யாரும் அவரை அன்புடன் வரவேற்கவில்லை. உடல் களைத்து நலிவுற்றும் இருந்ததால் எங்காவது தலைசாய்ந்து இளைப்பாற வேண்டுமென்றிருந்தது.

நகரத்தில் சூபி துறவிகள் கூடும் இல்லத்தில் தங்கிக்கொள்ளலாம் என்ற தகவல் கிடைத்தது. அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தார். அன்று மாலை அவர் தங்கியிருந்த இல்லத்தின் கூடத்தில் சூபி இசைவாணர்கள் கூடிப் பாடத் தொடங்கினர். அவருக்கு வந்த உடல்நலக் குறைபாட்டைவிடவும் அந்த இசை கூடுதலான தொந்தரவை அளித்தது.

அந்த இடத்தில் திடீரென்று அவர் தேடிக்கொண்டிருந்த செய்க் நுழைந்தார். இசை நிகழ்ச்சிக்கு வாரும் என்று நஜ்முதீனை அழைத்தார். ஞானி செய்க்கிடம் தனது வேறுபாட்டை முதலிலேயே வெளிப்படுத்தாமல் ‘சாமா’ நடக்கும் இடத்துக்குப் போனார்.

அங்குள்ள சுவரில் சாய்ந்து இசையைக் கேட்கத் தொடங்கினார். இசையை மனத்திலிருந்த கண்டனத்தைத் துறந்து கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் உடலில் இதம் தொடங்குவதை உணர்ந்தார். அடுத்த நாள் சூபி ஞானி செய்க்கிடம் ஆசிர்வாதம் பெற்று ஞானத்தின் பாதைக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மூரித் ஆனார்.

இதயம் என்பது

அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு படைப்பு உண்டு

அதை அறி, போ

இதயம் என்பது தற்காலிகமான விடுதி

அங்கிருந்து கிளம்பு, வா

ஆன்மாதான் இறுதி அடைக்கலம், அதை அறி, போய்க்கொண்டே இரு.

காத்திருக்கும் இன்னொரு வேலை

ஒவ்வொரு நாளும் என் இதயம் இன்னொரு சுமையைத் தூக்கிச் சுமக்கிறது

பிரிந்திருத்தலின் நிமித்தம் எனது கண்ணில் இன்னொரு முள்

நான் அலைக்கழிகிறேன், ஆனால் விதியோ அரற்றிக்கொண்டேயிருக்கிறது

‘உனக்கு எது போதுமானதோ அதற்கும் அப்பால், இன்னொரு வேலை காத்திருக்கிறது.’

அல்லாஹ்வின் நேசம்

அஜ்மீர் நகரத்துடன் அறியப்பட்ட ஞானியான க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி தன் வாழ்நாளில் பெரும்பகுதியை யார் கண்களுக்கும் தென்படாமலேயே கழித்தவர். அவர் அகத்தில் அடைந்த முக்திநிலைகளை யாராவது தெரிந்துகொண்டால் அங்கிருந்து உடனடியாக இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்துவிடுவார். ஒரு நாள் அவருக்கு இந்தியா செல்வதற்கு ஆணை வந்தது. அவரும் இறைக்கட்டளையை ஏற்று அஜ்மீர் வந்தார். அஜ்மீரில்தான் அவர் எல்லா மக்களுக்கும் அறியப்பட்டவர் ஆனார். அவர் மரணத்துக்குப் பிறகு அவரது நெற்றியில் இந்த வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அல்லாவின் நேசத்துக்குரியவன் அவன்

அல்லாவின் நேசத்துக்காக இறந்தான் அவன்.

- சிக்கந்தர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x