Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

தேர்தல் களம்: பெண்கள் ஏன் அரசியல் பேச வேண்டும்?

ஜெ. தீபலட்சுமி

பெண்களிடம் இல்லாத அரசியல் அதிகாரம் ஆண்களின் கையில் இருக்கிறது. அதனால்தான், குழந்தைப்பேறு, கருக்கலைப்பு, சானிட்டரி நாப்கின்கள் மீதான வரி என்று பெண்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில்கூடச் சம்பந்தமில்லாமல் ஆண்கள் கருத்து களை அள்ளித் தெளிக்கிறார்கள், விபரீத முடிவுகளை எடுக்கி றார்கள்.

அடிப்படைப் பொதுஅறிவுகூட இல்லாமல், அனைத்தைப் பற்றியும் மித மிஞ்சிய செருக்குடன் உளறிக்கொட்டும் ஆண்களுக்கு அரசியலில் நுழைய இல்லாத தயக்கம் பெண்களுக்கு மட்டும் ஏனோ சாபம்போல் கவிந்துதான் கிடக்கிறது. ஆனால், சரியோ தவறோ, மனத்தில் பட்டதைப் பேசும் பெண்களைக் குடும்பமும் சமூகமும் பெரிதாக விரும்புவதில்லை. அதனால்தான் பெண்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்குமுன் ஒன்றுக்குப் பல தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது; தயக்கமும் தோன்றுகிறது. அதையும் மீறித் துணிச்சலோடு பொதுவாழ்வில் ஈடுபடும் எந்தப் பெண் என்றாலும் தன் தகுதியை எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. வெற்றி பெற ஓர் ஆண் போராடுவதைவிடவும் போட்டியில் இடம்பெறுவதற்கே பெண் அதிகமாகப் போராட வேண்டியிருக்கிறது.

பெண்ணுக்கே ஆளுமை அதிகம்

புறவெளி முழுதும் ‘ஆண்மய’ மாகவும் சமூகம் மொத்தமும் ‘ஆண்மைய’மாகவும் இருப்பதால் பெண் ஆளுமைகளின் முழுவீச்சை இந்தப் பிரபஞ்சம் இன்னும் உணராமலே இருக்கிறது. ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் பலவகைக் கதாபாத்திரங்களில் நடித்த மனோரமாவைப் பாராட்டும்போதும் ‘பொம்பள சிவாஜி’ என்று குறிப்பிடும் அவலம்தானே நீடிக்கிறது?

இந்தியாவில் மொத்தம் ஐந்தரை கோடிப் பெண்கள் ஆண் துணையின்றிக் குழந்தைகளை வளர்ப்பதாக ஐ.நா. கணக்கெடுப்பு அறிவிக்கிறது. கணவன் உடன் இருந்தாலுமே குடும்பப் பொறுப்பு, பொருளாதாரப் பொறுப்பு என்று இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண்களுக்கு இல்லாத அப்படி என்ன தகுதி ஆணுக்கு இருப்பதால் வீரம், துணிச்சல், முடிவெடுக்கும் திறன் போன்றவையெல்லாம் ‘ஆண்மை’ என்று சமூகம் நம்புகிறது?

உலகெங்கிலும் அரசியலில் காலங்காலமாகப் பெண்கள் இயங்கி வந்திருக்கிறார்கள். அரசியல்ரீதியாகப் பெரும் புரட்சிகளுக்குப் பெண்களின் அரசியல் தலையீடும் போராட்டங்களும் வித்திட்டுள்ளன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது. ஆனால் ஆண்மைய, ஒற்றை அதிகாரம் திட்டமிட்டும், கைவந்த கலையாகவும் பெண்களுக்கான இடத்தை எப்போதும் அரசியலில் வழங்க மறுத்துவருகிறது; ஒடுக்கிவருகிறது.

மக்கள் நல போராளிகள்

அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் என்று எந்த வகைமை என்றாலும் குழந்தைகளின் பாடப்புத்தகங்கள்கூட முழுக்க முழுக்க ஆண்களின் படங்களையே காட்டுகின்றன. ‘பெண் தலைவர்கள்’ என்று ஒதுக்கப்பட்ட தலைப்பில் மட்டும்தான் சரோஜினி நாயுடு, ஜான்சி ராணி என்று மூன்று நான்கு பேரைப் பார்க்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டுக்கே இன்னும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரசியலில் பெண்கள் என்றால் பொது மனசாட்சிக்கு உடனே நினைவுக்கு வருபவர் யார்?

விடுதலைப் போராட்டத்தில் கணவனுடன் தோளோடு தோளாக நின்ற கஸ்தூரி பாவா, ஆயுதமேந்திப் போரிட்ட கல்பனா தத்தாவா, பஞ்சாயத்துத் தலைவரானதால் துள்ளத் துடிக்கக் காதும் கைவிரல்களும் வெட்டப்பட்ட கிருஷ்ணவேணியா, தலித் என்பதால் கொடியேற்றும் உரிமை மறுக்கப்பட்டு, அதைப் போராடிப் பெற்ற அமிர்தமா?

குடிநீர் விநியோகத்திலும் நியாயவிலைக் கடைகளிலும் ஊழலை ஒழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதி படுகொலை செய்யப்பட்டது, அரசியல் அறத்துடன் செயல்படும் பெண்களை அச்சமூட்டி அடக்கிவைக்க முயலும் செயல் மட்டுமல்ல. மக்கள் விரோத அரசியல் சக்திகளைத் தட்டிக்கேட்ட போராளியின் மீது நடத்தப்பட்ட மூர்க்கமான தாக்குதல் அது. மதுரை வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாய்கள் வந்தபோது அப்பகுதிப் பெண்கள் குடங்குடமாகக் குடிநீரைக் கொண்டுபோய் தோழர் லீலாவதியின் நினைவிடத்தில் ஊற்றி அஞ்சலி செலுத்தியது நினைவிருக்கலாம். இப்படி உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை சிறந்த முன்னுதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும். இன்றளவும் பெண்கள் தலைவர்களாக இருக்கும் நாடுகளில்தான் கரோனா அதிக அள வில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏன் இரண்டாம் இடம்?

தற்கால அரசியலில் எத்தனையோ வீரியமான பெண்களை நம் நாடு கண்டாலும்கூட, ஆதிக்க சக்திகளைத் துணையாகக்கொண்டு அவை கட்டமைக்கும் பிம்பத்துக்குச் சரியாகப் பொருந்திப் போகிறவர்களும் ஆண்வழியிலேயே (சாதி - பொருளாதார ஆதிக்கம்) அதிகாரத்தைக் கைப்பற்றும் பெண்களும் மட்டுமே விதந்தோதப்படுகிறார்கள். அரசியல் குடும்பங்களிலும் கூட ஆண் வாரிசுகளைவிடத் திறமையும் தகுதியும் இருந்தாலும் பெண்களுக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கப்படுகிறது என்பது வேதனை.

சித்தாந்தரீதியாகப் பெண் உரிமைகளும் சமத்துவமும் சமூகத்தில் வேரூன்றாத காரணத்தால்தான் இன்றளவும் அரசியல் மேடைகளில் பெண்களையும், பெண் என்பதாலேயே எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் இழிவுபடுத்திப் பேசும் இழிநிலையும் தொடர்கிறது. ஊடகங்களும் கவன ஈர்ப்புக்காக ‘டோக்கனிசம்’ முறையில் பெண் அரசியல்வாதிகள் மீது வெளிச்சம் குவிக்கின்றனவே ஒழிய, அங்கும் ஆணாதிக்கப்போக்குதான் நிலவுகிறது. தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்குகொள்ளும் பெண்களை ஆண் பங்கேற்பாளர்கள் தகாத முறையில் பேசியதையும் நாம் கடந்துதான் வந்திருக்கிறோம்.

இவை எல்லாம் ஒருபுறமிருக்க, இன்னும் குடும்ப அரசியலிலேயே அடிமைப்பட்டுத் தன் சொந்த வாழ்க்கை யிலேயே எந்த முடிவுகளையும் சுயமாகச் சிந்தித்து எடுக்க முடியாத பெண்கள், அரசியலே பேசக் கூடாது என்பதுதான் அவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் மிகப் பெரிய அரசியல். அது மிகவும் நுட்பமான பெண் வெறுப்பு. சமூக வலைத்தளங்களில் பெண்கள் பெருவாரியாகப் பேசவும் விவாதிக்கவும் தொடங்கிவிட்ட பிறகு, இந்தப் போக்கு சற்று குறைந்திருக்கிறது என்றாலும், இன்றும் உறவுகளை ப்ளாக் செய்துவிட்டுத்தான் சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவு, பெண்ணியம் உள்ளிட்ட பண்பாட்டு, சமூக, அரசியலைக்கூடப் பெண்களால் பேச முடிகிறது. பள்ளி, கல்லூரி, குடும்ப வாட்ஸ்அப் குழுக்களோ கேடுகெட்ட ஆணாதிக்க மனப்பான்மைக்கும் கெட்டித்தட்டிப்போன சாதியத்துக்கும் கட்டியம் கூறி நிற்கின்றன.

கையில் எடுப்போம் உரிமையை

புடவை கட்டிப் பூவைத்து ஒரு படத்தைப் பகிர்ந்தால் ஹார்ட்டின்கள் பறக்கும். ஆனால், ஏதேனும் காட்ட மான அரசியல் விமர்சனத்தையோ கருத்தையோ ஒரு பெண் முன்வைத்தால், ஆண்கள் கூடிப் பகடிசெய்வதும் தனிப்பட்ட முறையில் ஆமோதித்தாலும்கூடப் பொதுவில் மற்ற பெண்கள் கள்ளமௌனம் சாதிப்பதும் இங்கே வாடிக்கை. பெண்கள் அச்சமின்றி ஒன்றுகூடி அரசியல் பேசும் களங்களை உருவாக்கும் முனைப்புடன் பலர் செயல்பட்டுவருகிறார்கள். அண்மையில் ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் தலைமையில் தொடங்கப்பட்ட ‘சாவித்ரிபாய் பூலே பெண்கள் பயணக் குழு’வும், எழுத்தாளர் சாலை செல்வம் தலைமையிலான ‘கூடு’ பெண்கள் குழுவும் ‘சமத்துவப் பறவைகள்’ பெண்கள் குழுவும் இணைந்து பெரியார் பிறந்தநாள், அம்பேத்கர் பிறந்தநாள்களுக்கு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல்களில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத பெண்களும் குழந்தைகளும் பெரியாரையும் அம்பேத்கரையும் வாசித்து உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

சமூகநீதிக்காகவும் பாலினச் சமத்துவத்துக்காகவும் போராடிய அம்பேத்கர், பெரியார்வழியில் பெண்கள் அரசியல்மயப்படுவது ஒன்றுதான் அரசியலில் வலிமையான இடத்துக்குப் பெண்கள் முன்னேறுவதற்கும், ஒட்டுமொத்த பெண்களுக்கான விடிவு ஏற்படுவதற்கும் ஒரே வழி.

‘ஆசையாத் தாங்க இருக்கு, புத்தகம் வாசிக்க, கூட்டத்தில் கலந்துகொள்ள... எங்கேங்க நேரம்? வீட்ல வேலையே சரியா இருக்கு’ என்கிற குரல்கள் கேட்கின்றன அல்லவா? “நச்சரிக்கும் வீட்டு வேலைகளில் இருந்து பெண்கள் விடுதலை பெறாமல், மனித குலத்துக்கு விடுதலை இல்லை” என்கிற பெருந்தலைவர் லெனின் குரலும் அத்துடனே கேட்க வேண்டும்!

முதலில் வீடும் சமையலறையும் நாம் இல்லாவிட்டால் இடிந்து வீழ்ந்துவிடும் என்ற நினைப்பைப் புறந்தள்ளி ஒரு டீக்கடைக்கு நான்கு பெண்கள் சேர்ந்துபோய்த் தயக்கமின்றி தேநீர் குடிக்கத் தொடங்குவோம்! இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சியதைவிடவும் அதிகமாக சகமனிதர்களான ஆண்க ளுக்கு அஞ்சுவதை விடுத்து, ‘இதுவும் எங்க ஏரியாதான், கொஞ்சம் தள்ளிக்கோ!’ என்று ஆண்களே ஆக்கிரமித்திருக்கும் புறவெளிகளில் பெண்கள் தயக்கமின்றிப் புழங்கத் தொடங்கிவிட்டாலே போதும்; அரசியலையும் நம் இயல்புகளில் ஒன்றாகப் பழக ஆரம்பித்துவிடுவோம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x