Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

தவறான நோய் கண்டறிதல்: தவறான சிகிச்சையின் ஆபத்துகள்

உலக அளவில், ஆண்டுதோறும் 1.2 கோடி பேர் தவறான நோய் கண்டறிதலுக்கு ஆளாகி றார்கள். எளிதில் தவிர்க்கக்கூடிய நோய்களாலேயே ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 70 லட்சம் குழந்தைகள் இறந்துபோவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. தொற்றுகள், புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் பெருமளவு தவறுகள் ஏற்படுகின்றன. பத்து பேர் சிகிச்சைக்கு வந்தால், அதில் ஒருவருக்காவது நோய் கண்டறிதல் தவறாகி விடுகிறது என்று தரவுகள் உணர்த்துகின்றன.

நோயைக் கண்டறிவது எப்படி?

நோயாளி சொல்லும் தொந்தரவுகள், அவை எவ்வளவு காலமாக இருக்கின்றன? அவற்றுக்கு வேறு மருத்துவர்களைப் பார்த்தார்களா? ஏதாவது பரிசோதனை மேற்கொண்டி ருக்கிறார்களா? எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் என்ன என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வதே மருத்துவர்கள் நோயைக் கண்டறிவதன் முதல் நிலை. அதன் பிறகே உடல் பரிசோதனை வருகிறது.

உடல் பரிசோதனை என்றால் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மட்டுமல்ல; இதயம் எவ்வாறு செயல்படுகிறது? சுவாசம் எவ்வாறு உள்ளது? வயிற்றுப்பகுதி, நரம்பு மண்டலம், மூளையின் செயல்பாடு, தசை, எலும்பு மண்டலம் என அனைத்து உடல் உறுப்புகளுமே பரிசோதிக்கப் படும். சிறுநீர் கழிக்குமிடம், பாலியல் உறுப்புகள் ஆகியவைகூடத் தகுந்த மருத்துவர் மூலம் பரிசோதிக்கப்படும். சுருக்க மாகச் சொல்வதென்றால் உச்சி முதல் உள்ளங்கால்வரை முழுமையாகப் பரிசோதிக்கப்படும். இவ்வாறு முழு உடல் பரிசோதனை செய்த பிறகே, நோயாளிக்கு என்ன நோய் என்பதை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள்.

நோயை உறுதிப்படுத்த ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன், திசுப்பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும். உணவு, உடற்பயிற்சி, மது, போதை, புகை, அன்றாடப் பழக்கவழக்கங்கள், மற்ற நோய்கள், சிகிச்சைகள் என எதை யுமே நோயாளிகள் மருத்துவர்களிடம் மறைக்கக் கூடாது.

நோயைக் கண்டறிவதில் ஏற்படும் சிரமங்கள்

நோயைக் கண்டறிவது மருத்துவர்க ளுக்கு மிகவும் எளிதான வேலை என்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். இது தவறு. பெரும்பாலான நோய்களை மருத்துவர்கள் எளிதில் கண்டறிந்து விட்டாலும், சில நோய்களைக் கண்டறி வது அவர்களுக்கு சவால் மிக்கதே. எடுத்துக்காட்டுக்கு, சில நாள்பட்ட காய்ச்சல் வகைகளை அது என்ன காய்ச்சல் எனக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும். மூன்று வாரங்களுக்கு மேலாகியும், மருத்துவமனையில் சேர்ந்து மூன்று நாள்களுக்கு மேலாகியும் என்ன காய்ச்சல் என்று தெரியாமலிருந்தால், அந்தக் காய்ச்சலுக்குக் ‘காரணம் தெரியாத காய்ச்சல்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட காய்ச்சலுக்கு 200 வகையான நோய் கள் காரணமாக இருக்கலாம். 20% நோய்களைக் கடைசிவரை கண்டறிய முடியாமலும் போக நேரிடலாம்.

ஆய்வுக்கூடங்களின் பங்கு

தவறான நோய் கண்டறிதலில் ஆய்வுக்கூடங்களின் பங்கு அதிக அளவு உள்ளது. கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற சிகிச்சை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அங்கு வந்த பெண்ணுக்கு மார்பகக் கட்டி இருந்தது. இப்படிக் கட்டி வந்தால், அது சாதாரணக் கட்டியாகவோ புற்றுநோய்க் கட்டியாகவோ இருக்கலாம். வெளியில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட திசுப் பரிசோதனை புற்றுநோய் என வரவே, அதற்கான சிகிச்சையை உடனடியாகத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட திசுப் பரிசோதனையில், அது புற்றுநோய்க் கட்டி இல்லை என்பது தெரியவந்தது.

மருத்துவ ஆலோசனையின் அவசியம்

சிறுநீர்ப் பரிசோதனை மூலம் ஒரு இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளாரா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். இது மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (HCG- Human chorionic gonadotropin ) என்கிற ஹார்மோனை அடிப்படையாக வைத்துச் செய்யப்படும் பரிசோதனை. இந்த ஹார்மோன் கர்ப்பம் தரித்தவுடன் அதிகரிக்கும். ஆக, கர்ப்பம் தரித்த 6-12 நாள்களுக்குள், இந்தப் பரிசோதனை மூலம், ஒருவர் கர்ப்பிணி ஆகிவிட்டார் என்பதை உறுதிப் படுத்தலாம். ஆனால், ஒரு பெண் கர்ப்பமாக இல்லாவிட்டால்கூட, சில வகை புற்றுநோய்களால் இந்த ஹார் மோன் சிறுநீரில் வெளியேறலாம். ஆகவேதான், எந்த ஆய்வுக்கூடமும் பரிசோதனை முடிவுகளைக் கொடுக்கும்போது, உங்கள் மருத்துவரைக் கண்டு ஆலோசனை பெற்று நோயை உறுதிசெய்யுங்கள் என்று அதில் அறிவுறுத்துகிறார்கள்.

ஆள்மாறாட்ட சிகிச்சை

ஒரே பேரைக் கொண்ட இருவர், அல்லது ஒத்த பெயர் உச்சரிப்பைக் கொண்ட இருவர், அறுவை சிகிச்சைக்காக ஒரே இடத்தில், ஒரே வார்டில் அனுமதிக்கப்படும்போது, இப்படி ஆள்மாறாட்டமாகி சிகிச்சை அளிப்பது கவனக்குறைவால் நடைபெற்றுவிடுகிறது.

எடுத்துக்காட்டுக்கு, மறைந்த நடிகை தேவியின் அம்மாவுக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவைசிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இடது பக்கக் கட்டியை எடுப்பதற்குப் பதிலாக வலது பக்கத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுவிட்டது. ஏனென்றால், அறுவைசிகிச்சை செய்ய வந்த நிபுணருக்கு, தவறுதலாக வேறொரு நோயாளியின் ஸ்கேன் தரப்பட்டிருந்ததே காரணம்.

எப்படித் தடுக்கலாம்?

நோயைக் கண்டறிவதில் சிரமம் இருந்தால், இன்னொரு மருத்துவரின் கருத்தையும் கேட்டறியலாம். அப்போது தவறாகக் கணித்தல், தவறாக நோய் கண்டறிதல் என்கிற நிலை ஏற்பட சாத்தியமில்லை.

ஆய்வுக்கூடங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். மிகவும் நுட்பமாக ஆராய்ந்து சரியான முடிவுகளைத் தருவதன் மூலம் மருத்து வர்களின் சிகிச்சைக்கு உதவ வேண்டும். நவீனத் தொழில் நுட்பத்துடன் தரத்தை உயர்த்த வேண்டும். முக்கியமாக, ஒரு நோயாளியின் ஆய்வு அறிக்கையை இன்னொருவருக்குக் கொடுத்துவிடக் கூடாது.

ஆள்மாறாட்டத் தவறுகள், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவப் பணி யாளர்கள், உதவியாளர்கள், அறுவை சிகிச்சை கூடத்துக்கு நோயாளிகளை அழைத்துச் செல்பவர்கள், ஆய்வுக்கூடங்களில் பணிபுரிபவர்கள் என அனைவருமே மிகவும் கவன மாகவும் எச்சரிக்கை யாகவும் இருக்க வேண்டும்.

தவறான நோய் கண்டறிதல் மருத்து வர்களுக்கும் நோயாளிகளுக்கும் மனக்கசப்பை, நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். மருத்துவமனையில் சந்திக்க வேண்டிய மருத்துவர்களும் நோயாளிகளும் நீதிமன்றத்தில் எதிரெதிரே நிற்கவேண்டிய சூழ்நிலையை இது உருவாக்கி விடும். அதனால் இருவருக்குமே லாபமி ல்லை. எனவே, இது கவனத்துடன் தவிர்க்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர் தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x