

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது. சிறுபான்மையினருக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் உள்ளிட்ட ஆறு சிறுபான்மை சமூகத்தினருக்கு 2017-18 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெட்ரிக்குக்கு முந்தைய (Pre-Matric), மெட்ரிக்குக்குப் பிந்தைய (Post-Matric), தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் (Merit-cum-Means based) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
அடிப்படைத் தகுதி
இந்த உதவித்தொகையைப் பெற மேலே குறிப்பிட்ட ஆறு பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல இந்தியாவில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்திலோ படித்துக்கொண்டிருக்க வேண்டும். ஓராண்டு அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டு காலப் படிப்பாக இருக்க வேண்டும். கடைசியாக எழுதியப் பொதுத் தேர்வு அல்லது வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.scholarships.gov.in இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேசிய உதவித்தொகை இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
நிறுவனங்கள் கவனத்துக்கு
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அனைத்துப் பள்ளிகள்/ கல்லூரிகள்/ கல்வி நிறுவனங்கள் முதலில் www.scholarships.gov.in மூலமாகத் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் அக்டோபர் 2017-க்குள் தங்கள் நிறுவத்தை அதில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.