Last Updated : 08 Dec, 2020 03:13 AM

 

Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

பொறி பறக்கும் இசை!

கிராஃபிக் டிசைனராகப் பணிபுரியும் நிகவித்ரனின் பொழுதுபோக்கு எழுதுவது, பாடுவது. சொல்லிசைக் கலைஞராகவும் (ராப்) இருக்கும் இந்த 24 வயது இளைஞரின் ஹிட் லிஸ்டில் நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து பொருளாதாரத்தையே வலுவிழக்கச் செய்யும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதுவரை எல்லாமே இடம்பிடித் திருக்கின்றன.

சினிமா என்னும் பெரிய சுவரைத் தாண்டி சொல்லிசைக் கலைஞர்களின் சுயாதீன இசை உலகம் இருக்கிறது. மக்களுக்கான அந்தக் கலையை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மும்பையைப் போன்று சொல்லிசைக் கலைஞர்களுக்கோ சுயாதீன இசைக் கலைஞர்களுக்கோ இன்னமும் இங்கே ஆதரவு கிடைப்பதில்லை என்னும் ஆதங்கம் இருக்கிறது என்கிறார் நிகவித்ரன்.

சொல்லிசைப் புரட்சியின் வடிவம்

“எல்லாருமே சினிமா இசையை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, நான் ‘ராப்’ எனப்படும் சொல்லிசை வடிவத்தை என்னுடைய பள்ளி நாள்களிலிருந்தே பழகிவருகிறேன். மலேசிய ராப்பர்களான யோகி பி, டாக்டர் பர்ன் ஆகியோரின் பாடல்கள் பிடிக்கும். சொல்லிசைக்கு அடிப்படையே நிறைய வாசிக்க வேண்டும். நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளைப் படிக்க வேண்டும் என்பதுதான்.

நானும் அப்படி மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் படித்துத்தான் பாடல்களை எழுதுகிறேன். என்னைப் பொறுத்தவரை சொல்லிசை பொழுதுபோக்கு அல்ல. அதைப் புரட்சியின் வடிவமாகப் பார்க்கிறேன். தொடக்கத்தில் நான் எழுதிய பாடல்களை என்னுடைய அண்ணன் திருத்திக் கொடுத்திருக்கிறார். இதுதவிர, எடிட்டர் விநோத், ரோட்ரிக்ஸ், ராயப்பன், பிரான்ஸில் மாஸ்டரிங் செய்திருக்கும் பிரிட்டோ ஜுட், ஹரி உள்ளிட்ட பலரின் உழைப்பு எங்களுடைய புதிய ஆல்பத்தில் இருக்கிறது” என்கிறார் நிகவித்ரன்.

நிகவித்ரனின் நண்பர்கள் டி.விநோத், எம்.ஜே.சூர்யா, ஃபின்னி, ‘மைக்’ அசி, ‘மைக்’ விஜய் சான்டி, தமிழ்மணி ஆகியோர் இணைந்து ‘டியூட்ஸ் இன் மெட்ராஸ்’ என்னும் இசைக் குழுவின் சார்பாக ‘82 டி பிளாக்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சொல்லிசைப் பாடல்கள் ஐ-டியூன் போன்ற தளங்கள் வழியாக உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

டிஜிட்டல் மூஞ்சி

‘எகைன்ஸ்ட் மை ஸ்கூல்’, ‘டிஜிட்டல் மூஞ்சி’ (டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக விளைநிலங்களைப் பயன்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக எழுதப்பட்ட பாடல்) ஆகியவை ஏற்கெனவே வெளிவந்த

அவருடைய பாடல்கள். ‘82 டி பிளாக்’ என்கிற எட்டுப் பாடல்களின் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘82 D பிளாக்’ பாடல் நிகவித்ரனின் பால்ய பருவம், பள்ளி நாள்கள், சொல்லிசைக்கு ஓர் அறிமுகம், சென்னை, சேப்பாக்கம் லாக் நகர் பகுதியில் வாழ்ந்த காலம் உள்ளிட்டவற்றைச் சொல்கிறது. `மச்சி டீ சொல்லு’ பாடல், நட்பின் நெருக்கத்தைச் சொல்லும் அதேநேரத்தில் அத்தியாவசியப் பொருளான பால் விலையேற்றத்தையும் கண்டிக்கிறது.

தம்மிடமிருக்கும் கலைத் திறமையைக் கொண்டு மக்களை உற்சாகப் படுத்துவதையும் மகிழ்ச்சிப்படுத்துவதையும் மட்டுமே கலையின் நோக்கம் என ஒரு கலைஞன் நினைக்கக் கூடாது. மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை அரசு திணிக்கும்போது அதற்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்கவும் அவற்றிலிருக்கும் தீமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கலையைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் ஒரு கலைஞனின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் ஒவ்வொரு பாடலிலும் வெளிப்பட்டுள்ளது.

இவரின் `டோன்ட் டச்’ பாடல், 2018இல் காஷ்மீரின் கதுவாவில் எட்டு வயதுச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்கிறது. “இந்தப் பாடலில் காட்டமான கருத்துகள் இடம்பெற்றிருக்கும். இதையெல்லாம் குறைத்துக்கொள்ளலாமே என்று பலர் என்னிடம் கூறினார்கள். ஆனால், அநீதிக்கு எதிராக என்னுடைய எழுத்துகளில் வெளிப்படும் ஆவேசத்தை நான் குறைத்துக்கொள்ள மாட்டேன்” என்கிறார் நிகவித்ரன்.

கடுகு தாளிக்காவிட்டால் உணவின் சுவை மட்டுப்படுவதுபோல், அநீதியை தட்டிக் கேட்காவிட்டால் பாடுவதில் என்ன பயன்?

நிகவித்ரன் யூடியூப் அலைவரிசை: https://bit.ly/3gftPJC

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x