Published : 22 Aug 2015 11:51 AM
Last Updated : 22 Aug 2015 11:51 AM

நஸ்யம் தரும் நன்மைகள்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

நஸ்யத்தின் பிரிவுகள் பயன்படுத்தப்படும் அளவைப் பொறுத்து மர்சம் என்றும், பிரதிமர்சம் என்றும் நஸ்யம் இரண்டு வகைப்படும். மர்ச நஸ்யத்தில், பிரதிமர்ச நஸ்யத்தைவிட மருந்தின் அளவு அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

பிரதிமர்சம்

பிரதிமர்சம் என்பது ஒவ்வொரு மூக்கிலும் ஒரு துளியோ, இரண்டு துளியோ தினசரி எண்ணைய் விடுவது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், உடல் பலவீனமானவர்களுக்கும், மழைக் காலத்தில்கூட இதைப் பயன்படுத்தலாம். எப்பொழுது வாதபிரகோபம் உண்டாகிற ஒரு நிலை ஏற்பட்டாலும், அப்போது பிரதிமர்சம் செய்யலாம்.

காலை உணவுக்குப் பின், குளித்த பிறகு, மலம் கழித்த பிறகு, உடற்பயிற்சி செய்த பிறகு, தூங்கி எழுந்த பிறகு பிரதிமர்சம் செய்யலாம். ஆனால், குறிப்பாகப் பீனஸ நோய் (நீர்க்கோவை), நோயின் பாதிப்பு மிகவும் அதிகம் அடைந்த நிலைகள், முகத்தில் இருக்கிற கிருமி நோய்கள் போன்றவற்றுக்குப் பிரதிமர்சம் செய்யக்கூடாது.

மர்சன நஸ்யம் செய்யக்கூடாத நேரம்:

ஜலதோஷம், இருமல், அசதி, தொண்டை வலி, மழைக்காலம், உணவு உண்ட பின், குளித்த பின், கர்ப்பக் காலம், குழந்தை பிறந்த காலம்.

நஸ்யம் செய்தால் வரும் தொந்தரவுகள்:

இருமல், தலைவலி, மூச்சுமுட்டுதல், தீராத தும்மல், கழுத்துவலி, காய்ச்சல், மயக்க நிலை.

மர்ச நஸ்யத்தின் அளவு

குறைந்த அளவு- 6 துளி

மத்தியமான அளவு - 8 துளி

அதிக அளவு- 10 துளி

பொதுவாகத் தைலமோ, கிருதமோ பயன்படுத்தும்போது இந்த அளவை பயன்படுத்திக்கொள்ளலாம். கஷாயத்தை வைத்து மர்ச நஸ்யம் செய்யும்போது எட்டு துளி, ஆறு துளி அல்லது நான்கு துளி பயன்படுத்தினால் போதும்.

செய்ய வேண்டிய காலம்

கப நோய்களுக்குக் காலை வேளையிலும், பித்த நோய்களுக்கு, மதிய வேளையிலும், வாத நோய்களுக்கு மாலை அல்லது இரவு வேளையிலும் செய்யலாம். சில நாள்பட்ட கடினமான வாத நோய்களுக்குக் காலை மற்றும் மாலை வேளைகளில் இதைச் செய்யலாம். வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் காலையில் நஸ்யம் செய்ய வேண்டும். குளிர் காலத்தில் வெயில் அடிக்கும் மதிய வேளைகளில் செய்ய வேண்டும். வெயில் காலத்தில் மாலை வேளைகளில் செய்ய வேண்டும். மழைக் காலத்தில் பொதுவாக நஸ்யம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்ய வேண்டிவந்தால், சூரிய ஒளி இருக்கிற நாளன்று பிரதி மர்சமாக செய்யவேண்டும். மர்சமாக செய்யக்கூடாது.

செய்யும் முறை

நஸ்யம் செய்கிறபோது நோயாளி மிகவும் பசியோடு இருக்கக் கூடாது. நஸ்யம் செய்வதற்கு முன்பு மூக்கினால் தூமத்தை (மருந்துப் பொருட்களால் செய்யப்பட்ட திரியினால் ஏற்படுத்தப்படும் புகை) இழுத்து வாயினால் வெளியிடவேண்டும். பின்பு நோயாளியை ஒரு கட்டிலில் படுக்க வைக்க வேண்டும். அந்த அறை அதிகமான காற்றோட்டம் இல்லாததாக இருக்க வேண்டும். கழுத்தைச் சற்றுப் பின்புறமாக, நிமிர்த்தி வைக்க வேண்டும். கைகளை இரண்டு புறமும் நீட்டி வைக்க வேண்டும். தலையணை மூலம் காலை சற்று உயர்த்தி வைக்கலாம். நெற்றி, மூக்கின் இரண்டு துளைகள், கழுத்து, கை, மார்பகம் போன்ற பகுதிகளில் எண்ணெயைச் சூடாக்கி தடவி நன்றாக ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பின்பு ஒரு மூக்கை அடைத்துக் கொண்டு, மற்றொரு மூக்கில் மருந்தை இடைவெளியில்லாமல் விட வேண்டும். பின்பு மற்றொரு மூக்கு துவாரம் வழி மருந்தைவிட்டு இழுக்கவேண்டும். வாயில் வருகிற மருந்தை வலது புறமும், இடது புறமும் துப்ப வேண்டும். இந்த மருந்தை விழுங்கக் கூடாது. பின்பு நோயாளி இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள், அப்படியே படுத்திருக்க வேண்டும். பின்பு எழுந்து உட்கார்ந்து, வறட்டு மஞ்சளை ஒரு பேப்பரில் சுற்றிக் கொளுத்தி அதில் வருகிற புகையை மூக்கினால் இழுத்து வாயால் விடவேண்டும். பின்பு சூடான தண்ணீரால் வாயை நன்றாகக் கொப்பளிக்கவேண்டும்.

இவ்வாறு தூம பானம் செய்கிறபோது வெளியில் வராமல் அடைபட்டுப் போயிருந்த கபதோஷம், நன்றாக உருகி வெளியேவர உதவியாக அமையும். சூரணங்களை மூக்கினுள்ளே செலுத்த வேண்டுமானால் ஆறு அங்குலம் அளவு உடைய, இருபுறமும் துளையுள்ள சிறிய இயந்திரத்தினால் மூக்கினுள்ளே வைத்து ஊத வேண்டும்.

நஸ்யம் தரும் பலன்கள்

நஸ்யத்தினால் இயல்பாக - சிரமம் இல்லாமல் மூச்சு விடுதல், சிறிய அளவில் தும்மல் உண்டாதல், புலன்களின் தெளிவு, நோயிலிருந்து விடுதலை, இரவு கிடைக்கும் சுகமான தூக்கம், சுவையை உணரும் தன்மை போன்றவை நமக்குக் கிடைக்கின்றன.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x