Published : 27 Jul 2019 08:12 PM
Last Updated : 27 Jul 2019 08:12 PM

அகம் புறம்: தாய்ப்பால் -  குழந்தைகளின் பிறப்புரிமை

பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும்விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘தாய்ப்பால் கொடுக்க பெற்றோரை ஊக்குவிப்போம்’ என்பதுதான் இந்த ஆண்டுக்கான முழக்கம்.

‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடும் வழக்கம் 2016-ல் தொடங்கப்பட்டது. போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காமல் பச்சிளம் குழந்தைகள் இறந்து விடுவதைத் தடுக்கவே இது கொண்டாடப்படுகிறது.

போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காததால் பிறந்து சில நாட்களிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கிறது என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள் ளது. “குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதால் பச்சிளம் குழந்தை களின் இறப்பை 20 சதவீத அளவுக்குத் தடுக்க முடியும். குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சிக்கும் தாய்ப்பால் கொடுப்பது முக்கியம். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளைப் போல தாய்மார்களுக்கும் நிறைய பலன்கள் உண்டு” என்கிறார் தாய்ப்பாலூட்டுதல் ஆலோசகர் காயத்ரி.

வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு

பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனால் பலர் மூன்று மாதக் குழந்தைகளுக்குப் பசும்பாலையோ பாக்கெட்டு களில் கிடைக்கும் பாலையோ கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அடிக்கடி நோய்த்தொற்று, வயிற்றுப் போக்கு, செரிமானக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் தாய்ப்பாலை எடுத்துப் பிழிந்து வைத்துவிட்டு வருகிறார்கள்.

ஆனால், அது குழந்தைக்குப் போதுமானதாக இருக்குமாவென அவர் களுக்குத் தெரியாது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் என்ன மாதிரியான விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம் என ஆலோசனை வழங்குகிறார் காயத்ரி.

# வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் ‘Breast feeding pump’ கருவியைப் பயன்படுத்துகிறார்கள். அதற்குப் பதில் கைக ளாலேயே தாய்ப்பாலை எடுத்து வைப்பதுதான் சிறந்தது.

# தாய்ப்பாலைச் சேமித்து வைக்கும் கப் அல்லது சில்வர் பாத்திரத்தை வெந்நீரில் ஐந்து நிமிடம் போட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது.

# தாய்ப்பால் எடுப்பதற்கு முன்பு அந்தப் பாத்திரத்தைத் தண்ணீரில் கழுவிய பிறகு எடுத்துச் சேமிக்க வேண்டும்.

# சேமித்த தாய்ப்பாலைப் பால் புட்டியில் ஊற்றிக் கொடுக்கக் கூடாது. வீட்டில் உள்ள பெரியவர்கள் பாலாடை அல்லது டீஸ்பூனில் பாலைச் சிறிதளவு எடுத்துப் புகட்டுவது நல்லது.

# தாய்ப்பாலை எடுத்து குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசிய மில்லை.

# தாய்ப்பாலைக் குறைந்தபட்சம் எட்டு மணிநேரம்வரை அறை வெப்பநிலையில் வைத்துக் கொடுக்கலாம்.

# தாய்ப்பால் புளித்துவிடும் என்பதெல்லாம் கற்பிதம்.

# எட்டு மணி நேரத்துக்கு மேல் வீட்டுக்கு வர முடியாத பெற்றோர் பாலைக் குளிர்சாதனப் பெட்டியில் மைனஸ் ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்துக் கொடுக்கலாம்.

# குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பாலை நேரடியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து அதன் மேல் குளிர்ந்த பால் பாத்திரத்தை ஐந்து நிமிடம் வைத்து, பிறகு கொடுக்கலாம்.

# குறைந்தபட்சம் ஒரு வேளைக்கு 60 முதல் 120 மி.லி. கணக்கில் தாய்ப்பாலை எடுத்துவைத்துவிட்டு வருவது நல்லது. ஆனால், குழந்தை பால் குடிக்கும் நேரம், அவர்களின் உடல்வாகுக்கு ஏற்றாற்போல் பாலின் அளவு மாறுபடும். அதைத் தாய்தான் கவனித்துச் செயல்பட வேண்டும்.

# அலுவலகத்தில் பால் சுரப்பு அதிகம் இருப்பதைப் போல் உணர்ந்தால் பாலைக் கழிவறையில் பிழிந்துவிடுவது நல்லது.

# நீண்ட நேரம் கழித்துப் பால் கொடுக்கும்போது பாலை எடுத்து விட வேண்டும். அப்போதுதான் குழந்தையால் நன்றாகப் பாலை உறிஞ்சிக் குடிக்க முடியும்.

குழந்தை பிறந்த உடனே தாயின் மார்பின் மேல் குழந்தையைப் படுக்கவைக்க வேண்டும். ஆனால், பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. குழந்தைக்கான ஆரம்பகட்டப் பரிசோதனைகளை முடித்த பின்புதான் தாயிடம் கொடுக்கிறார்கள். இதனால், குழந்தை பிறந்து முதல் ஒரு மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய பால் தாமதமாகக் குழந்தைக்குக் கிடைக்கிறது. குழந்தை பிறந்து குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்க்கு என்ன நன்மை?

# தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய்ப் புற்றுநோய், எலும்புத் தேய்மானம் போன்றவற்றின் தாக்கம் குறையும்.

# குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதால் அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த முடியும்.

# மகப்பேற்றின்போது அதிகரித்த உடல் எடை, தாய்ப்பால் கொடுப்பதால் குறைந்துவிடும்.

# குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு வலுப்படும்.

# குழந்தைக்குத் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் பெண்களுக்குத் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

# தாய்ப்பால் கொடுக்கும்போது மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பது அவசியம். இதனால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

# மார்பகம் சிறியதாக இருந்தாலும் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரக்கும். மார்பகத்தின் அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமில்லை.

# மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கறுப்புப் பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையால் பாலை நன்றாக உறிஞ்சிக் குடிக்க முடியும்.

# மார்புக் காம்பு மட்டும் குழந்தையின் வாயில் இருந்தால் பின்னாளில் காம்பில் காயம் உண்டாகி ரத்தக் கசிவு ஏற்படக்கூடும்.

# மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் தாய்ப் பாலை தடவிவிட்டால் நிவாரணம் தெரியும்.

குழந்தைக்கு என்ன நன்மை?

# தாய்க்குச் சுரக்கும் ‘Colostrum’ எனப்படும் முதல் பாலில்தான் அதிக ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இதைக் கண்டிப்பாகக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

# குறைந்தபட்சம் ஆறு மாதமாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்த நாட்களில் ஒரு துளி தண்ணீர்கூடக் குழந்தைக்குத் தரக் கூடாது. தாய்ப்பாலிலேயே தண்ணீர் உட்பட அனைத்தும் உண்டு.

# தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளைச் செயல்பாடு சிறப்பாக இருக்கும். குழந்தையின் அறிவுத்திறன் அதிகரிக்கும். பார்வை நன்றாக இருக்கும்.

# குழந்தையின் செரிமானத்துக்குத் தாய்ப்பாலே நல்லது.

# தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவது அரிது.

# வாயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை களுக்குத் தாய்ப்பால்தான் சிறந்த உணவு. அது உடனடியாக வாயிற்றுப்போக்கைச் சரிசெய்யும்.

# ஆறு மாதம் முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது குறைவு.

# ஆறு மாதத்துக்குப் பிறகு இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x