Published : 22 Dec 2019 10:00 AM
Last Updated : 22 Dec 2019 10:00 AM

இனி எல்லாம் நலமே 37: பரிசோதனையால் தவிர்க்கலாம் புற்றுநோயை 

புற்றுநோய் என்ற சொல்லைக் கேட்டதுமே பதறக்கூடிய சூழல் இன்று இல்லை. மேம்பட்ட சிகிச்சை முறைகளும் மருந்துகளும் நோயின் பாதிப்பையும் தீவிரத்தையும் மட்டுப்படுத்துகின்றன.

சரியான பருவத்தில் கண்டுபிடித்துவிட்டால் சிலவகைப் புற்றுநோய்களை முழுவதுமாகக் குணப்படுத்தலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் இந்தியப் பெண்களில் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தாம் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

எதனால் வருகிறது?

1. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக் குக் கருப்பைவாய்ப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
2. சிறு வயதிலேயே பாலியல் உறவுகளில் ஈடுபட்டவர்களுக்கும் பலருடன் உறவு கொள்பவர்களுக்கும் கருப்பைவாய்ப் புற்றுநோய் வரக்கூடும்.
3. பால்வினை நோய்த்தொற்று இருப்பவர் களுக்குக் கருப்பைவாய்ப் புற்றுநோய் வரலாம்.
4. ஹெ.பி.வி (Human papilloma virus)
தொற்றால் வரக்கூடிய தொற்று நோய்களாலும் கருப்பைவாய்ப் புற்றுநோய் வரக்கூடும்.
5. பிறப்புறுப்பைச் சுத்தமாகப் பராமரிக் கவில்லையென்றால் நோய்த்தொற்று ஏற்படும். அதற்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் கருப்பைவாய்ப் புற்றுநோய் வரக்கூடும்.

தற்காத்துக்கொள்வது எப்படி?

1. பிறப்புறுப்புச் சுத்தத்தைக் கடைப்பிடித்தல்

2. HPV தொற்றுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுதல். கருப்பைவாய்ப் புற்றுநோய் அதிகமாக வருவதற்கு HPV வைரஸ் ஒரு காரணமாக இருப்பதால், முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி போட வேண்டும்.

HPV வைரஸால் ஏற்படும் கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தவிர்க்க மட்டுமே இந்தத் தடுப்பூசி. பிற காரணங்களால் கருப்பைவாய்ப் புற்றுநோய் வருவதை இந்தத் தடுப்பூசி போடுவதால் தடுத்துவிட முடியாது.

9-லிருந்து 26 வயதுக்குள் இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். சிலர் 45 வயதுவரை கூடத் தடுப்பூசி போடலாம் என்கிறார்கள். ஆனால், HPV தடுப்பூசி போடுவதற்கான சிறப்பான வயது 11 – 12. இந்த வயதில் போடும்போது ஒரு முறை போட்டாலே போதும்.

மற்ற வயதில் போடுவதாக இருந்தால் முதல் மாதம், இரண்டாம் மாதம், ஆறாம் மாதம் என்று மூன்று தடவை ஊசி போட வேண்டிவரும். இந்த HPV தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று சிலர் அஞ்சு கிறார்கள். அப்படி எதுவும் கிடையாது.

3. போதுமான இடைவெளியில் பாப் ஸ்மியர் (PAP SMEAR) பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

பரிசோதனை முறை

பாப் ஸ்மியர் பரிசோதனை முறையில் கருப்பை வாயில் இருக்கும் திசுக்களை எடுத்துப் பரிசோதிப்போம். இப்போது திரவநிலைப் பரிசோதனைமுறையும் வந்துவிட்டது. ஒருவருக்குக் கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் இருக்கிறதா, இப்போது எந்த நிலையில் இருக்கிறது போன்றவற்றை இந்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். சிறிய அளவில், மிதமான அளவில், தீவிரமான அளவில் என்று மூன்று நிலைகளில் முடிவுகள் வரலாம்.

சிறிய அளவில் இருந்து மிதமான அளவு இருக்கும்வரை கவலைப்பட வேண்டாம். அதற்கும் அடுத்த கட்டத்தில் இருக்கும்போது கண்டிப்பாக சிகிச்சைபெற வேண்டும். என்ன சிகிச்சை என்பது அவரவர் வயது, குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மாறும். சிலநேரம் செல்களில் மாற்றம் வர ஆரம்பித்ததுமே கண்டுபிடித்துவிட முடியும். கண்டுபிடித்துச் சில ஆண்டுகள் கழித்துகூட அது புற்றுநோயாக மாறலாம். ஆனால், முதலிலேயே கண்டுபிடிப்பதன் மூலம் தகுந்த சிகிச்சையளிக்க முடியும்.

புற்றுநோய் வருவதைத் தடுக்க இயலும். இதனால்தான் போதுமான இடைவெளியில் பாப் ஸ்மியர் பரிசோதனையைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. 40 வயதுக்குப் பிறகு முடிந்தால் ஆண்டுதோறுமோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ பாப் ஸ்மியர் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

இது வலியில்லாப் பரிசோதனை.

பாலியல் ரீதியான உறவில் இருக்கும் 30 வயதுக்குட்பட்ட பெண் என்றால் அவர்களுக்குக் கருப்பையை நீக்குவதைத் தீர்வாகப் பரிந்துரைக்க மாட்டோம். அந்தப் பெண்ணுக்குக் குழந்தைபேறெல்லாம் முடிந்த பிறகு கருப்பை அகற்றுவது பற்றி முடிவெடுக்கலாம். இதே பிரச்சினை 50 வயதைக் கடந்த பெண்ணுக்கு வந்தால், அறுவை சிகிச்சை செய்துவிட்டு அதற்குப் பிறகு ரேடியோதெரபி கொடுக்கலாம்.

நான்கு நிலைகள்

கருப்பைவாய்ப் புற்றுநோயில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பை வாயில் மட்டும் புற்றுநோய் இருக்கும். இரண்டாம் நிலையில் கருப்பைக்கும் அது பரவியிருக்கும். இடுப்பெலும்புப் பகுதிகளுக்குள் புற்றுநோய் பரவியிருப்பது மூன்றாம் நிலை. நான்காம் நிலையில் உடலின் பிற பாகங்களுக்கு அது சென்றிருக்கும்.
முதல் நிலையில் சிகிச்சை அளித்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.

கருப்பைவாய்ப் புற்றுநோயில் ரேடியோதெரபிக்கு முக்கியப் பங்குண்டு. கருப்பைவாய்ப் புற்றுநோயைப் பொறுத்தவரை தகுந்த இடைவெளிகளில் பாப் ஸ்மியர் பரிசோதனையைச் செய்துவந்தால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைபெற இயலும். புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள இயலும்.

அறிகுறிகள்

1. திடீரென உதிரப்போக்கு அதிகமாகும்.
2. மாதாந்திரச் சுற்றில் உதிரப்போக்கு நின்றபிறகு, வழக்கமில்லாத வகையில் உதிரத்துளிகள் இருக்கும்.
3. மாதவிடாய் முற்றுபெற்ற பிறகும் (மெனோபாஸ்) உதிரப்போக்கு வருவது. உடல் உறவுக்குப் பிறகு உதிரப்போக்கு வருவது.
4. துர்நாற்றத்துடன் கூடிய கசிவு.
5. அதிகமான இடுப்புவலி, முதுகுவலி
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மகளிர் நல மருத்துவரை அணுக வேண்டும்.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர்,
மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x