Published : 07 Nov 2019 12:28 PM
Last Updated : 07 Nov 2019 12:28 PM

இறைத்தூதர் சரிதம் 19: மக்காவுக்குத் திரும்பிய இறைத்தூதர்

சனியாஸ்னைன் கான்

சோதனைமிக்க ஒரு நீண்ட பயணத்துக்குப் பிறகு, இறைத்தூதர் மக்காவுக்குத் திரும்பினார். ஆனால், அவர் ஊருக்குள் நுழையவில்லை. வெளியே அமைந்திருந்த ஹிரா குகையில் தங்கினார். அபூ லஹப்பின் தூண்டுதலால் பனு ஹாஷிம் குழுவிலிருந்து இறைத்தூதர் வெளியேற்றப்பட்டார்.

தனது இனக் குழுவின் பாதுகாப்பில்லாமல் ஊருக்குச் செல்வது ஆபத்து என்பதால், இறைத்தூதர் ஹிரா குகையில் தங்க நேரிட்டது. குரைஷ் இனத்தைச் சேர்ந்த அக்னஸ் ஷரீக், சுஹைல் ஆகிய இருவருக்கும், தான் குகையில் இருக்கும் செய்தியை அனுப்பினார். மக்காவுக்கு வருவதற்குப் பாதுகாப்பு அளிக்குமாறு அவர்களிடம் இறைத்தூதர் கோரினார். ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அப்போது, இறைத்தூதருக்கு முத்யீம் அதீயின் நினைவு வந்தது. இறைத்தூதர் குடும்பத்தின் மீது விதிக்கப்பட்ட புறக்கணிப்பை நீக்க முத்யீம்தான் உதவினார். தாயிஃப் நகரத்தில் இருந்து மக்காவுக்குத் திரும்பிய செய்தியை, முத்யீமுக்கு இறைத்தூதர் தெரிவித்தார்.

எச்சரித்த முத்யீம்

இறைத்தூதரின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற முத்யீம் அவருக்குப் பாதுகாப்பு வழங்க ஒப்புக்கொண்டார். இறைத்தூதரைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக அவர் தன்னுடைய வலிமையான ஆறு மகன்களை மக்காவுக்கு அனுப்பினார்.
மக்காவில் நுழைந்தவுடன், இறைத்தூதர் கஅபாவை ஏழு முறை சுற்றிவந்தார். “நான் முஹம்மதுக்குப் பாதுகாப்பு அளிக்கிறேன். அவரை யாரும் இனி, காயப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கிறேன்” என்று அறிவித்தார் முத்யீம்.

முத்யீம் பாதுகாப்பு அளித்ததால், மக்காவில் மீண்டும் தன் இறைப்பணிகளைத் தொடங்கினார் இறைத்தூதர். பத்ர்ப் போர்த் தொடங்குவதற்கு முன், முத்யீம் இறந்துவிட்டார். முத்யீம் நினைவாக இறைத்தூதரின் தோழர்களில் ஒருவரான ஹசன், ‘மார்த்தியா’ என்ற கவிதையை எழுதினார். பத்ர்ப் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை இறைத்தூதர்முன் அழைத்துவந்தபோது, “முத்யீம் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இவர்களை விடுதலை செய்யச் சொல்லியிருப்பார். அதனால், நானும் அதையே செய்கிறேன்” என்றார் இறைத்தூதர்.

பரவத் தொடங்கிய இஸ்லாம்

இஸ்லாம் மார்க்கம் மக்காவில் பரவத் தொடங்குவதற்குமுன் பல திருவிழாக்கள் நடைபெற்றன. ஹஜ் காலத்தில் தூல் மஜாஸ் என்ற திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாக்களில் கவிதை வாசிப்பு, கதைசொல்வது, மல்யுத்தம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தத் திருவிழாக்களுக்கு வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருகை தரத் தொடங்கினார்கள்.
மக்களிடம் இறைவனின் திருச்செய்தியைப் பரப்புவதற்காக இறைத்தூதர் இந்தத் திருவிழாக்களில் கலந்துகொண்டார். அவர் ஒவ்வோர் இனக்குழுவையும் சந்தித்து இஸ்லாம் மார்க்கத்தின் செய்தியை விளக்கினார். எவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் இறைத்தூதர் தனது பணியைத் தொடர்வதை நிறுத்தவில்லை.

- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்,’ குட்வர்ட்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x