Published : 16 Nov 2019 10:10 AM
Last Updated : 16 Nov 2019 10:10 AM

வீட்டுக் கடன்: சில சந்தேகங்கள்

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலருக்கும் சந்தேகம் எழும். அதாவது செலுத்தும் தவணைத் தொகை போக ஒரு பெரிய தொகை கிடைக்கும் பட்சத்தில் அதைக் கடன் கணக்கில் கட்ட முடியுமா எனச் சந்தேகம் எழும். ஆனால், பெரும்பாலானவர்கள் கணக்கில் பெரும் தொகையைச் செலுத்தும்போது மாதாந்திரத் தவணைத் தொகை குறையும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அப்படிப் பெரும் தொகையைச் செலுத்தும் பட்சத்தில் தவணைத் தொகை குறையாது. ஆனால், தவணைக் காலம்தான் குறையும்.

பெரும் தொகை கிடைக்கும் பட்சத்தில், அதைத் தாராளமாக வீட்டுக் கடன் கணக்கில் வரவு வைக்கலாம். அது வீட்டுக் கடனை விரைவாக முடிக்கவும் உதவும். ஆனால், அந்தத் தொகை எந்த வழியில் வந்தது என்கிற கேள்வியும் எழும். அதற்கு உங்களிடம் சரியான பதிலும் இருக்க வேண்டும். பெரும் தொகையை வீட்டுக் கடன் கணக்கில் செலுத்தினாலும் உங்களுடைய மாதத் தவணைத் தொகை மாறாது. நீங்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணைகளின் எண்ணிக்கையைத்தான் குறைப்பார்கள். பொதுவாக, எந்த வங்கியுமே மாதாந்திரத் தவணைத் தொகையைக் குறைப்பதில்லை. சமன்படுத்தப்பட்ட தவணைத் தொகை (இ.எம்.ஐ.) ஏற்கெனவே உங்களுக்கு நிர்ணயிக்கப் பட்டுவிடுவதால், மாதத் தவணைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வழிமுறையே பின்பற்றப்படுகிறது.

இதேபோல வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இன்னொரு கேள்வி அடிக்கடி எழும். தனி நபர் கடன் வாங்கும்போது, அதன் மேலே ‘டாப் அப்’ கடன் வழங்கப்படுவதைப் போல வீட்டுக் கடனிலும் ‘டாப் அப்’ கடன் உள்ளதா என்ற சந்தேகம் எழும். வீட்டுக் கடனிலும் ‘டாப் அப்’ கடன் வழங்குவதுண்டு. வீட்டை அழகுபடுத்த, விரிவுபடுத்த அல்லது வேறு தேவைகளுக்கும்கூட கடன் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கிய வீட்டின் மேலேயே இந்தக் கடனும் வழங்கப்படும் என்பதால், அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு, ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடனில் எவ்வளவு தொகை திரும்பச் செலுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டுதான் ‘டாப் அப்’ கடனும் கிடைக்கும். கூடுதலாகக் கேட்கும் ‘டாப் அப்’ கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு உங்களின் வருவாய் உயர்ந்திருக்கிறதா என்பதையும் வங்கிகள் கவனத்தில் கொள்ளும்.

அடுத்து நமக்கு வரும் சந்தேகம், இரண்டாம், மூன்றாம் முறையாகச் சொந்த வீடு வாங்கும்போது அதற்கும் வங்கிக் கடன் கிடைக்குமா என்று. வாழ்க்கையில் வீடு என்பது அடிப்படைத் தேவை. அந்த வகையில்தான் வீடு கட்டவும் வாங்கவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. எனவே, முதல் வீடு கட்டவோ வாங்கவோ வங்கிகள் கடன் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே நேரம் இரண்டாவது வீடு கட்டவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதாவது தனக்காக ஒரு வீடும், வாரிசுகளுக்காக இன்னொரு வீட்டையும் ஒரு குடும்பத்தில் கட்டுவது இயற்கை என்பதால், அதற்கும் கடன் வழங்குகிறார்கள். எனவே, அந்த வகையில் இரண்டாம் வீடு கட்டவும் கடன் கொடுப்பதில் பிரச்சினையில்லை.

ஆனால், மூன்றாம் வீடு வாங்குவதற்கு வீட்டுக் கடன் திட்டத்தின்கீழ் எந்த வங்கியுமே கடன் தருவதில்லை. லாப நோக்குடன் வீடு கட்டக் கடன் கேட்பதாக வங்கிகள் தரப்பு நினைக்கும். ஒரு வேளை 3-ம் வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தாலும், அதை வணிகக் கடனாகவே கருதவும் வாய்ப்புண்டு. இதனால் வட்டி விகிதம் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்கும். வீட்டுக் கடனுக்கு அளிப்பதுபோல் தவணைகளும் நீண்ட காலத்துக்கு அளிக்க மாட்டார்கள். குறுகிய காலத்துக்கு மட்டுமே வழங்குவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x