Published : 12 Jun 2015 02:21 PM
Last Updated : 12 Jun 2015 02:21 PM

என் வீக்எண்ட்: பிரியாணி இல்லை என்றால் ஞாயிறு இல்லை

என் பெயர் பிரதீப் குமார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். வேலைக்குச் செல்பவர் களுக்கு வார இறுதி நாட்கள் எவ்வளவு குஷியைத் தரும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாராவாரம் வந்து போகும் சனி , ஞாயிறுதான் என்றாலும் ஒவ்வொரு வாரமும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

எனக்கு வார இறுதி நாட்கள் வெள்ளி இரவே தொடங்கி விடும். மறு நாள் காலை விடுமுறை என்பதால் லேட் ஆகத் தூங்கிக் காலையில் லேட் ஆக எழுவது என்பது தனி ஆனந்தம்! சனிக்கிழமை முழுவதும் நண்பர்களின் முகநூல், ட்விட்டர் போஸ்ட்களுக்குப் பதில் அளிப்பது, கலாய்ப்பது என்று ஆரவாரமாக நகரும்.

ஞாயிறு என்றாலே ஒரு தனி உற்சாகம் பிறக்கும். பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றும். பிரியாணி இல்லை என்றால் ஞாயிறு இல்லை என்றே சொல்லும் அளவுக்குப் பிரியாணி பிரியன் நான். ஒரு வாரத்துக்கு ஒரு ஹோட்டல் பிரியாணி என டைம்டேபிள் போட்டு அருகில் இருக்கும் அத்தனை ஹோட்டல்களிலும் பிரியாணி சுவைத்துவருகிறேன். சென்னையில் வசிப்பதால் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று ஹெட் போனில் பாட்டுக் கேட்டபடியே காற்று வாங்குவது மிகவும் பிடிக்கும்.

அது மட்டுமல்லாமல் நம்மைப் போலவே நண்பர்கள், உறவினர்கள் எல்லாருக்கும் ஞாயிறு விடுமுறை என்பதால், அவர்களுக்கு போன் செய்து பேசுவேன். வெளிநாடுகளில் உள்ள நண்பர்களை ஸ்கைப், முகநூல், வாட்ஸ் அப்பில் ‘தொடர்பு கொள்வேன். அவர்களோடு பேசும்போது பள்ளி, கல்லூரி நாட்களுக்குத் திரும்பிச் சென்றது போன்ற உணர்வு ஏற்படும்.

சினிமா இல்லாமல் வார இறுதி நாட்கள் முடிந்துவிடுமா என்ன? வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் உள்ளூர் படம் முதல் உலகப் படம்வரை நண்பர்கள் முதல் சமூக வலைத்தளம்வரை அலசி ஆராய்ந்து ஒரு படத்தை பார்த்துவிடுவது வழக்கம். படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தொலைக்காட்சிப் பெட்டியைக் குடைந்து 80-90-களில் வெளிவந்த படங்களைத் தேடிப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.

இவை எல்லாவற்றையும் மீறி வார இறுதி நாட்களில், எண்ணெய் தேய்த்துக் குளி, மாலை வேளையில் மட்டும் வெளியில் போய் வா, வெயிலில் அதிகம் சுத்தாதே, போன், லேப் டாப் என்றே எந்நேரமும் இருக்காதே, நன்றாகத் தூங்கு என அம்மாவின் அன்புக் கட்டளைகளையும் கேட்பதுபோல பாவனை செய்வேன். ஞாயிறு முடிகிறதே எனத் தோன்றினாலும் அடுத்த வாரக் கடைசியில் என்ன பண்ணலாம் என்பதும் பெரும்பாலும் இந்த வாரமே முடிவாகிவிடும். காதலிக்காகக் காத்திருப்பதைப் போல வாரம் தொடங்கும்போதே வாரக் கடைசிக்காகக் காத்திருக்க ஆரம்பித்துவிடுவேன்.

---

‘இது என் வீக்எண்ட்’ பகுதியில் நீங்களும் உங்கள் வீக்எண்ட் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் வீக்எண்ட் கொண்டாட்டங்களை ‘இளமை புதுமை’ வரவேற்கிறது. உங்களைப் பற்றிய விவரங்களுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள்.

வயது வரம்பு: 16 - 30.

தொடர்புக்கு: ilamaiputhumai@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x