Published : 10 Jul 2017 10:47 AM
Last Updated : 10 Jul 2017 10:47 AM

மொபிலியோ இனி இல்லை!

ஹோண்டா நிறுவனத்தின் எம்பிவி வாகனமான ஹோண்டா மொபிலியோ இனி விற்பனைக்கு வராது. இந்த வாகன விற்பனையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஹோண்டா நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி-க்கு பிந்தைய விலை விவரத்தை வெளியிட்ட போது கூட மொபிலியோ விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை. நிறுவனத்தின் கார் விவர பட்டியலிலிருந்தும் மொபிலியோ நீக்கப்பட்டு விட்டது. இதிலிருந்தே சந்தடியின்றி மொபிலியோ விற்பனையை நிறுத்திவிட்டது ஹோண்டா என்பது புலனாகும். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் மொபிலியோ அறிமுகமானது.

பிரையோ தயாரிக்கும் அதே தயாரிப்புப் பிரிவில் மொபிலியோ தயாரானது. எம்பிவி பிரிவில் மாருதி சுஸுகி எர்டிகாவுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகமாக இருந்தது. இதனால் இதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அறிமுக சமயத்தில் இருந்த விற்பனை பிறகு படிப்படியாக சரிந்தது.

இந்நிலையில் 7 பேர் பயணிக்கும் வகையிலான பிஆர்-வி கிராஸ்ஓவரை அறிமுகம் செய்தது. அடிப்படையில் ஒரே தயாரிப்புப் பிரிவில் இது தயாரிக்கப்பட்டாலும் மொபிலியோவைக் காட்டிலும் தோற்றப் பொலிவில் கம்பீரமாக இருந்தது பிஆர்-வி. மேலும் இதன் உள்புற வடிவமைப்பு மிகச் சிறப்பாக இருந்ததோடு கட்டுபடியாகும் விலையில் இருந்ததும் சாதக அம்சமாகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே மொபிலியோவின் விற்பனை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து உற்பத்தியை நிறுத்தியது ஹோண்டா. இருப்பினும் இந்தோனேசியாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் இனி மொபிலியோ இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x