Published : 13 Dec 2014 05:33 PM
Last Updated : 13 Dec 2014 05:33 PM

தந்திரமும் தவறும் - கதை சொல்லும் போட்டி கதை

ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துடுச்சாம். விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்துச்சி. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்துச்சி நரி.

பத்து நாட்கள் கடந்து போச்சி. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே… மே…ன்னு கத்திக்கிட்டே வந்துச்சி.

உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைச்சி எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது.

“ஆடு அண்ணா, இங்கே வாயேன்” என்று அன்போடு அழைத்தது நரி.

கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்துச்சி.

“என்ன நரியாரே… தவறி விழுந்துட்டீயா?’ என்று கேட்டது ஆடு.

“சே… சே… நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணத்துக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணத்துத் தண்ணீ ரொம்ப சுவையா இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சிப் பாரேன்’ என்றது நரி.

ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. உடனே கிணற்றுக்குள் குதித்தது.

“நரியே… இந்தத் தண்ணீ சுவையா ஒன்னும் இல்லையே… உன்னை நம்பி வந்தேன் பாரு… இப்போ எப்படி வெளியில போறது?” என்று கேட்டது ஆடு.

“முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு’ என்றது நரி.

ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது.

“ம்..கையை கொடு..என்னைச் சீக்கிரமா காப்பாத்து…” என்றது ஆடு.

“உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்”ன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது.

தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x