Published : 26 Jul 2019 06:26 PM
Last Updated : 26 Jul 2019 06:26 PM

கட்டுமானப் பணிகளைக் கவனிப்போம்

அனில் 

வீடு கட்டுவது என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு. அதனால் அதை வாழ்க்கையின் பெரும் கனவு எனச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட வீடு கட்டுவதற்கு முன் அந்த வீடு எப்படி வர வேண்டும், அதில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும் எனப் பல முன் யோசனைகள் இருக்கும். ஆனால் கட்டுமானப் பணிகள் நடக்கும்போது வீடு எப்படி வளர்ந்துவருகிறது, என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் கவனம் செலுத்துவதில்லை. 

இன்றைக்குப் பெரும்பாலும் வீட்டுக் கட்டுமானப் பணிகளை மொத்தமாக ஒப்பந்ததாரர்களை ஒப்படைத்துவிட்டு அவர்கள் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள் என நினைக்கிறோம். பெயருக்கு வீட்டுப் பணிகளைப் பார்த்துவிட்டு வருகிறோம். அப்படி எதாவது அபிப்ராயம் தோன்றினாலும் அவர்களுக்குத் தெரியாததா என நினைத்து ஒதுங்கிவிடும்.

எல்லாவற்றையும் வீட்டைக் கட்டும் தொழிலாளிகளும் மேற்பார்வையாளர்களும் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணமும் இயல்பாகவே நம்மிடம் உள்ளது. ஆனால், வீடு கட்டும் தொழிலாளர்கள் தங்கள் வேலையை முறையாகச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் அவர்களுக்கு அது தொழில். அவர்கள் தொடர்ந்து பல வீடுகளைக் கட்டிவருபவர்கள். ஆனால் நமது நிலைமை அப்படியல்ல. நாம் கட்டுவது ஒரு வீடு. அது நமது பெரும் கனவுகளில் ஒன்று. ஆகவே அதில் தேவைப்படும் கவனத்தை நாம் பதிப்பது அவசியமானது. 

கட்டுமானப் பணிகளின் போது முறையான கவனமின்றி மேற்கொள்ளப்படும் செயல்களால் வீட்டின் பலம் பாதிக்கப்படும். என்னதான் உறுதியான கம்பிகளையும் சிமெண்டுகளையும் நீங்கள் வாங்கிக் கொடுத்தாலும் வீடு கட்டும் முறையை ஒழுங்காக மேற்கொண்டால் மட்டுமே வீடோ, கட்டிடமோ அதற்குரிய உறுதித்தன்மையுடன் எழும்பும். இல்லையெனில் எதிர்பார்ப்புடன் நாம் கட்டிய வீடு, நாம் எதிர்பாராத விதத்தில் நம்மை வாட்டமடையச் செய்துவிடும். ஆகவே, கட்டிட நிபுணர்களின் ஆலோசனையுடன் நமது வீடு கட்டும் பணியை நாமே அவ்வப்போது மேற்பார்வை செய்வது நல்லது.

கான்கிரீட் கட்டுமானத்தின்போது முறையாகப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால் நான்கு வகையான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். முதலில் மெல்லிய விரிசல் விழ வாய்ப்புண்டு. மெல்லிய விரிசலால் பெரிய பாதிப்புகள் இல்லை, என்றாலும் கான்கிரீட் கட்டுமானத்தில் போதுமான நீர் ஊற்றி அதை முறையாகப் பதப்படுத்தும்போது இத்தகைய விரிசல்கள் விழாமல் தடுக்கலாம். அடுத்ததாக சுவர்களில் ஏற்படும் விரிசல். இது மழைக் காலங்களில் அதிகமாக ஏற்படும். ஏனெனில் சுவர்களை சாந்துப் பூச்சு கொண்டு பூசும்போது சிமெண்டுடன் மணலைச் சேர்த்துப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்த மணலின் அழுத்தம் மழைக் காலத்தில் அதிகரிக்கும், ஆகவே அப்போது விரிசல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் குளிர்காலத்தில் சுவர்கள் விரிவடையாமல் சுருங்கவே செய்யும் எனவே விரிசல்களின் அளவு குறையக்கூடும்.
சுவர்களின் விரிசல்கள் விழுவதற்குக் காரணம் முறையாக அஸ்திவாரம் அமைக்காததே என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இத்தகைய விரிசல்களால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை வரும் தடுப்பதே சாலச்சிறந்தது. இதைத் தடுக்க அஸ்திவாரம் முறையாக அமைக்கப்படுகிறதா என்பதை நிபுணர்களின் உதவியுடன் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டின் கூரைப் பகுதியை முறையாக அமைக்காவிட்டால் உயரத்தில் உள்ள கூரைப் பகுதியில் விரிசல் ஏற்பட்டுவிடும். சில வேளைகளில் சுவரும் கூரையும் சந்திக்குமிடத்தில் விரிசல்கள் தோன்றும் அல்லது கூரையின் நடுப்பகுதியில் விரிசல்கள் தோன்றும். கான்கிரீட் சிலாப்களில் ஏற்படும் இழுவிசை காரணமாக கூரையின் நடுப்பகுதியில் விரிசல்கள் விழுந்துவிடும். முறையாகப் பூசாவிட்டால் சுவரும் கூரையும் சந்திக்குமிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டுவிடும். இவை அனைத்தையும் கட்டுமானத்தின் போதே கவனத்தில் கொண்டு இவற்றைத் தவிர்க்க கட்டுமானத் தொழிலாளிகளிடம் எச்சரிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x