Published : 05 Mar 2020 08:47 AM
Last Updated : 05 Mar 2020 08:47 AM

தெய்வத்தின் குரல்: எல்லையற்ற ஆனந்தம்

ஒரே ஒரு சூரியன்தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக்கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அநேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது.

சூரியன் ஒன்றுதான். அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினுமினுக்கின்ற அறி வொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான். இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கரர் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் அகண்டமான ஒரே சக்தி எதுவோ, அறிவு எதுவோ, அந்த எல்லை கடந்த சக்திதான், அறிவுதான் நம்மிடத்தில் ஓர் எல்லைக்குள் பிரிந்து கண்டம் கண்டமாகத் தோன்றுகிறது.

பொய்யாய் போகும்

இப்படி நான் சொல்லுகிற க்ஷண காலம் நமக்கு எல்லாம் புரிந்து விட்டதுபோல் இருக்கிறது. இந்த ஒரு க்ஷணத்தில் எப்படி இருக்கிறாமோ அப்படியே எப்போதும் இருந்தால் துக்கம் இல்லை. ஆனால் அடுத்த க்ஷணமே நமக்கு இந்த சத்தியமான பார்வை போய்விடுகிறது. நாம் பல விதமான பொய்களாலேயே கஷ்டங்களுக்கு ஆளாகிறோம். பொய்யினால் பெறும் ஆனந்தமும் விரைவில் பொய்யாகிவிடும்.

உண்மையில் எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கிறவனைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். உண்மையாக இருக்கிறவன் சுவாமி ஒருத்தன்தான். ஆசாமிகளாகிய நாம் அந்த சுவாமியைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். கண்டம் கண்டமாக நாம் இருக்கிறோம். கண்டம் கண்டமாக இருப்பது எல்லாம் முடிவில் அகண்டத்தோடு ஒன்றுபடும்போது அகண்டமாக ஆகி, நிரந்தர ஆனந்தமாகி விடுகிறது.

அகண்டமாக இருப்பவன் ஒருவன் தான் இருப்பு. கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான். நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல.

அகண்டமாக இருக்கிற பரமாத்மாவைக் கண்டம் கண்டமாக உருவமும் குணமும் உள்ளவனாக தியானம் பண்ணிக் கடைசி நிலையாக நிர்குணத் தியானம் செய்ய ஆரம்பித்தால், சண்டை, பூசல் ஒன்றுமே வராது. துக்கம், பயம் எதுவுமே இராது. பரம சாந்திதான் இருக்கும். இதுதான் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள், உபநிடத மரத்திலிருந்து நமக்குப் பறித்துக் கொடுத்த பழம்.

இந்தப் பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்சாக, காயாக இருந்துதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. ‘வெம்பி விழுந்திடுமோ?’ என்று ராமலிங்கர் சொல்லுகிறார்.

நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும். வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியாக தத்-தத்வம் என்கிற உண்மை நிலைக்கு நாம் வரும்வரையில் அவை வேண்டும். அப்போதுதான் வெம்பாது பழுக்கும். கடைசியில் அந்த தத்வம்—மூலம்—எங்கே இருக்கிறது. ‘தன்னிடத்திலேயேதான் இருக்கிறது; எந்த அறிவு தத்துவத்தை ஆராய்கிறதோ, அந்த அறிவுக்குள்ளேயே இருக்கிறது’ என்பதை அனுபவத்தில் உணரலாம்.

கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது? நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் பிருகு கேட்டாராம்.

“நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம்.

“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த் தபஸ் பண்ண ஆரம்பித்தார். முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. ‘இந்தச் சரீரம்தான் உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டிலும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகம்தான்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய், “இந்தச் சரீரம்தான் உயர்ந்த, நிறைந்த வஸ்து” என்று சொன்னாராம்.

அப்பா திரும்பவும், “இன்னும் கொஞ்சம் தபஸ் பண்ணு” என்று சொல்லிவிட்டாராம்.

இப்படியே கொஞ்சம் ‘தபஸ்’ பண்ணுவது, உடனே தமக்குக் தோன்றியதைப் போய்ச் சொல்வது என்று ஐந்து தடவைகள் பிருகு செய்தாராம். முதலில் உடம்பு நிறைந்த வஸ்துவாகத் தோன்றிற்று. இந்த உடம்பு ஒருநாள் பிரேதமாகிப் போவதுதானேயென்று யோசித்தபின், உடம்பு நிறைந்த வஸ்து இல்லை என்றும், பிராணன்தான் நிறைந்த வஸ்துவாகவும் தோன்றிற்று. அதன்பின் மனமே நிறைந்த வஸ்து என்று தோன்றியது. பிற்பாடு அறிவே நிறைந்த வஸ்துவாகத் தோன்றியது. ஐந்தாம் முறை போனபோது ஆனந்தானுபவம்தான் நிறைவாகத் தோன்றியது.

“நீங்கள் சொன்னபடி நான் இத்தனை நாட்களாகத் தபஸ் பண்ணினேன். இப்போதெல்லாம் நடுநடுவே ஏதோ ஒரு விதமான ஆனந்தம் ஸ்புரிக்கிறதே. இது என்ன?” என்று தந்தையைக் கேட்டாராம் பிருகு.

“உனக்கு ஒவ்வொரு சமயத்தில் கொஞ்சம் ஸ்புரிக்கிறது என்று சொல்கிறாயே அந்த ஆனந்தம்தான் வஸ்து. இது உனக்குத் துளித்துளி உண்டாகிறது. இதுவே நிறைந்து விட்டதானால் அதைத்தான் பேரானந்தம் என்கிறோம். அந்தப் பேரானந்தம் எப்போதும் குறைவு இல்லாமல் காலத்தாலும் தேகத்தாலும் நிறைந்து இருக்கும்படியான ஒரே வஸ்து. சரீரம், பிராணன், மனசு, அறிவு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று ‘ஆத்மா’ என்று இருக்கிறது. அது தன்னைத்தானே அறிந்து அனுபவிப்பதில்தான் இந்த ஆனந்தம் உண்டாகிறது” என்று பிதா சொன்னாராம்.

சமுத்திரத்தில் ஒரு திவலை

அந்தப் பேரானந்த சமுத்திரத்தின் ஏதோ ஒரு திவலைதான் நமக்கு எப்போதாவது உண்டாகிறது. கிளைகள், இலைகள் எல்லாம் அடர்ந்து இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தால் கீழே கொஞ்சம்கூட வெயில் படாமல் நிழல் இருக்கிறது. காற்று அடிக்கும்போது, இலைகள், கிளைகள் நகர்ந்து விலகுகிற சமயத்தில் சூரியனுடைய வெயில் கீழே அந்த இடைவெளி அளவுக்கு விழுகிறது.

அப்புறம் மறுபடியும் கிளைகள் மூடி, அது மறைந்து விடுகிறது. அந்த மாதிரியாகத் தான் நமக்கு ஆனந்தம் அவ்வப்போது வந்து வந்து மறைந்து போகிறது. ஆனந்தம் என்பது எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்படியான வஸ்து. ஆனால் நம்முடைய கெட்ட கர்மா, மனம், புத்தி இவற்றினால் அது நம்மிடம் படாமல் மறைந்திருக்கிறது.

ஒரு க்ஷணம் நாம் பண்ணியிருக்கிற புண்ணிய கர்மாக்களினாலே அவை விலகும்போது, காற்று அடித்து இலைகள் விலகும்போது, சூரிய ஒளி அதன் வழியாக வருவதுபோல், நம்முடைய கர்மாக்கள் விலகியதால், எங்கும் பரவிய ஆனந்தத்தின் திவலை நமக்கு உண்டாகிறது. இதுவே வளர்ந்துவிட்டால் பேரானந்தமாகிறது.

அந்த ஆனந்த சமுத்திரத்தைக் கொஞ்சமாகத்தான் நாம் எப்போதாவது அடைந்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறோம். தபஸ் பண்ணிப் பண்ணி விசாரம் செய்தால் எப்போதும் ஆனந்த மயமாக இருக்கும் சமுத்திரத்திலேயே கலந்து அதாகவே இருக்கலாம்.

(தெய்வத்தின் குரல் முதல் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x