Last Updated : 16 Nov, 2015 03:29 PM

 

Published : 16 Nov 2015 03:29 PM
Last Updated : 16 Nov 2015 03:29 PM

திணறுகிறது திறன் மேம்பாட்டு அமைச்சகம்

இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முழுக்கத்துக்குத் தேவையான எதுவுமே போதிய அளவில் இல்லாமல்தான் முழங்கிவிட்டோம் என்று மத்திய அரசில் இருப்பவர்கள் தாமதமாகவே உணர்ந்திருக்கிறார்கள். நிலம், மூல தனம், தொழிலாளர்கள், ஆலை நிர்வாகம் என்ற 4 மூலக் காரணிகள் இருந்தால்தான் தொழில் தொடங்க முடியும்.

நகர்ப்புறங்களில் புதிய தொழிற் சாலைகள் தொடங்க குறைந்த விலையில் நிலங்கள் கிடைப்பதில்லை. இதற்காகக் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அதன் திருத்த மசோதா கிடப்பில் போடப் பட்டிருக்கிறது. மூலதனத்தை வழங்கும் நிலையில் வங்கிகள் இல்லை. அவற்றின் வாராக்கடன் அளவு தலைக்கு மேல் போய்விட்டது. தொழிலதிபர்களிடமும் போதிய பணம் இல்லை. அந்நிய முதலீட்டை நாடலாம் என்றால் அவர்கள் விரும்புகிற முதலீட்டுச் சூழல் இங்கு இல்லை.

அவர்கள் நினைக்கிற வேகத்தில் இங்கே தொழில் தொடங்கிவிட முடிவதில்லை. அத்துடன் லாபத்தைத் தாய்நாட்டுக்குக் கொண்டு செல்வதிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அடுத்ததாக வருவது தொழிலாளர்கள். போதிய தொழிற்பயிற்சியும் அனுபவமும் பெற்ற தொழிலாளர்கள் மிகவும் குறைவு. இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்களால் பயிற்சி கொடுத்த பிறகுதான் தொழிலாளர்களை நிரந்தர வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடிகிறது. அந்தத் தொழி லாளர்களையும் வேலைக்கு அமர்த் தவும் நீக்கவும் தொழிலகத்தை விரிவு படுத்தவும் தொழிலாளர் நலச் சட்டத் தைத் திருத்துவதற்கும்கூட கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீண்டகால பிரச்சினை

நல்ல திறமையுள்ள, தரமான தொழி லாளர்கள் போதிய எண்ணிக்கையில் நாட்டில் இல்லை என்பது நீண்ட காலமாகவே உணரப்பட்டிருந்தாலும் அவர்களைத் தயார் செய்வதற்கான ஏற்பாடுகளில் அக்கறை காட்டப் பட்டதே இல்லை. பள்ளிக்கூடம் செல்லாத இளைஞர்கள் தொழில் திறனைப்பெற தனி அமைப்புகளே கிடையாது. பள்ளி, கல்லூரிகளிலும் கிட்டத்தட்ட இல்லை. இந்த பற்றாக் குறையை இட்டு நிரப்பத்தான் தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடங் கப்பட்டன. ஐ.டி.ஐ. என்று அழைக் கப்படும் இவற்றில் காலத்துக்கேற்ற பாடத்திட்டங்களும் பயிற்சிகளும் தொழில் பிரிவுகளும் சேர்க்கப்பட வில்லை. எனவே மாணவர்களைச் சேர்க்க பெற்றோருக்கு ஊக்கம் இருப்ப தில்லை. வேறு வழியே இல்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான், கலைப்பாட வகுப்பில் சேர முடியாத நிலையில் சேர்ந்து பயிற்சி பெறு கிறார்கள்.

பல்தொழில்நுட்பக் கல்லூரி கள் என்று அழைக்கப்படும் பாலிடெக் னிக்குகள் இவற்றைவிடத் தரம் வாய்ந்தவையாகவும் பட்டயக் கல்வி தருவதாகவும் இருந்தாலும் இவற்றிலும் இந்தியத் தொழில்துறைக்குத் தேவைப் படும் எல்லா வகைத் தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுவது குறைவு. ஐ.டி.ஐ. களும் பாலிடெக்னிக்குகளும் எல்லா மாநிலங்களிலும் போதிய அளவுக்கு இல்லை. எனவே இந்திய மக்கள் தொகையில் வெறும் 5% மட்டுமே முறையான தொழில்பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இந்த சதவீதம் 60% முதல் 80% வரையில் இருக்கிறது.

முறையான தொழில்பயிற்சி பெறா தவர்களுக்கு தொடக்க ஊதியமே மிகக் குறைவாகத் தரப்படுகிறது. பின்னாளில் அவர்கள் ஆலையில் உரிய பயிற்சியைப் பெற்று திறமைசாலிகளாக மாறினாலும் தொடக்கத்தில் கிடைத்த குறைவான ஊதியம் கடைசிவரையில் தொடர்கிறது.

தனி அமைச்சகம்

இந்த நிலையில்தான் திறன் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட தனி அமைச்சகம் 2022-ம் ஆண்டுக்குள் 15 கோடிப் பேருக்குத் தொழில்திறன் பயிற்சியளித்துவிட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இந்த அமைச்சகம் தொடங்கப்பட்டு ஓராண் டாகியும் முன்னேற்றம் இல்லை. இத்துறைக்குத் தேவையான ஊழியர் களே போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடும் போதவில்லை. இத்துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடிக்கு இது ஒரு சவாலான துறை. தேசிய திறன் வளர்ப்பு கார்ப்பரேஷன் (National Skill Development Corporation) என்ற அமைப்பின் மூலம் பயிற்சி அளிக்க முன்னர் உத்தேசிக்கப்பட்டது. 2010-ல் இதற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.1,000 கோடி தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 70% பேருக்கு வேலைவாய்ப்பு தரப் படும் என்ற உத்தரவாதத்தை அமல் படுத்த அரசால் முடியாமல் போனது.

இதுவரையில் 5 சதவீதத்துக்கும் குறைவான இளைஞர்களுக்கே தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகளே தெரிவிக் கின்றனர்.

பயிற்சி நிறுவனங்கள்

தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 12,000 தொழிற் பயிற்சி நிறுவனங்கள் இப்போது திறன் வளர்ப்புத் துறையின் வசம் வந்துள்ளன. மத்திய அரசின் திட்டம் இவற்றில் அமல்படுத்தப்பட்டதா, அதனால் சாதகமான அம்சங்கள் ஏற்பட் டனவா என்று தெரிய ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கிறார் மூத்த அதிகாரி. வெவ்வேறு துறைகளின் கீழ் இருந்த திறன் வளர்ப்பு அமைப்புகளும் திட்டங்களும் ஒரு துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதால் நன்மையா, தீமையா என்பதும் போகப்போகத்தான் தெரியும். ஆனால் அரசின் இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள, தனியார் தொழில் திறன் வளர்ப்பு நிறுவனங்கள் பல ஆர்வமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

2020-ல் 50 கோடிப்பேர் இந்தியாவில் வேலைக்கேற்ற வயதில் இருப்பார்கள். அவர்கள் நல்ல சான்றிதழுடன் கூடிய தொழில்திறன் பயிற்சி பெற்றிருந் தால்தான் உள்நாட்டில் நல்ல சம்பளம் கிடைக்கும். வெளிநாடுகளிலும் உடனே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். அரசின் நோக்கம் நல்லது. அதைச் செயல்படுத்தும் வழிமுறை விரைவுபட வேண்டும். மாநில அரசுகள், தொழில் நிறுவனங்கள் கைகொடுக்க வேண்டும். அரசுத்துறை நிறுவனங்கள் இதில் முன்னோடியாக இருக்க வேண்டும்.

இளைஞர்கள் ஒரு தொழிலைச் சொந்தமாகச் செய்யவும் வேலை வாய்ப்பு பெறவும் கொண்டுவரப்பட்டது இத் திட்டம். இதில் பயிற்சி அளிப் பதுடன் வழிகாட்டல்களும் இருக்கும். தச்சுத்தொழிலாளர்கள், காலணி தயாரிப்போர், பற்றவைப்புத் தொழில் புரிவோர், கொல்லர்கள், கட்டுமானத் தொழிலில் உள்ள கட்டுனர்கள், செவிலி யர்கள், தையல் கலைஞர்கள், நெசவா ளர்கள், வர்ணம் பூசுவோர், உலோகப் பூச்சுகளைத் தயாரிப்போர், ஆபரணக் கற்களைக் கொண்டு நகை தயாரிப்போர், தங்க நகை வடிவமைப்பாளர்கள், மோட்டார் வாகனங்களைப் பழுது பார்ப்போர், குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட மின்னியல் மின்சாதனங்களைப் பழுதுபார்ப்போருக்கு இப்பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. வங்கித்துறை, அடுமனையகம், சுற்றுலா ஆகிய துறைகளில்கூட இளைஞர்களைப் பயிற்றுவிக்க இத் துறையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற இளைஞர்களுக்கு தனித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேலைகளைச் செய்வதற்கும் தொழில் முனைவோராவதற்கும் தேவைப்படும் தன்னம்பிக்கைகள் இங்கே ஊட்டப்படும். பாடங்கள் எளிமை யாக இருக்கும். பயிற்சி, வழிகாட்டல், ஆலோசனைகள் வழங்கல், மாதிரி திட்டங்களைத் தயாரித்தல் என்று பயிற்சி பலவகைகளிலும் அளிக்கப்படும். ஆனால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு போதிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசின் ஒரு துறையால் மட்டும் இதைச் சாதித்து விட முடியாது. மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிலையங்களும் பல்கலைக்கழகங்களும் தொழில் துறையும் தொழில்-வர்த்தக சபை களும் இதில் தீவிர பங்களிப்பைச் செய்தால்தான் வெற்றி பெறும். பள்ளிக்கூட பாடத்திட்டங்களின் ஒரு பகுதியாகத் தொழில் பயிற்சி அமைய வேண்டும். 9-வது வகுப்பு முதல் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தொழில் பிரிவுகளில் மாணவர்களுக்குக் கல்வியும் நேரடிப் பயிற்சியும் அளித்து தனிச் சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலாத இளைஞர்களும் தனித்திறன் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தரமான பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். முன்பெல்லாம் டைப்-ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுகள் கிராமங்களில் கூட தட்டச்சுப் பயிற்சிகளையும் ஷார்ட்-ஹேண்ட் பயிற்சிகளையும் அளித்து இளைஞர்களைத் தயார் செய்தன. அதே போன்றதொரு பயிற்சி வலையமைப்புகள் நாடு முழுக்க ஏற்பட வேண்டும்.

rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x