Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

கரோனா இல்லாத புதிய உலகம் எப்போது சாத்தியம்?

கரோனா வைரஸ் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டது. அதன் தொற்றுப் பரவலைத் துண்டிக்கும் முக்கிய ஆயுதமாக உலகம் முழுவதும் எதிர்பார்த்த கரோனா தடுப்பூசியும் வந்துவிட்டது. இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி கரோனா தடுப்பூசிச் செயல்திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

முதல் கட்டத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. மார்ச் முதல் தேதியிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் துணை நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி செலுத்த இருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசிக்குத் தயாராக வேண்டிய பொதுமக்களோ அது தொடர்பாக அநேகக் கேள்விகளையும் சந்தேகங்களையும் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சந்தேகங்களைக் களைந்தால்தான் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் களத்துக்கு வருவார்கள். இதோ, அவர்களுக்கான ஒரு மருத்துவப் பார்வை….

கரோனா தடுப்பூசி எப்போது, எப்படிச் செலுத்தப்படுகிறது?

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ எனும் இரண்டு வகைத் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்று இரண்டு தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் தடுப்பூசிகளை 2லிருந்து 8 டிகிரி செல்சியஸ்வரை குளிர் நிலையில் பராமரித்து, நம் மேல் கையில் ஒரு தவணைக்கு அரை மில்லி எனும் அளவில் தசைவழியாகச் செலுத்துகின்றனர். முதல் தவணை செலுத்தப்பட்ட 28 நாள் கழித்து இரண்டாவது தவணை செலுத்தப்படும். அதற்குப் பிறகு 2லிருந்து 4 வாரங்கள் கழித்து கரோனாவுக்கான நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிடும். முதல் தவணையில் எந்த வகைத் தடுப்பூசி போடப்பட்டதோ அதைத்தான் இரண்டா வது தவணையிலும் போட வேண்டும். தடுப்பூசியின் வகை மாறிவிடக் கூடாது.

பயனாளிகள் விரும்பும் தடுப்பூசி வகையைப் போட்டுக்கொள்ள முடியுமா?

இந்த இரண்டு தடுப்பூசிகளில் எதைச் செலுத்த வேண்டும் என்பதைப் பயனாளி தீர்மானிக்க முடியாத நிலைமை, முதல் கட்டத் தடுப்பூசித் திட்டத்திலிருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது. பயனாளி விரும்பும் தடுப்பூசி வகையைச் செலுத்திக்கொள்ளலாம் எனத் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பயனாளிகள் எந்தத் தடுப்பூசி எங்கே கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் தடுப்பூசி மையத்துக்குச் செல்ல வேண்டும்.

தடுப்பூசி மையத்துக்குப் பயனாளிகள் நேரடியாகச் செல்ல முடியுமா?

அதற்கு முன்னால் பயனாளிகள் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ள ‘கோ-வின் 2.0’ செயலியில் நேரடியாகப் பதிவுசெய்யலாம். சுகாதாரத் துறையினர் மூலமும் பதிவு செய்யலாம். இது குறித்த வழிமுறைகளைச் சுகாதாரத் துறை விரைவில் வெளியிடும்.

கரோனா தடுப்பூசி இப்போது எந்த வயதினருக்கு, எங்கே செலுத்தப்படுகிறது?

இந்தத் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்தப்படு கின்றன. மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள், துணை மண்டல மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், ஆரம்பச் சுகாதார மையங்கள், சுகாதாரத் துணை மையங்கள் என அனைத்து சுகாதார மையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அரசு மையங்களில் இது இலவசம்.

தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசிகள் கிடைக்குமா?

கிடைக்கும். தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தனி கட்டணம் உண்டு. இவை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

யார், யார் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்?

இப்போது தொடங்கும் இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் துணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். கரோனா தொற்றுக்குச் சிகிச்சையில் உள்ள வர்களும் வேறு காரணங்களுக்காகக் கடுமையான காய்ச்சல் உள்ளவர்களும் இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட வேண்டும். சாதாரண சளி, இருமல் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னர் செலுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே கரோனா தொற்று ஏற்பட்டுக் குணமான வர்களும் இதைச் செலுத்திக்கொள்ள வேண்டும். ‘பிளாஸ்மா சிகிச்சை’ எடுத்துக்கொண்டவர்கள் சிகிச்சை முடிந்து 90 நாள்களுக்குப் பிறகு செலுத்திக்கொள்ளலாம்.

இதய நோய்க்கு ஆஸ்பிரின், குளோபிடோகிரில், டிக்காகிரிலர் (Blood thinners) போன்ற மாத்திரை சாப்பிடுபவர்களும், மனநோய் - வலிப்பு நோய்க்குத் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும் செலுத்திக்கொள்ளலாம். ஹெப்பாரின், வார்ஃபாரின், அசிட்ரோம் போன்ற ரத்த உறைவுத் தடுப்பு மருந்துகளைப் (Anti coagulants) பயன்படுத்துபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக முதல் இரண்டு நாள்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நாளிலும் அவற்றை உட்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கூடாது?

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டு பவர்கள் ஆகியோருக்கு இது செலுத்தப்படுவதில்லை. வேறு தடுப்பூசிக்கு ஏற்கெனவே கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால், இதைச் செலுத்திக்கொள்ளக் கூடாது. முதல் தவணையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படுமானால் இரண்டாம் தவணையைத் தவிர்க்க வேண்டும்.

உணவுக்கும் மருந்துகளுக்கும் ஒவ்வாமை இருப்பவர்கள், தட்டணுக்கள் குறைவாக இருப்பவர்கள், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற பாதிப்புகளால் நோய்த் தடுப்பாற்றல் மிகவும் குறைந்தவர்கள், தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே, இதைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

பக்கவிளைவுகள் என்னென்ன?

தடுப்பூசி செலுத்தப்பட்ட மேல்கையில் வீக்கம் அல்லது தடிப்பு ஏற்படலாம்; அந்த இடத்தில் தோல் சிவந்துபோகலாம். குளிர்காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தசைவலி, உடல் சோர்வு, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். இவை எல்லாமே உடலில் தடுப்பூசி வேலை செய்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்தானே தவிர, நோயை உண்டாக்கும் அறிகுறிகள் அல்ல! இவை ஓரிரு நாள்களில் தாமாகவே மறைந்துவிடும். தேவைப்பட்டால் ‘பாராசிட்டமால்’ மாத்திரையை உட்கொள்ளலாம்.

அரிதாகச் சிலருக்குத் தலைச்சுற்றல், மயக்கம், உடல் அரிப்பு, தடிப்புகள், நெறி கட்டுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். இவர்கள் உடனடியாக மருத்துவரைச் சந்தித்தால், சரியாகிவிடும். இந்தப் பக்கவிளைவுகளுக்குப் பயப்படத் தேவையில்லை.

முதலாம் தவணைக்குப் பிறகும் இரண் டாம் தவணைக்குப் பிறகும் உடலில் ஏதாவது மாற்றங்கள் தோன்றுமா?

இதுவரை இந்தியாவில் ஒரு கோடிப் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேற்சொன்ன சாதாரண பக்கவிளைவுகளைத் தவிர, வேறு எந்த மாற்றங்களும் இவர்கள் உடலில் ஏற்படவில்லை. இதற்கு நானே ஓர் உதாரணம். நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன். எந்தவிதத் தொந்தரவும் இல்லை. உலக அளவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 0.2 சதவீதம் பேருக்கு மட்டுமே சாதாரண பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை.

இந்தியத் தடுப்பூசிகள் கரோனாவை எப்படித் தடுக்கின்றன?

‘கோவிஷீல்டு' செலுத்திக்கொண்ட வர்களின் உடலில் பல கோடி கரோனா கூர்ப்புரதங்கள் (Spike proteins) உருவாகின்றன. அவைதான் நம் உடலுக்கு ‘ஆன்டிஜன்’ எனும் எதிரியாகின்றன. ரத்தத்தில் எதிரணுக்களைத் தூண்டும் பொருளாகின்றன. ‘கோவேக்சின்’ செலுத்திக்கொண்டவர்களுக்கு இறந்த நிலையில் இருக்கும் கரோனா வைரஸ்களே எதிரிகள். தடுப்பூசி மூலம் உடலுக்குள் நுழையும் இவற்றை நம் தடுப்பாற்றல் மண்டலம் கவனிக்கிறது.

அந்நிய எதிரிகள் உடலுக்குள் நுழைந்து விட்டார்கள் என முடிவெடுக்கிறது. அவற்றை அழிக்க ‘எதிரணுக்கள்’ எனும் பாதுகாப்புப் படைகளை ரத்தத்தில் உற்பத்தி செய்கிறது. அந்த அணுக்கள் குறிப்பிட்ட காலத்துக்கு நம் ரத்தத்தில் இருக்கும்; கரோனாவுக்கு எதிரான நோய்த் தடுப்பாற்றலைக் கொடுக்கும். அந்தக் காலகட்டத்தில் உண்மையிலேயே நமக்கு கரோனா வைரஸ் தொற்றும்போது, அந்த எதிரணுக்கள் அதை அடையாளம் கண்டு அழித்துவிடுகிறது. அதனால் கோவிட்-19 நோய் நமக்கு வருவது தடுக்கப்படுகிறது.

இப்போது போடப்படும் தடுப்பூசிகள் புதிதாகப் பரவும் ‘வேற்றுருவ’ (Variants) கரோனா வைரஸ் தொற்றுகளையும் தடுக்குமா?

தடுக்கும் என்றே ஆய்வுகள் கூறு கின்றன. அது மட்டுமல்லாமல், புதிய வேற்றுருவ கரோனா வைரஸ்கள் இனி மேல் பரவினாலும் அவற்றைத் தடுக்கும் விதத்தில் இப்போதுள்ள தடுப்பூசிகளில் மாற்றங்களைச் செய்து முடுக்கிவிடவும் முடியும் என்பது கூடுதல் நன்மை.

கரோனா இல்லாத புதிய உலகம் எப்போது சாத்தியம்?

எல்லாரும் பதில் எதிர்பார்க்கும் முக்கியமான கேள்வி இது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஒவ்வொன் றிலும் 70% மக்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டால் ‘சமூக நோய்த் தடுப்பாற்றல்’ கிடைத்துவிடும். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு நோய் பரவும் ‘சமூகப் பரவல்’ நின்றுவிடும். அப்போது உலகச் சுகாதார நிறுவனம் ‘கரோனா பெருந்தொற்று ஒழிந்துவிட்டதாக’ அறிவிக்கும். அந்தப் ‘பொன்னான’ நாளில்தான் ‘கரோனா இல்லாத புதிய உலகம்’ சாத்தியம்.

அந்தப் ‘பொன்னான நாள்’ எப்போது வரும்?

அதற்கு இன்னும் சில ஆண்டுகள் வரை ஆகும். உலகில் வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும்தான் கரோனா தடுப்பூசி போடுவதற்கு இப்போது முந்திக்கொண்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகள் இலவசமாகவோ சலுகை விலையிலோ கரோனா தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ‘கேவி’ (GAVI) அமைப்பையும் உலகச் சுகாதார நிறுவனத்தையும் எதிர்நோக்கியுள்ளன. இந்த நாட்டு மக்களில் பெரும்பாலோருக்குத் தடுப்பூசி போடப்பட்டால்தான் உலகில் ‘சமூக நோய்த் தடுப்பாற்றலு’க்கு வாய்ப்பு உண்டு. அதுவரை ஆங்காங்கே கரோனா தொற்று சுற்றிக்கொண்டுதான் இருக்கும். ஆகவே, தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுடன் முகக்கவசம் அணிவதும் தனிமனித இடைவெளி காப்பதும் கைகளைச் சுத்தமாகப் பேணுவதும் முக்கியம்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x