Published : 30 Dec 2014 01:24 PM
Last Updated : 30 Dec 2014 01:24 PM

முப்படையில் சேர முத்தான வாய்ப்பு

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் அதிகாரியாக பணிபுரிய பிளஸ்-2 மாணவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

ராணுவம், விமானப்படை பிரிவுகளைத் தேர்வுசெய்வோர் புனேயில் உள்ள நேஷனல் டிஃபன்ஸ் அகாடமிக்கும், கடற்படையைத் தேர்வு செய்யும் மாணவர்கள் நேவல் அகாடமிக்கும் அனுப்படுகிறார்கள். ராணுவம் மற்றும் விமானப்படை பிரிவு மாணவர்கள் 3 ஆண்டு படிப்புக்குப் பின்பு டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிஏ, பிஎஸ்சி பட்டத்தைப் பெறுவார்கள். கடற்படை பிரிவு மாணவர்களுக்கு மட்டும் 4 ஆண்டு படிப்புக்குப் பின்னர் பி.டெக். பட்டம் வழங்கப்படுகிறது.

படிப்பு முடிந்த பிறகு ராணுவப் பிரிவு மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்காக டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமி அல்லது சென்னை ஆபிஸர்ஸ் டிரெய்னிங் அகாடமிக்கும் (OTA) விமானப்படை பிரிவினர் ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஏர்ஃபோர்ஸ் அகாடமிக்கும், கடற்படை பிரிவு மாணவர்கள் கொச்சிக்கும் செல்கின்றனர். தத்தம் இடங்களில் பயிற்சியை முடித்த பிறகு அவர்கள் அதிகாரியாக நேரடியாகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

தற்போது 2016-ம் ஆண்டு நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பினை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. பிளஸ்-2 முடித்த மாணவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

2.7.1996-க்கும் 1.7.1999-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டியது அவசியம். தகுதியுள்ள மாணவர்கள் வரும் ஜனவரி மாதம் 23-ம் தேதிக்குள் ஆன்லைனில் >(www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுமுறை, பாடத்திட்டம், பயிற்சி உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x