Published : 02 Dec 2014 12:15 PM
Last Updated : 02 Dec 2014 12:15 PM

பார்வையாளரும் பங்கேற்பாளரும்

உலகத்தில் மூன்று வகையான நபர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

1. தூண்டுபவர்கள்- நடக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசுபவர்கள்

2. பார்வையாளர்கள் - நடக்கும் விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.

3. பங்கேற்பாளர்கள் – நிகழ்த்துபவர்கள்

பேச மட்டுமே செய்பவர்கள், ஒரு செயல்பாட்டில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே கவனம் குவித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களால் குழப்பங்களை நன்கு ஏற்படுத்த முடியும். எந்த நெருப்பிலும் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்ப்பார்கள். சீக்கிரமே ஒரு விஷயத்தில் பிரச்சினைகளைக் கண்டு பேசத் தொடங்கி விடுவார்கள். தீர்வுகளைத் தேடுவதற்கு முன்வரவே மாட்டார்கள். இந்தக் குறிப்பிட்ட வகையினரிடம் சரியான பதில்கள் இருக்காது.

மிகப் பெரிய முடிவுகள் எடுக்கப்படும் எந்த இடத்திலும் இவர்கள் உள்ளே இருப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் எப்போதும் வெளியிலேயே, உள்ளே நடப்பதைப் பற்றி ஆச்சரியப்பட்டுக்கொண்டும் புகார் சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். அவர்களுக்கு நேரடியாகக் களத்தில் இறங்கும் ஆசை இருக்காது. ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களாக இருப்பார்கள். உள்ளே நடப்பதில் அவர்களுக்குச் செயல்சார்ந்த ஈடுபாடு இருக்காது. ஆனால் உள்ளே நடப்பது பற்றித் தெரிந்துகொள்ளும் தொலைவிலேயே தங்களை வைத்திருப்பார்கள்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள் எல்லாவற்றையும் பார்ப்பார்கள். ஒருபோதும் களத்தில் இறங்க மாட்டார்கள். அவர்கள் அங்கே வேடிக்கை பார்க்க மட்டுமே இருக்கின்றனர். தூண்டிவிடுபவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பொதுவான அம்சங்கள் சில உண்டு. அவர்கள் வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே. அவர்களுக்கு ஆட்டத்தில் ஈடுபடுவதற்கு எந்த ஆசையும் இருக்காது. தூண்டுபவர் எப்போதும் வெளியிலேயே இருந்து உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பவர். பார்வையாளரும் அவருக்குத் தகவல் சொல்பவர்.

பார்வையாளர்கள் ஒரு தரப்பு ஜெயிப்பதையும் இன்னொரு தரப்பு தோற்பதையும் பார்க்க வருகிறார்கள். ஒரு அணிக்கு விசுவாசமானவர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும் சட்டென்று கட்சி மாறிவிடுவார்கள். அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். உடனடியாக எதிர்வினை செய்பவர்கள். வீரர்கள் மீது விமர்சனங்களைச் சொல்லி வேகமாகத் தீர்ப்புகளையும் அளித்துவிடுவார்கள்.

பங்கேற்பாளர்கள்

உண்மையாகச் செயலில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் ஐந்து சதவிகிதத்தினரே. அவர்கள்தான் செயல் புரிபவர்கள். அவர்கள்தான் விளையாட்டுக்குள் ஈடுபடும் விருப்பத்துடனும் தயாரிப்புடனும் உள்ளவர்கள். அவர்கள் கடுமையாகப் பயிற்சி செய்வார்கள். தங்கள் திறனைக் கூர்மைப்படுத்துவதில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். அவர்கள் வெற்றி பெறுவதில் தங்கள் கவனத்தை ஈடுபடுத்தியபடியே இருப்பார்கள். அவர்கள் எந்தச் சவாலையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பவர்கள்.

பங்கேற்பாளர்கள் தீர்வுகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். பிரச்சினைகளை அல்ல. சவால்களை எதிர்கொண்டு தீர்வுகளைக் கண்டு செயல்களைத் தொடரச் செய்பவர்களாக இருப்பார்கள். தூண்டிவிடுபவர்களையும், பார்வையாளர்களையும் நிராகரிப்பதற்குப் பயிற்சிபெற்றவர்களாக இருப்பார்கள். தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் கலங்காமல், மயங்காமல் உறுதியாக இருப்பார்கள்.

ஒரு குழுவில் செயலாற்றும் பக்குவமுடையவர்களாகப் பங்கேற்பாளர்கள் இருப்பார்கள். கவனத்தைச் சிதறவிடுவது தங்கள் சகாக்களுக்குத் தீங்கைத் தரும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் காரியங்கள் நடப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

நீங்கள் யார்?

நீங்கள் உங்கள் முடிவை இன்றே எடுங்கள்! நீங்கள் தூண்டிவிடுபவராக இருக்கிறீர்களா? உங்களைச் சுற்றி நடப்பதைப் பற்றிப் பேசுபவராக இருக்கிறீர்களா? நீங்கள் பார்வையாளரா? குறிப்பிட்ட தூரத்திலிருந்து எல்லாக் காரியங்களையும் வேடிக்கை பார்ப்பவராக இருக்கிறீர்களா? நீங்கள் பங்கேற்பவரா? செயலின் முடிவான பயனில் மட்டுமே கவனம் செலுத்துபவரா? உங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி, உங்கள் திறன்களைக் கூர்மைப்படுத்துபவராக, செயல்களைத் தீர்மானிப்பவராக உங்களைத் தயார் செய்து வருபவரா?

அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான் வெளியிட்டுள்ள From the HOOD to doing GOOD எனும் நூலிலிருந்து தொகுப்பு- நீதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x