Published : 09 Mar 2015 10:42 AM
Last Updated : 09 Mar 2015 10:42 AM

பட்ஜெட் 2015-16: மறைமுகமாக ஏற்றப்பட்ட சுமைகள்

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும், வரிச்சலுகைகள் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்க அது போன்ற எந்த அறிவிப்பையும் அருண் ஜேட்லி அறிவிக்கவில்லை. ஆனால் மாறாக 4.4 லட்ச ரூபாய்க்கு வரிச்சலுகை பெற முடியும் என்று அறிவித்தார்.

பட்ஜெட் உரையை தொலைக்காட்சியில் பார்த்து வந்த அனைவருக்கும் 4.4 லட்சம் எப்படி வந்தது என்று குழம்பி இருக்க, ஏற்கெனவே இருக்கும் சில சலுகைகளில் சிலவற்றைச் சேர்த்து ரூ.4.4 லட்சம் என்ற மாய எண்ணை அறிவித்தார்.

பட்ஜெட் அறிவிப்பை தவிர மறைமுகமாக நடுத்தர மக்களுக்கு சில சுமைகளை ஏற்றி இருக்கிறார். அவை...

டெபாசிட் வட்டிக்கு வரி

டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்தியாக வேண்டும். குறிப்பாக ஆண்டுக்கு ஒரு வங்கியில் கிடைக்கும் வட்டித் தொகை 10,000 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் டீடிஎஸ் பிடிக்கப்படும். அதாவது வரி பிடித்தத்துக்கு பிறகு வட்டித் தொகை கிடைக்கும். அதனால் முதலீட்டாளர்கள் பல வங்கிகளில் முதலீட்டை பிரித்து முதலீடு செய்திருப்பார்கள். இனி அப்படி செய்யமுடியாது.

இப்போது ஒரு முதலீட்டாளருக்கு ஒரு ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு (அனைத்து வங்கி வட்டி தொகையும் சேர்த்து) மேல் வட்டி கிடைத்தாலே வரி பிடித்தம் செய்யப்பட்டு பிறகு வட்டித்தொகை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படலாம்.

இது பிக்ஸட் டெபாசிட்களுக்கு மட்டுமல்லாமல் தொடர் வைப்பு திட்டத்துக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட்களுக்கும் இந்த டீடிஎஸ் பிடிக்கப்படும். வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஐந்து வருடத்துக்கு முன்பாக எடுக்கும்போது 10 சதவீத டீடிஎஸ் பிடிக்கப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்தார்.

சேவை வரி

சேவை வரியை 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார். இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது நடுத்தர மக்கள்தான். அவர்கள் நம்பி இருக்கும் ஒவ்வொரு சேவைக்கும் கூடுதலாக செலவு செய்யும் போது மாத பட்ஜெட்டில் துண்டு விழும்.

தொலைபேசிக் கட்டணம், ஓட்டல், டீடிஹெச், பங்குத் தரகு, வங்கி மற்றும் நிதிச்சேவைகள், காப்பீடு, ஆன்லைன் பேமெண்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு சேவை வரி செலுத்த வேண்டும்.

நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இந்த சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தியாக வேண்டும். இதுவரை சிட் பண்ட்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது சேவை வரி செலுத்தியாக வேண்டும். அதேபோல மியூச்சுவல் பண்ட் ஏஜென்ட்களுக்கு கிடைக்கும் கமிஷனில் சேவை வரி செலுத்தியாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x