Published : 07 Apr 2014 01:17 PM
Last Updated : 07 Apr 2014 01:17 PM

நோய்களை ஒழிக்க முடியுமா?

தப்பித்தவறிக் கைபட்டாலே உயிரிழந்துவிடும் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்களைத் தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இது 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் 1950 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ல் உலக சுகாதார தினத்தை அந்நிறுவனம் கொண்டாடிவருகிறது.

உலக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதே உலக சுகாதார நாளின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு வருடமும் ஒரு முழக்கத்தை முன்வைத்து இந்த நாளை உலக சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது. இந்த ஆண்டு கொசுக்கடிக்கு எதிரான போராட்டமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே சிறிய கடி பெரிய அச்சுறுத்தல் என்னும் முழக்கத்தை அது முன்வைத்துள்ளது.

ஆண்டுதோறும் 100 கோடிப் பேர் கொசு, ஈ போன்றவை பரப்பும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சுமார் 250 கோடிக்கு மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயால் எளிதில் தாக்கப்படுகின்றனர். சமீபத்தில் சீனா, போர்ச்சுகல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் மலேரியா நோய் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பரவியுள்ளது.

போதுமான சுகாதார வசதியுடன் கூடிய குடியிருப்பு, குடி நீர் போன்ற வசதிகள் கிடைக்காத எளிய மக்களே இந்த வியாதிகளால் அதிகம் பாதிப்படைகிறார்கள். 21-ம் நூற்றாண்டில் ஒருவர்கூட கொசுக் கடியால் உயிரிழக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. ஆரோக்கியமான இருப்பிடம், சுகாதாரமான குடிநீர் போன்றவை அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த நோய்கள் காணாமல் போய்விடும். அந்த நிலைமையைக் கொண்டுவரும் நோக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டுவருகிறது என்பதே நமக்கான ஆறுதல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x