Published : 02 Sep 2019 10:25 AM
Last Updated : 02 Sep 2019 10:25 AM

பொருளாதார சரிவில் அரசின் பங்கு என்ன?

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

ஜார்கண்டில் 40 வயதான விவசாயி ஒருவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை நம்பி தன்னுடைய விவசாய நிலத்தில் கிணறு வெட்டினார். இப்போது கிணறு இருக்கிறது. ஆனால், அவர் உயிரோடு இல்லை. வெட்டிய கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார். அவருடைய தற்கொலைக்குக் காரணம், அரசு தர வேண்டிய மானியத்தை தராததுதான். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலையும் கிட்டதட்ட இதுதான்.

இந்தியப் பொருளாதார சூழல் தற்போது எப்படி இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. நுகர்வு குறைந்துள்ளது. உற்பத்தி அதள பாதாளத்தில். தனியார் முதலீடு முற்றிலும் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் பொருளாதாரத்தை மீட்க பல சலுகைகளை, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், அடிப்படையில் ஒரு விஷயத்தை அரசு நினைவில்கொள்ள மறுக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஒரு தனிநபருக்கு அரசு சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய உதவியை, நிதியைத் தராமல் போனதால் எப்படி அந்தக் குடும்பமே வாழ்க்கையை இழந்து நிற்கிறதோ, அத்தகைய நிலையில்தான் இன்றைய பொருளாதாரமும் இருக்
கிறது. அதற்கு காரணமாக அரசே இருக்கிறது என்பதுதான் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் சில லட்சம் கோடிகள் உள்ளன.

குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்களின் நிலை இன்று மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்கள்தானே என்று அவற்றிடமிருந்து பெறும் சேவைகளுக்கும் பொருட்களுக்குமான தொகையை சரியான நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதையே வழக்கமாக வைத்துள்ளன. இதன் விளைவு, நிறுவனங்கள் கடன் சுமையில், தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல், நஷ்டத்தில் கிடந்து உழல்கின்றன. பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். முதலீடு குறைகிறது, உற்பத்தி குறைகிறது. இப்படி பொருளாதாரத்தின் ஒவ்வொரு நிலைகளையும் பாதிக்கிறது. எந்தத் துறையில் எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு தொகை நிலுவை இருக்கிறது என்பதைப் பார்த்தாலே, தற்போதைய பொருளாதார சரிவில் அரசின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது புலனாகும்.

அரசு மானியம்

இந்தியாவின் தற்போதைய பொருளாதார இயக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தி எரிபொருள். எரிபொருளுக்கு அரசு குறிப்பிட்ட மானியத்தை வழங்கிவருகிறது. ஆனால், இந்த மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிப்பதில் அரசு தாமதம் செய்கிறது. இந்த நிதி ஆண்டில் எரிபொருள் மற்றும் உர மானியத்தில் ரூ. 62 ஆயிரம் கோடியை அரசு செலுத்தாமல் நிலுவை வைத்து அடுத்த நிதி ஆண்டு கணக்குக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் அடக்கம். அரசிடமிருந்து வரவேண்டிய நிதி வராத பட்சத்தில் அவை கடன் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றன. தொழிலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், கடன் நெருக்கடியால் திவால் ஆகும் நிலைக்கு ஆளாகின்றன. இந்த பட்ஜெட்டில் உரமானியம் ரூ.74 ஆயிரம் கோடியாகக் கணிக்கப்பட்டது.

ஆனால் சென்ற ஆண்டு செலுத்த வேண்டிய தொகையிலேயே ரூ. 32 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதால், இந்த நிதி ஆண்டில் நிலுவைத் தொகை இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. எரிபொருள் மானியம் வழங்கவேண்டிய தொகையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு ரூ.63,100 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இருக்கும் கடன் அளவு மொத்தமாக ரூ.1.62 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரூ.92,712 கோடியும். பாரத் பெட்ரோலியம் ரூ.42,915 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.26,036 கோடியும் என கடன்கள் உள்ளன. இத்தகைய கடன்நெருக்கடியில் அரிசிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையும் சரிவர கிடைக்காமல் இருப்பதால் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடுகின்றன. இதுபோக ஏர் இந்தியா நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி பாக்கிவைத்துள்ளது. ஆட்டோமொபைல் துறை விற்பனை ஏற்கெனவே சரிவைச் சந்தித்துவரும் நிலையில், எரிபொருள் மானியத்துக்கான தொகையை அரசு தராமல் இருப்பது எப்படியான விளைவுகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களிடையே ஏற்படுத்தும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

உணவு மானியம்

அதேபோல் விவசாயிகளின் முக்கிய நம்பிக்கையாக விளங்கும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய உணவு
வாணிப கழகத்துக்கு வழங்கப்படும் மானியத்திலும் நிலுவையைவைத்துள்ளது அரசு. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கான மானியத்தில் ரூ. 69,394 கோடி நிலுவையில் உள்ளது. மத்திய தணிக்கை ஆணையத்தின் தகவல்படி அரசின் மொத்த மானியத்தில் இந்த ஆண்டில் 74 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது மீதமுள்ள 26 சதவீதம் நிலுவையில் உள்ளது. சென்ற ஆண்டு 83 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் நிலை

கரும்பு, கோதுமை உள்ளிட்டவற்றை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு அதற்கான விலையை வழங்குவதிலும் அரசுகள் மிகவும் தாமதப்படுத்துகின்றன. கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய விலை நிலுவையில் இருப்பதில் முதலிடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. 2018-19 நிலவரப்படி உத்திரப்பிரதேச அரசு சர்க்கரை ஆலைகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,364 கோடியாக உள்ளது.

பிஎஸ்என்எல், ஏர் இந்தியா

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கும் அரசு தரப்பில் தர வேண்டிய நிலுவைத் தொகை பெருமளவில் இருந்தது. சமீபத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நெருக்கடி ஏற்பட்ட நிலையில்தான் அரசு தான் தரவேண்டிய தொகையை வழங்கியது. ஏர் இந்தியா நிதி நெருக்கடியில் திவாலாகும் தருணத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து செயல்பட அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தினால் பயனாக இருக்கும் என்று கூறியும் அரசு அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
மின் விநியோகத் துறையின் நிலை இன்னும் மோசம். கிட்டதட்ட மாநில அரசுகள் ரூ.30 ஆயிரம் கோடி மின் விநியோக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. வீடுகளில் மின் கட்டணம் செலுத்த ஒரு நாள் தவறினாலும் பியூஸ் கேரியரை பிடுங்கி விடுகிறார்கள். ஆனால், அரசுகளை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதிலும் உத்தரப்பிரதேச அரசு ரூ. 11,176 கோடி நிலுவைத் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா ரூ.5,419 கோடி தர வேண்டி உள்ளது. தமிழகம் ரூ.1,396 கோடி நிலுவை வைத்துள்ளது.

பிற துறைகள்

ஜூட் எனப்படும் சாக்குப்பைகள் தயாரிக்கும் மில்களுக்கு அரசு தர வேண்டிய தொகை ரூ.1,950 கோடி. 2 லட்சம் பேர் இந்தத் துறையை நம்பி உள்ளனர். ஜூட் மில் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறிவருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மொத்த ஜூட் உற்பத்தியில் 70 சதவீதத்தை அரசுதான் கொள்முதல் செய்கிறது. உணவு தானியங்களை பேக்கிங் செய்வதற்காக. ஆண்டுக்கு ரூ.6,500 கோடி அளவில் வாங்குகிறது. இவர்களுக்கு கடன் ரூ.1,200 கோடி உள்ளது. பணியாளர்களுக்கான ஊதிய பாக்கி ரூ.750 கோடியாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுகளின் இலவச காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகளுக்கு வழங்கவேண்டிய தொகையில் ரூ.1,400 கோடி நிலுவை வைத்துள்ளது. அதேபோல் அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் மருந்துகளுக்கான தொகையும் நிலுவையில் உள்ளது.
ஜவுளித் துறைக்கு வழங்கவேண்டிய ’டெக்னாலஜி அப்கிரேட்’ மானியம் ரூ.9,000 கோடியை அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்த மானியம் வழங்கப்பட்டால் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அனைத்துமே ஊக்குவிக்கப்படும் என்கிறார் ஜவுளித் துறை கூட்டமைப்பின் தலைவர் நட்ராஜ். ஜவுளித் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தினால் கடந்த இருபது ஆண்டுகளில் ரூ.3.75 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், சரியான நேரத்தில் அரசு தர வேண்டிய மானியத்தைத் தராததால் பல வகைகளிலும் பணத்தட்டுப்பாடு உண்டாகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் இல்லாத நிலையில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் வேலை இழக்கும் அபாயம் உண்டாகிறது என்று அவர் கூறுகிறார்.

அரசு எப்போது உணரும்?

பங்குச் சந்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவரான மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் இணை நிறுவனர் ராம்தியோ அகர்வால் கூறுகையில், ‘அரசு நிறுவனங்களுக்குத் தர வேண்டிய தொகையை சரியாகக் கொடுத்தாலே உள்நாட்டில் இருக்கும் பாதி பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கிறார். உடனேகூட கொடுக்க வேண்டாம், 30 நாட்களுக்குள் கொடுத்தால்கூட போதும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறார். பங்குச் சந்தையில் 40 வருடங்களில் இப்போது நடப்பது போன்ற ஒரு வீழ்ச்சியைக் கண்டதில்லை என்கிறார் ராம் தியோ அகர்வால்.

சந்தையை ஊக்குவிக்க, தொழிலை ஊக்குவிக்க நுகர்வை ஊக்குவிக்க என அரசு கூறி வருவதெல்லாம் தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்குத்தான். அரசு முதலீடு செய்ய முன்வராதது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் நிறுவனங்களுக்குத் தர வேண்டிய தொகையைத் தராமல் காலம் தாழ்த்தி பல முக்கிய நிறுவனங்களை மெல்ல சாகடித்துக்கொண்டிருக்கிறது.
மக்களிடம் எப்படி வரியை சரியான நேரத்தில் செலுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறதோ அதைப் போலவே அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை, மானியம், நிதி உதவி போன்றவற்றையும் சரியான நேரத்தில் தர வேண்டுமல்லவா? ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நிதி நிலையை சமாளிக்க, நிதிப் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் அடுத்த நிதி ஆண்டுக்குக்கொண்டு செல்வதால் அந்த நிதி பற்றாக்குறை சரியாகிவிடுமா?

முதலீடு குறைவு, உற்பத்தி குறைவு, கடன் அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு என அனைத்துமே ஒன்றோடொன்று பிணைந்தவை. வட்டியைக் குறைப்பதாலும், அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதாலும் மட்டுமே தற்போதுள்ள பொருளாதார சரிவைச் சரிசெய்துவிடமுடியாது என்பதை அரசு உணரும் தருணம் எப்போது வரும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x