Published : 08 Nov 2019 11:28 AM
Last Updated : 08 Nov 2019 11:28 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: இருட்டடிப்புக்கு வெளிச்சம்!

இருட்டடிப்புக்கு வெளிச்சம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப் படத்தின் கதைக்களம் குறித்த சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படியெல்லாம் தடுக்கின்றன, எதற்காகத் தடுக்கின்றன, இதுபோல் இருட்டடிப்பு செய்யப்படும் கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்யும் மாணவர், ஆசிரியர் கூட்டணிக்கு உதவும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாராம்.

தப்பித்த குண்டு

கழிவு இரும்பு வணிகத்தில் உழலும் விளிம்பு நிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கதைக் களமாகக் கொண்ட படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. பா.இரஞ்சித்தின் உதவியாளரான அதியன் ஆதிரை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தினேஷ், ஆனந்தி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராகப் பல சர்ச்சைக்குரிய வசனங்கள் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் தணிக்கையில் படம் கணிசமான வெட்டுக்களைச் சந்திக்கும் என்று பேச்சு இருந்தது. தற்போது, வெட்டுக்கள் ஏதுவுமின்றி இந்தப் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கைக் குழு. இதனால் படத்தை உடனடியாக வெளியிடும் முயற்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் ஈடுபட்டுள்ளார்.

பார்வதி நம்பும் படம்!

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்யின் தோழியாக நடித்து தமிழில் அறிமுகமானார் பார்வதி நாயர். அடுத்தடுத்து பல தமிழ்ப் படங்களில் நடித்தாலும் எதுவும் பார்வதிக்குப் பெயர் பெற்றுத்தரும் படமாக அமையவில்லை. தற்போது வைபவ் ஜோடியாக ‘ஆலம்பனா’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி படமான இதில் தனக்குக் கிடைத்திருக்கும் கதாபாத்திரம் பெயர் பெற்றுத் தரும் என்கிறார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் - சந்துரு இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் பாரி.கே.விஜய். இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களின் இணை இயக்குநர்.

இறுதிக் கட்டத்தில் ‘லாக்கப்’

நடிப்பு, தயாரிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தி வருபவர் நிதின் சத்யா. கடந்த ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ‘ஜருகண்டி’ படத்தைத் தயாரித்து பிச்சுமணி என்று புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தினார். தற்போது எஸ்.ஜி.சார்லஸ் என்பவரை ‘லாக்கப்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர். புலன் விசாரணைத் த்ரில்லர் படமாக உருவாகிவரும் இதில் வைபவ் நாயகனாகவும் வாணி போஜன் நாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

அதிகாரியாக அஞ்சலி

‘பேரன்பு’ படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் தோன்றிய அஞ்சலிக்கு ‘சிந்துபாத்’, ‘லிசா’ ஆகிய படங்கள் தோல்வியைத் தந்தன. இருந்தும் சீனு ராமசாமியின் தலைப்பு சூட்டப்படாத ஒரு படம் உட்பட தமிழில் மூன்று, தெலுங்கில் இரண்டு என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. அதில் ஒன்று ‘நிசப்தம்’. ஒரு இடைவெளிக்குப்பின் அனுஷ்கா வாய்பேச முடியாத ஓவியராக நடிக்கும் த்ரில்லர் படமான இதில், அதிரடி காவல் அதிகாரியாக நடித்திருக்கிறாராம் அஞ்சலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x