Published : 29 Aug 2019 10:36 AM
Last Updated : 29 Aug 2019 10:36 AM

வார ராசி பலன்கள் ஆகஸ்ட் 29 முதல் செப் 04 வரை ( மேஷம் முதல் கன்னி வரை)  

மேஷ ராசி வாசகர்களே

இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் வாக்குவன்மை சிறக்கும். ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சாரம் செய்யும் புதன், அவருடன் சேர்க்கை பெற்ற சூரியன் - செவ்வாய் - சுக்கிரனால் எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அகலும். தாமதப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில், மறைமுக எதிர்ப்புகள் நீங்கிச் செயல்களில் வேகம் பிடிக்கும்.

குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு மாறும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளைக் கேட்பார்கள். அவர்கள் வேண்டுவதைச் செய்துதருவீர்கள். பெண்களுக்கு, காரியத் தடை நீங்கும். கலைத் துறையினருக்கு, எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு, பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான கவலை நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: மகாகணபதியைப் பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி புதனின் சஞ்சாரத்தால் பணவரவு கூடும். செயல்திறன் அதிகரிக்கும். ராசிக்கு நான்கில் ஆட்சிசெய்யும் சூரியனால் இழுபறியான ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். அரசுப் பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் தேவையானவற்றைச் செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத் துறையினருக்கு, வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, செயல்திறன் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வருவதால் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் சனி பகவான் ஏழாம் பார்வையாகப் பார்க்கிறார். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அரசுக் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் மகிழ்ச்சி ஏற்படும்.

வீடு, வாகனம் தொடர்பில் செலவுகள் ஏற்படலாம். நெருப்பு தொடர்பான பொருட்களைக் கையாளும்போது கவனம் தேவை. பெண்களுக்கு, எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத் துறையினருக்கு, எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடத் தாமதமாகலாம். அரசியல்வாதிகளுக்கு, எடுத்த காரியங்களில் சிறிது சிரமம் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 1, 5, 6
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாத்தி வணங்க மன தைரியம் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்துக்கு விரோதமாகக் காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படலாம். திட்டமிட்டு எதையும் செய்தால் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பம் தொடர்பான கவலை ஏற்பட்டாலும் குருவின் சேர்க்கையால் அது நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

சகோதரர்கள், உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு, எதையும் யோசித்துச் செய்ய வேண்டும். கலைத் துறையினருக்கு, வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு, பொருளாதார வகையில் சுணக்க நிலை மாறும். உறவினர் வகையில் உதவி இருக்கும். மாணவர்களுக்கு, கல்விக்கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 4, 6
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க மனோதிடம் உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாக் காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். ராசியிலுள்ள கிரகக் கூட்டணி சஞ்சாரத்தால் எதிலும் லாபம் கிடைக்கும். கடன், நோய் தீரும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

பெண்களுக்கு, நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். கலைத் துறையினருக்கு, நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழக வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதி பிறக்கும். மாணவர்களுக்கு, பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாகப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: ருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். ராசியாதிபதி புதன் ராசிக்கு ஆறில் சூரியன் - கேது சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வதால் முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். பேச்சாற்றலால் தொழிலில் லாபம் கூடும். போட்டிகளைத் தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்டுத் தடுமாற்றம் அடைய வேண்டாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களிடம் பழைய பகை மாறும். பெண்களுக்கு, முடிவு எடுப்பதில் குழப்பம் நிலவும். கலைத் துறையினருக்கு, அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு, எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை
எண்கள்: 5, 9
பரிகாரம்: துர்க்கை அம்மனைச் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசையின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x