Last Updated : 17 Jul, 2020 12:35 PM

 

Published : 17 Jul 2020 12:35 PM
Last Updated : 17 Jul 2020 12:35 PM

இதய செயலிழப்புக்கான புதிய சிகிச்சை வாய்ப்பு

இதய செயலிழப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நோயாகும். ரத்தம், ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்கான உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான ரத்தத்தை இதய தசையால் செலுத்த முடியாத நிலையில் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. இந்த நோய் உலக அளவில் சுமார் 46.4 கோடி மக்களைப் பாதித்துள்ளது. இந்தியாவில் சுமார் 1 கோடிப் பேர் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதய செயலிழப்பு ஏற்படக்கூடிய சராசரி வயது இந்தியர்களில் 61.2 ஆக உள்ளது. இது மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது பத்து வயது குறைவாக அமைந்துள்ளது.

இது ஒரு நாள்பட்ட நீண்ட கால, பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இதய செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீத நோயாளிகள் 5 ஆண்டுகளுக்குள் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு இதய செயலிழப்பு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. மேலும், இது மருத்துவக் கவனிப்புக்கான கட்டாயத்தை உருவாக்கிக் குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது.

இதய செயலிழப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தையும் இறப்பையும் கணிசமாகக் குறைப்பதாக டபாக்லிஃப்ளோசின் எனும் நீரிழிவு எதிர்ப்பு மருந்து சமீபத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அஸ்ட்ராஸெனெகா எனும் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்த இந்த மருந்துக்கான ஒப்புதலை மத்திய அரசு ஜூலை 7 அன்று அளித்தது. இதய செயலிழப்பு (Heart Failure,HF - ஹெச்.எஃப்) சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் நீரிழவு எதிர்ப்பு மருந்து இது.

இந்த அனுமதி, டிஏபிஏ –ஹெச்.எஃப் (DAPA-HF) ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதய செயலிழப்பால் ஏற்படும் இறப்பு அபாயத்தை இந்த மருந்து வெகுவாகக் குறைப்பதாகவும், இதய செயலிழப்பால் ஏற்படும் பாதிப்பை 26 சதவீதம் குறைப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆய்வு செய்யப்பட்டவர்களில் நான்கில் ஒரு நோயாளி இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சோதனைகள் மூலம், மருத்துவரீதியாக நல்ல முடிவுகள் தெரியவந்துள்ளதன் அடிப்படையில் டபாக்லிஃப்ளோசின் (ஃபோர்க்சிகா)-வுக்கான இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இது இதய செயலிழப்பு நோயாளிகளுக்கான சிகிச்சையில் நல்ல நம்பிக்கையை வழங்குகிறது. இந்த மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் மருத்துவர் கிரிஷ் நவசுண்டி கூறும்போது, “குறைந்த எண்ணிக்கையிலேயே அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் உள்ளதால் நோயாளிகளுக்கான இதய செயலிழப்பு சிகிச்சை மேலாண்மை கடினமாக உள்ளது. டபாக்லிஃப்ளோசின் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம், இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு, சிறந்த முறையில் சிகிச்சை வழங்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நோயாளிகளுக்கு இது நல்ல பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்தியாவில் இந்த மருந்து கிடைப்பதால், இந்தியாவில் வயதான மூத்த, இதய செயலிழப்பு நோயாளிகளுக்குச் சிறந்த தரமான சிகிச்சையை வழங்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x