Published : 12 Dec 2015 02:34 PM
Last Updated : 12 Dec 2015 02:34 PM

சுதேசமித்திரன், திங்கட்கிழமை

புயற்காற்று

வெள்ளிக்கிழமை; திருக்கார்த்திகை

முதலாவது குடிசைகள் வேண்டும். குடிசையில்லாமலும், பிழைப்பில்லாமலும் சில ஜனங்கள் குடியோடிப் போவதாக முத்யாலுப்பேட்டை முதலிய இடங்களிலிருந்து செய்தி கிடைக்கிறது.

சில இடங்களில் தரையோடு கிடக்கும் மரங்களை வெட்டும்போது அடியிலே மனிதவுடல் அகப்படுகிறது. வெள்ளவாரிப் பக்கத்தில் மரத்தடியில் ஒரு குழந்தையின் கால் அகப்பட்டது. உடலில் மற்றப் பகுதி காற்றிலே போய்விட்டது. முத்தியாலுப்பேட்டையிலும், மரத்தை ஏலத்தில் எடுத்தவர் வெட்டிப் பார்க்கும்போது கீழே குழந்தையுடல் கிடந்தது.

நெல்லித் தோப்பு

நெல்லித் தோப்பு என்ற கிராமம் புதுச்சேரிக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்திலிருக்கிறது. இங்கு புயற்காற்றுக்கு முன்னிருந்த வீடுகளின் தொகை சுமார் 450. இவற்றில் அடியோடே அழிந்துபோன வீடுகள் 50. சேதப்பட்டன பல. ஜனச்சேதம் 5 பேர். 3 ஸ்திரீ, ஒரு குழந்தை, ஒரு மனிதன். அனைத்துமிழந்து, நிர்க்கதியாக நிற்போரின் தொகை ஐம்பதுக்கு மேலுண்டு. கால்நடைச் சேதம் 26-க்கு மேல். பெரும்பாலும் ஒரே மிராசுதாரின் உடைமை.

அங்கிருந்து மேற்கே சுமார் ஒன்றரை மைல் தூரம் போனால், உழவர்கரைப் பறைச்சேரி என்ற கிராமம். இவ்வூரில் புயற்காற்றுக்கு முன்னிருந்த வீடுகள் சுமார் 300. இப்போது மிச்சமிருப்பது 4. மற்ற 296 வீடும் காற்றிலே போய்விட்டன. ஜனச்சேதம் 4 பேர். ஒரு மனிதன், 2 ஸ்திரீகள், ஒரு குழந்தை.

கருவடிக்குப்பத்துப் பறைச்சேரி

முத்தியாலுப்பேட்டைக்கு மேற்கே கருவடிக்குப்பம். இதை ஜனங்கள் கரடிக்குப்பம் என்று சொல்வார்கள். இங்குள்ள வீடு தொண்ணூறும். அந்தத் தொண்ணூறும் புயற்காற்றிலே அழிந்து போயின. புயற்காற்றுக்கு மறுநாள் புதுச்சேரியில் இலேசான மழை பெய்தது. அந்த மழை கருவடிக்குப்பத்தில் பலமாகப் பெய்ததாகவும், அதனால் சில கால்நடைகள் மடிந்ததாகவும் தெரிகிறது.

உபகாரம்

முத்தியாலுப் பேட்டையிலும், வேறு சில இடங்களிலும்  ஹாஜி மஹமதுஹனீப் ஸாஹீப் என்ற பட்டணத்து வியாபாரியின் தர்மங்கள் பிரபலமாக நடக்கின்றன. இவருடைய வியாபார ஸ்தலத்துக் கெதிரே (முத்யாலுப் பேட்டையில்) புயற்காற்றுக்கு மறுநாள் விடியற்காலத்தில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் பொருட்டாக மூட்டிய அடுப்பு இன்னும் அவிக்கவில்லை. வேறு பல ஜனோபகாரிகள் தத்தம்மால் இயன்ற உதவி செய்து வருகிறார்கள்.

வீடு

பள்ளத்து வீதியில் புயற்காற்றடித்தபோது ஒரு கிழவன் மரம் விழுந்து செத்துப் போனான். அவன் வீட்டைப் பார்க்கப்போனபோது வழியெல்லாம் இடிசுவர். இடிசுவர்களைத் தாண்டி அப்பாலே போனால், அங்கே அந்தக் கிழவனின் மனைவி தன்னுடைய ‘வீடு இதுதான்’ என்று காண்பித்தாள். ஒரே ஒரு சிறிய கதவும், அதன்மேலே இரண்டு தென்னை மரங்களும் விழுந்து கிடந்தன. அதுதான் வீடு. வீடே அவ்வளவுதான். மற்ற மண்பொடியெல்லாம் காற்றிலும் மழையிலும் போய்விட்டது. அந்த ஒற்றைக் கதவு மாத்திரம் தென்னை மரங்களின் பாரத்தால் பறந்து போகவில்லை.

சிறு களவு

குடிசைகள் விழுந்தவுடனே மண்பாண்டங்கள் நொறுங்கிப்போயின. எனினும் சில இடங்களில் துணி மூட்டையும் மிஞ்சியிருந்தது. அது களவு போனதாகப் பல ஏழை வீடுகளில் துலங்குகிறது! புயற்காற்று, களவை அடித்துக்கொண்டு போகவில்லை.

நெருப்பு மழை

வானத்திலிருந்து நெருப்புத் துண்டுகள் சில ஸமயங்களில் விழுமென்பது நவீன வான சாஸ்திரம் படிப்பவருக்கு நன்றாகத் தெரிந்த விஷயமே. ஸாதாரண காலங்களில் எரி நக்ஷத்திரங்களாக வந்து விழுந்து காற்றோடு கலந்து போகிற கோளங்கள், சில ஸமயங்களில் கட்டித்துண்டுகளாக மண்மேல் எரிந்துகொண்டு விழும். புயற்காற்றடித்த இரவில் அவ்விதமான நெருப்புமழை சில இடங்களில் பெய்ததாக வதந்தி யுண்டாகிறது. கூடப்பாக்கத்தில் சில மரங்கள் கரிந்து போயிருப்பதாகவும், மற்றும் சில இடங்களில் மனிதர் உடல் வெந்து போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை.

(சுதேசமித்திரன், 11 டிசம்பர் 1916, ப. 6)

நன்றி: காலச்சுவடு

புதுவையில் வீசிய புயல்

1916 நவம்பர் 22 புதுச்சேரி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள். அன்று இரவு ஒரு பெரும்புயல் வீசியது; முழுப் புதுச்சேரியையே புரட்டிப் போட்டது. அந்தப் புயலைப் பற்றிக் கவிதையிலும் உரைநடையிலும் பாரதி பதிவு செய்திருக்கிறார்.

அந்தப் புயல் வீசிய காலத்தில் எழுத்தாலும் நேரடித் தொண்டாலும் புதுவை மக்களுக்கு பாரதி ஆற்றிய பணிகளை அருகிருந்த பாரதிதாசன் இப்படிப் பின்னாளில் நினைவுகூர்ந்தார்.

‘பொழுது விடிந்தது

அலங்கோலமாகக் காட்சியளிக்கும் நகரின் தெருவெல்லாம் பாரதி,

நகரின் அருகில் அமைந்த சிற்றூரிலெல்லாம் பாரதி.

பாரதி, தாம் கண்ட காட்சிகளைப் பற்றி மக்கள் அடைந்த இன்னல்கள் பற்றிச் சுதேசமித்திரனில் எழுதித் தள்ளுகிறார்.

பாரதி கவிஞர் மட்டுமல்லர், தேசபக்தர் மட்டுமல்ல, அவர் தன்னலங்கருதாத மக்களின் தொண்டர் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.’ (பாட்டுப் பறவைகள், பக். 192, 193)

அப்புயலின் கடுமையைப் ‘புதுச்சேரியில் புயற்காற்று’ என்னும் தலைப்பில் பாரதியே சுதேசமித்திரனில் கட்டுரைகளாக எழுதினார். 27, 28, 30-11-1916 ஆகிய மூன்று இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவந்தன. (புயலையொட்டி ‘புயற்காற்று’, ‘பிழைத்த தென்னந்தோப்பு’ ஆகிய கவிதைகளையும் எழுதியிருப்பது வேறு.)

புயல் குறித்த அந்தக் கட்டுரைகளோடு அதே பொருளில் பிறிதொரு கட்டுரையும் சுதேசமித்திரன் (11-12-1916) இதழில் வெளியாகியிருந்ததைச் சமீபத்தில் என் ஆய்வில் கண்டெடுத்தேன். பாரதியின் பிறந்தநாளான டிசம்பர் 11இல் அக்கட்டுரை 1916ஆம் ஆண்டு வெளிவந்திருக்கின்றது.

- ய. மணிகண்டன், மின்னஞ்சல்: v.y.manikandan@gmail.com

(குறிப்பு: கடந்த 100 வருடங்களில் மிகப் பெரிதான கனமழையும் பெருவெள்ளமும் சென்னையை புரட்டிப்போட்டுள்ள இந்த நேரத்தில், பேராசிரியர் ய. மணிகண்டன் புதிதாகக் கண்டறிந்த பாரதியின் கட்டுரை பல வகைகளில் தற்காலத்தைப் பிரதிபலிப்பதாகவும் ஒத்துப்போவதாகவும் இருக்கிறது. ‘காலச்சுவடு’ இதழில் வெளியான பாரதியின் புதிய கட்டுரை இங்கே மீள் பிரசுரம் ஆகிறது.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x