Last Updated : 06 Feb, 2015 11:07 AM

 

Published : 06 Feb 2015 11:07 AM
Last Updated : 06 Feb 2015 11:07 AM

கிரேசியைக் கேளுங்கள் 19 - பேயோடு ஒரு பேட்டி!

எம்.வசந்தி, கோலார்.

இப்போது பேய், பிசாசு படங்கள் பிரபலமாக உள்ளன. நீங்க ஆவி, பேய், பிசாசு, பூதங்களைப் பார்த்ததுண்டோ?

அதையேன் கேட்கிறீர்கள். நான் ‘ஆவி'யில் வேலை பார்த்தபோது (பயப்படாதீங்க ‘ஆவி’ன்னா ஆனந்த விகடன்) இணையாசிரியர் ‘ஹாய் மதன்’ ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ‘‘பேய், பிசாசு, பூதம் அட்லீஸ்ட் குட்டிச் சாத்தானையாவது ‘பேய்ட்டி' ஸாரி… பேட்டி எடுத்துவருமாறு கட்டளையிட்டார்.

இல்லாவிட்டால் அந்த மாதப் ‘பே’யை (சம்பளம்) குறைத்துவிடுவதாக பூச்சாண்டி காட்டினார். பேட்டி எடுக்க பேய்க்கு எங்கே போவேன்? குழப்பத்தில் நான் பேய் முழி முழித்தேன்.

‘‘மோகன்… திருவல்லிக்கேணி பேயாழ்வார் சந்நிதித் தெருவில் ‘வேதாள விலாஸ்’னு ஒரு பங்களா இருக்கு. அங்கே பேய் நடமாட்டம் இருக்கிறதா சொல்றாங்க. அங்கே பேய்… ஸாரி, அங்கே போய் பாரேன்’’ என்று வயிற்றில் கள்ளிப் பாலை வார்த்தார் என் தந்தையார்.

திருவல்லிக்கேணி வேதாள விலா ஸைக் கட்டும்போதே பாழடைந்த பங்களாவாகவே கட்டியிருப்பார்கள் போல. வாசலில் காலே இல்லாமல் குந்தியிருந்தவரைப் பயத்துடன் பார்த்து ‘‘நீங்கள் யார்'' என்று கேட்டேன். என்னைப் பார்த்து நகைத்தபடி ‘‘நான்தான் காலிங் பெல். அதாவது என் பேரு மணி. என்னை அடிங்க…'' என்றார்.

நான் தயங்கினேன். அவர் தன் கன்னத்தில் தானே பேய் அறை அறைந்துகொள்ள, வீட்டுக்குள் கோயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது காற்று வர… கதவு திறந்தது. உள்ளே அந்தரத்தில் இரண்டு குட்டிப் பிசாசுகள் பிரம்மாண்டமான கேரம்போர்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டி ருந்தன.

என்னைப் பார்த்ததும், அவை ‘‘அப்பா டேய்... உன்னைப் பார்க்க மனுஷன் எவனோ வந்துருக்கான்டா…'' என்று கூச்சலிட்டபடியே, கேரம் போர்டை மடித்து சுருட்டி வாயில் சூயிங் கம் போல போட்டுக்கொண்டு, மென்றுத் தின்று… எம்.ஆர்.எஃப் பலூன் பெரிசுக்கு பபிள் விட்டன. அந்த பபிள் வெடித்து அதிலிருந்து அப்பா பேய் வெளியே வந்தார்.

வந்தவரின் பரட்டைத் தலை என்னை மயிர் கூச்செறிய வைத்தது. இரண்டு காதுகளிலும் கறிவேப்பிலை கொத்து போல முடிக் கொத்து. அப்படியே என்னை அலாக்காக தூக்கிக் கொண்டு அந்தரத்தில் போய் அமர்ந்தார். உத்தரத்தில் ஓடிய டைனோசர் சைஸில் இருந்த பல்லிகளைப் பார்த்து நான் பயப்பட, அவர் ‘‘பயப்படாதே… அதெல்லாம் செத்துப் போன பஞ்சாங்க பல்லிகள்'' என்று சொல்லி அதனை விரட்ட, அந்தப் பல்லிகள் என்னைப் முறைத்து பார்த்துவிட்டு எழுந்து நடந்து போயின. ‘‘பல்லி நடக்குமா ?'' என்று நான் கேட்டது பல்லிகளின் காதில் விழ… எனக்கு அவை பெல்லி டான்ஸ் ஆடி காட்டின.

பேட்டி ஆரம்பமாயிற்று.

நான்: என் லைஃப்ல நான் பேட்டி எடுக்குற முதல் பேய் நீங்கதான்.

பேய்: என் டெத்துக்குப் பிறகு என்னை பேட்டி எடுக்கற முதல் மனுஷன் நீங்கதான்.

‘‘உங்க பேர்?’’

‘‘பூதம்.’’

‘‘அப்ப நீங்க பேய் இல்லையா?’’

‘‘உயிரோட இருக்கும்போது என் பேரு மாத்ருபூதம். இப்போ நான் பேய். Funeralogyபடி என் பேரை பூதம்னு சுருக்கிட்டேன்!’’

‘‘நீங்க பேயானது எப்படி?’’

‘‘ஒரு பழத்தால என் உயிர் போய், நான் பேய் ஆகிட்டேன்.

‘‘என்ன பழம்?’’

‘‘பேயன் பழம்!’’

அப்போது வெள்ளைப் புடவையில் தலை நிறைய கருப்பு கலர் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு ஒருத்தி பிரசன்னமானாள். அவளை என்னிடம் காட்டி, ‘‘மீட் மை மனைவி… காத்துக் கருப்பாயி!’’ என்று அறிமுகம் செய்து வைத்தது பேய்.

அப்போது அங்கு சுடச் சுட ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு வந்தது.

‘‘இவங்க யாரு?’’

மனைவி பேய்: ‘‘இது என்னோட மாமியார் கொள்ளி வாய்ப் பிசாசு! எப்போ பார்த்தாலும் என்னைப் பத்தி தன் பேய் புள்ளைக்கிட்ட போட்டுக் கொடுத்துக்கிட்டே இருக் கும்.’’

மாமியார் கொள்ளி வாய்ப் பிசாசு: ‘‘போட் டுத்தான் கொடுப்பேன். நீ ஆயிரம் சொல்லு 'பேய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ தெரிஞ் சுக்கோ’’ என்று சொல்லி மருமகளை நோக்கி நெருப்பைக் கக்கியது. பதிலுக்கு மருமகள் பேய் தண்ணீரை வீச… மாமியார் கொள்ளிவாய்ப் பிசாசு அணைந்து மறைந்தது.

‘‘சே! மண்டையைப் போட்டதுக்கு அப்புறமும் இந்த மாமியார்- மருமகள் சண்டை நிக்காது போலிருக்கு’’ என்று சொல்லியபடியே என்னைப் பார்த்து ‘‘நீங்க பேட்டியைத் தொடருங்க சார்...’’ என்றது ஆண் பேய்.

‘‘இதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்தீங்க?’’

‘‘உசிரோட இருந்தேன்!’’

‘‘அது இல்ல பேய் சார்! எங்கே வேலை பார்த்தீங்க?’’

‘‘திகிலன் என்கிற புனைப் பெயரில் பேய்க் கதைங்க எழுதுவாரே, அவருக்கு கோஸ்ட் ரைட்டரா இருந்தேன்!’’

அப்போது பார்த்து, என் பேனாவில் மை தீர்ந்து போய்விட, பேயைப் பார்த்து ‘‘உங்கள்ட்ட இங்க் இருக்குமா?’’ என்றேன்.

‘‘ரெட் இங்க் பரவாயில்லையா...’’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே பார்த்து… ‘‘ஆர்.கே இங்கே வா” என்று கூப்பிட்டார். ஆர்.கே. வந்து நின்றது. நான்: ‘‘யார் இந்த ஆர்.கே?’’

‘‘என்னோட மச்சான் ரத்தக் காட்டேரி. சுருக்கமா செல்லமா ஆர்.கேன்னு கூப்பிடுவேன்.’’ என்று எனக்குப் பதில் சொல்லிவிட்டு, ஆர்.கேவைப் பார்த்து ‘‘சாருக்கு ரெட் இங்க் போட்டுக் கொடு’’ என்று கட்டளையிட்டது பேய்.

என் பேனாவை வாங்கி அதில் ரத்தத்தை ரொப்பிக் கொடுத்தது ஆர்.கே.

பேட்டி தொடர்ந்தது…

‘‘இன்றைக்கு உங்க டூட்டி என்ன? யாரை பிடிக்கப் போறீங்க?’’

‘‘கும்பிடப் போன மனுஷன் குறுக்கே வந்தது மாதிரி… அதான் நீங்க வந்துட்டீங்களே!’’ என்றது என்னைப் பார்த்து.

ஆர்.கே: ‘‘மாமோய்... இவருக்கு ரெட் இங்க் போட்டதுல எனக்கு ரத்த சோகை வந்துட்டு.’’

பேய்: ‘‘அப்போ நீ முதல்ல இவர்கிட்டே ரத்தத்தை உறிஞ்சுக்க. அப்பால நான் இவரைப் புடிச்சுக்கறேன்!’’

உடனே ஆர்.கே என் ரத்தத்தை உறிஞ்ச என் அருகில் நெருங்கி வர… மனைவி பேய் என்னைக் கையைப் பிடித்துக்கொள்ள... மாமியார் கொ.வா.பி என்னை நோக்கி சுடச்சுட நெருங்க… நான் ‘வல்ல பேய்கள் வாலாட்டிக பூதம்... அல்லல் படுத்தும் அடங்கா முனிகள்…' என்று கந்தர் சஷ்டி கவசத்தை சொல்ல, யாரோ என்னை உலுக்க... எழுந்து பார்த்தால் படுக்கையில் நான். பக்கத்தில் என் மனைவி. அத்தனையும் கனவு.

ஆமென்... ஸாரி ஓமன்!

இன்னும் கேட்கலாம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x