Last Updated : 25 Aug, 2017 11:12 AM

 

Published : 25 Aug 2017 11:12 AM
Last Updated : 25 Aug 2017 11:12 AM

சினிமாலஜி 18: ஆரண்ய காண்டமும் தர்ம யுத்தமும்!

ர்மம் எனும் சொல் அதிகம் புழங்கும் சமூக அரசியல் சூழலில், சினிமாலஜி வகுப்பில் ‘ஆரண்ய காண்டம்’ சிறப்புத் திரையிடல் நடந்தது தற்செயலான ஒன்றுதான். ஒவ்வொருவரும் ஏழெட்டு முறை பார்த்துவிட்டாலும், இப்போதும் ஏதோ புதிய படத்தை ரசிப்பதுபோல் சிலிர்த்து அனுபவித்தனர். படம் முடிந்தபோது, வகுப்பு என்பதைக் கூட மறந்தபடி பார்த்தா விசிலடித்தான்.

“கொஞ்சமும் இயல்பை மீறாத ஒரு தமிழ்ப் படம் இனியும் வருமான்னு டவுட்டா இருக்கு” என்று வியந்தான் பார்த்தா.

“தியேட்டர்ல ரிலீஸ் ஆனப்ப கோட்டை விட்டுட்டு, சினிமா ஆர்வலர்கள் எப்பவுமே கொண்டாடிட்டு இருக்க படம். ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் நாம சினிமாவைக் கத்துக்குறதுக்குப் புதுப்புது விஷயங்கள் இதுல கொட்டிக்கிடக்கு. அப்படி ஒரு கச்சிதமான சினிமா” என்று தன் பங்குக்குச் சிலாகித்தாள் கவிதா.

“திரைமொழி ஒரு பக்கம் இருக்கட்டும். கதாபாத்திரங்களைச் செதுக்குறதுதான் மேட்டரே. எல்லாக் காலகட்டத்திலும் முக்கியப் படைப்பாளிகள் பலரும் கதாபாத்திரங்களை உருவாக்குறதுல மட்டும் தடுமாறுறதா நினைக்கிறேன். ஒரு படத்துல எல்லாக் கதாபாத்திரங்களிடமும் ஒரே மாதிரியான தன்மைகள் இருக்குறதைப் பார்க்க முடியும். உதாரணமா, கே.பாலசந்தர் படத்துல வர்ற எல்லா கேரக்டருமே புத்திசாலிகள் போலவே பேசுவாங்க. பாலா படத்துல வர்ற பல கேரக்டர்ஸும் ஒரு மார்க்கமாகவே திரிவாங்க. மணிரத்னம் கேரக்டர்ஸ் எல்லாமே பிட்டு பிட்டா பேசுற மாதிரி இருக்கும். ‘ஆரண்ய காண்ட’த்துல ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையா ரொம்ப இயல்பா இருக்கும். பேசுற விதத்துலகூட வேறுபாடுகளைப் பார்க்கலாம். எதுலயும் சிமிலாரிட்டீஸ் பார்க்க முடியாது” என்றாள் ப்ரியா.

அவளது பார்வையை ஆமோதிப்பதுபோல் தலையாட்டிய ரகு, “பல்வேறு கலைகளின் கூட்டுச் சேர்க்கைதான் சினிமா என்ற கலை. அந்தந்த நாடுகள், அந்தந்த மாநிலங்கள், அந்தந்தப் பகுதிகளின் பின்புலத்தின் அடிப்படையில்தான் காட்சி அமைப்புகளில் மாறுதல் இருக்கணும். நம் நாட்டையும் மாநிலத்தையும் பொறுத்தவரைக்கும் சில நிமிடங்கள் கூட நம்மால பேசாம இருக்க முடியாது; மத்தவங்ககூடப் பேசும்போதும் நமக்குள்ளேயே அதிகம் பேசுவோம். இப்படிப் பேசுறதுன்றது நம்ம மண்ணுக்கே உரிய அம்சங்களில் முக்கியமானது. அப்படி இருக்கும்போது, நாம எடுக்குற சினிமாவுல விஷுவலா மட்டும் இல்லாம; வசனங்களுக்கும் சரிவிகிதத்துல முக்கியத்துவம் தரணும். அதை மிகச் சிறப்பா செஞ்சிருக்கு ஆரண்ய காண்டம். இந்தப் படத்துல காட்சிகளுக்கு இணையாக வசனங்கள் மூலமாக கதை சொல்லப்பட்டிருக்கும். இதையும் தனித்துவமா எடுத்தக்கலாம்” என்றான்.

“அப்படின்னா, நம்ம சினிமாவுக்கு பாட்டும் வேணும்தானே... அதை மட்டுமே ஏன் ஏத்துக்க மாட்றீங்க? அதுவும் நம்மளோட ஸ்பெஷாலிட்டிதானே?” என்று கொக்கி போட்டான் ப்ரேம்.

அதற்கு அசராத ரகு, “ஆமா, நீ சொல்றதை நானும் ஏத்துக்குறேன். ஆனால், பாடல்களை யூஸ் பண்ற விதத்துல இயல்புத்தன்மை இருக்குற மாதிரி இருந்தா பெட்டரா இருக்கும். இப்பல்லாம் மான்டேஜ் சாங்ஸ் நிறைய வர்றதும் நம்ம படைப்பாளிகளோட மெச்சூரிட்டியைக் காட்டுது. ‘ஆரண்ய காண்ட’த்துல பாடல்கள் இல்லைன்னு யாரு சொன்னா? பல காட்சிகளின் பின்னணியில் ஓட்டப்படும்இளையராஜாவின் பழைய பாடல்கள் எல்லாமே இந்தப் படத்துக்கானதும்தான்” என்று சமாளித்தது எல்லாருக்குமே பிடித்திருந்தது.

“இன்னொரு மேட்டர் கவனிச்சீங்களா... இந்தப் படத்துல லாஜிக்கல் பிழையே கண்டுபிடிக்க முடியல. இதுக்கு, தியாகராஜன் குமாரராஜா கையாண்ட திரைக்கதை உத்திதான் கைகொடுத்துருக்குன்னு நினைக்கிறேன். இப்படிப் பண்ற ஒரு சினிமா காலத்தைத் தாண்டி, தேசங்கள் கடந்து எந்த பார்வையாளனுக்கும் நெருக்கம் தரும்னு தோணுது” என்றாள் மேனகா.

“நீ சொல்றது ஓகேதான். இந்தப் படத்துல மிஸ்டேக் இல்லைன்னு யார் சொன்னது? இதுலயும் ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கே!” என்று சிரிப்பு நக்கீரர் போல் குதூகலித்தான் பார்த்தா.

“ ‘ஆரண்ய காண்ட’த்துலயேவா?”

“ஆமாம். ஆனா, இதை ஏழாவது தடவை பார்க்குறப்பதான் கண்டுபிடிச்சேன். கதைப்படி பாவா லாட்ஜ் இருக்குறது புதுச்சேரி. சென்னையில இருந்து கார்ல கிளம்பும் சிங்கபெருமாள் ஆட்கள் பாவா லாட்ஜுக்குப் போறாங்க. அதேநேரத்துல, பாவா லாட்ஜுல தங்கியிருக்கும் காளையனும் கொடுக்காப்புளியும் நடந்துதான் சேவல் சண்டை விடும் இடத்துக்குப் போறாங்க. சென்னையில் இருக்குற சிங்கபெருமாளும் அதே சேவல் சண்டைக்கு வர்றார். இது சின்ன மிஸ்டேக்தான். சென்னை, புதுச்சேரியைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்கதான் இதைக் கண்டுக்க முடியும். ஆனா, யாரும் ஈஸியா கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பார்வையாளர்களோட கவனத்தை ஒருமுகப்படுத்துற மாதிரி திரைக்கதையை அமைச்சுப் படமாக்கியதுதான் கெத்து” என்றான் பார்த்தா.

“ஒத்துக்குறேன். நீ அப்பாடக்கர்தான்” என்று பார்த்தாவை நக்கல் செய்தான் ப்ரேம்.

மீண்டும் கதாபாத்திர வார்ப்புக்குத் திரும்பிய கவிதா, “எல்லா கேரக்டருமே நெகட்டிவ் தன்மைகளோட இருக்குறதால, அது குறைவாக இருக்குற பசுபதி, காளையன், கொடுக்காப்புளி மேலதான் நாம பார்வையாளரா ஈடுபாடு காட்டுறோம். அவங்களுக்குதான் சப்போர்ட் பண்றோம். கொஞ்சம் ஆழமா பார்த்தால், எல்லா கதாபாத்திரத்துக்குள்ளும் நமக்குள் இருக்கிற பாதகமான அம்சங்களைக் கண்டுகொள்ள முடியும். ஆமா, இந்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா ஏதாவது டீட்டெய்லா விளக்கம் கொடுத்துருக்காறா?” என்றாள் கவிதா.

“நான் அவர் கலந்துகிட்ட சில கூட்டங்களுக்குப் போயிருக்கேன். அவரோட சில பேட்டிகளும் பார்த்திருக்கேன். எதுலயுமே தன்னோட படத்தைப் பத்தியும், காட்சிகள் பத்தியும் டீட்டெய்லா விளக்குனதே இல்லை” என்றான் ஜிப்ஸி.

“இதான் விஷயம். உருப்படியா ஒரு படம் எடுத்தா, அதைப் பத்தி பெருசா படைப்பாளி வாய்த் திறந்து விளக்கம் கொடுக்கக் கூடாது. ஒரு படத்தைப் பார்க்குற வெவ்வேறு விதமான பார்வையாளர்களும் தங்களோட அனுபவத்துக்கும் சிந்தனைக்கும் ஏத்த மாதிரி அந்தப் படைப்பை உள்வாங்கிப்பாங்க. பார்வையாளர்களைச் சிந்தித்து ரசிக்க விடாதபடி, ஒரு படைப்பாளியே தன்னோட படைப்புக்குப் பொருள் விளக்கம் தர்றதுன்றது நம்ம பார்வையைத் தட்டையாக்கிடும்னு நம்புறேன். தியாகராஜா குமாரராஜா இஸ் கிரேட்!” என்றாள் கவிதா.

“அதே மாதிரி பெண்களை புரொட்டாகனிஸ்டா வெச்சு எடுக்குற படம்னாலே பெண்ணியம், அது இதுன்னு என்னனவோ கற்பனை பண்ணி கிறுக்குறாங்க. இந்தப் படத்துல சுப்பு கேரக்டர் இருக்கே. அது வேற லெவல். ஆண்களால் சூழப்பட்ட இந்தச் சமூகத்துல ஒரு பொண்ணு எப்படி நாசூக்காகச் செயல்பட்டு, சரியான இடத்துல கெத்து காட்டி எல்லா ஆண்களையும் சப்பை ஆக்கணும்னு மிரட்டிட்டுப் போயிடுவா. இப்படி இருந்தாதான் நம்ம சமூகத்துல சர்வைவ் பண்ண முடியும்ன்றது ரொம்ப அழுத்தமாவே சொல்லப்பட்டிருக்கு” என்று மெச்சினாள் மேனகா.

“எனக்கு என்னமோ இந்தப் படத்துக்கு ‘தர்ம யுத்தம்’னு பேரு வச்சு ரீ-ரீலிஸ் பண்ணினா நல்லா ஓடும்னு தெரியுது. இந்த மாதிரியான படங்களைக் கொண்டாடுறது இப்ப அதிகமாகியிருக்கு. ரொம்ப அட்வான்ஸா பண்ணிட்டா கூட, இந்தப் படத்தை இப்ப மீண்டும் ஃப்ரெஷ்ஷா ரிலீஸ் பண்ணலாம்” என்று யோசனை தெரிவித்தான் பார்த்தா,

“அதென்ன தர்ம யுத்தம்?” எனக் கேட்டான் ப்ரேம்.

“ ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் கதாபாத்திரங்களுக்குள் நடக்குறதும் ஒரு தர்ம யுத்தம் தானே. எது தேவையோ அதானே தர்மம். நம்ம நாட்லயும் அதானே நடக்குது. எது தேவையோ அதை அடையறதுக்குத்தானே தர்ம யுத்தம் பண்றாங்க!”

தொடர்புக்கு siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x