Published : 24 Oct 2019 12:32 PM
Last Updated : 24 Oct 2019 12:32 PM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மிதுன ராசி வாசகர்களே

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.

சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

மனிதநேயமும், மாறாத பக்தியும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு மெல்லவும் விழுங்கவும் முடியாமல் தவிக்க வைத்த குரு பகவான் இப்போது 29.10.2019 முதல் 13.11.2020 வரை 7-ம் வீட்டில் வந்தமர்வதால் குழம்பியிருந்த உங்கள் மனத்தில் தெளிவு பிறக்கும்.

நினைத்தபடி உங்கள் வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்களின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் எடுக்கமாட்டார்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்யுமளவுக்கு பணவரவு அதிகரிக்கும்.

அவர்களால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் சுருங்கியிருந்த முகம் மலரும். தோற்றப்பொலிவு கூடும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வீட்டில் தடைபட்ட விசேஷங்களெல்லாம் நடக்கும்.

வாரிசு பிறக்கும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்கு வீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீரும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் பதவி, பட்டம் பெறுவீர்கள். பழைய சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் திருவிழாக்களில் மரியாதை கிடைக்கும். ஏமாற்றங்கள், தாழ்வுமனப் பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர் களுடன் மனத்தாங்கல் நீங்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வீடு,மனை வாங்கும் யோகம் உண்டு.

29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் இருக்கும். ஊர் பொதுக்காரியங் களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் முன்கோபம் குறையும். சாந்தமாவீர்கள்.

பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வேற்றுமதத்தினர் உதவுவார்கள். பெற்றோருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சிலர் வீடு மாறுவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். பூர்விகச் சொத்து கைக்கு வரும். 6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் செல்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் நட்பு கிடைக்கும்.

28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல், சிறு விபத்து வந்து செல்லும். 07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகன விபத்து, மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, சைனஸ் சார்ந்த தலை வலி வந்து போகும். ஓரளவு பணவரவு உண்டு. முன்னேற்றம் தடைபடாது. இந்த குரு பெயர்ச்சி அதள பாதாளத்தில் கிடந்த உங்களை உச்சிக்கு கொண்டு வருவதுடன் எதிலும் நிம்மதியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

மதுரை மாவட்டம், மானாமதுரை செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் கொந்தகை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீதெய்வநாயகப் பெருமாளை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். துணிகளை தானமாக கொடுங்கள். பிணிகள் அகலும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x