Published : 25 Jul 2017 10:54 AM
Last Updated : 25 Jul 2017 10:54 AM

குடியரசுத் தலைவர் தேர்தல்: கே.டி.ஷா முதல் மீரா குமார்வரை

இந்தியாவில் குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்களைப் பற்றித்தான் பெரும்பாலும் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்களைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர்களைப் பெரும்பாலும் நினைத்துப் பார்ப்பதில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை மத்தியிலும் பெரும்பான்மையான மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக இருக்கும் அரசியல் கட்சியின் ஆதரவைப் பெற்றவர்கள்தான் வெற்றி பெற முடியும்.

ramnath govind

எனவே ஏறக்குறையத் தேர்தலுக்கு முன்பே வெற்றியாளர் என்பதைத் தீர்மானித்துவிட முடியும். தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற சூழலிலும்கூட எதிர்த்துப் போட்டியிடுவதற்கான காரணங்கள் அரசியல்ரீதியில் முக்கியத்துவம் கொண்டவை. தங்களது போட்டியின் காரணமாகப் பதவிக்கு வருகின்ற குடியரசுத் தலைவருக்கு விழுமியங்கள் சார்ந்த ஒரு அழுத்தத்தையும் ஒரு சிலரால் உருவாக்க முடிந்திருக்கிறது. முன்கூறப்பட்ட தோல்வியின் சரித்திரம் இது.

கூட்டாச்சி நாடாக்க வலியுறுத்தியவர்

1952-ல் நடைபெற்ற முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராஜேந்திர பிரசாத் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பேராசிரியர் கே.டி.ஷா. ராஜேந்திர பிரசாத் தலைவராக இருந்த அரசியல் சாசன அவையில் உறுப்பினராக இருந்தவர் ஷா. இந்தியாவை மதச்சார்பற்ற, சமத்துவ நாடாக அறிவிக்க வேண்டும் என்று அவரால் அரசியல் சாசன அவையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அப்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அவரது பரிந்துரைகள் இந்திரா காந்தியின் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அவர்.

Lakshmi segalலட்சுமி ஷேகல்

1957, 1962 ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பெரும் போட்டிகள் இல்லை. தோல்வியடைந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மிகவும் சொற்பம். 1967-ல் நடைபெற்றத் தேர்தலில் குடியரசுத் தலைவராக ஜாகிர் உசேன் வெற்றி பெற்றார்.

ராதாகிருஷ்ணனைப் போல ஜாகிர் உசேனும் கல்வித் துறை பின்புலம் கொண்டவர்; அவரைப் போலவே துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். ஜாகிர் உசேனை எதிர்த்துப் போட்டியிட்டவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சுப்பா ராவ். அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளில் அவர் வழங்கிய தீர்ப்புகள் முக்கியத்துவம் கொண்டவை.

கோவா சுதாந்திரத்துக்கான போராளி

1969-ல் வி.வி.கிரியை எதிர்த்துப் போட்டியிட்டவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி. 1969-ல் தோல்வியைத் தழுவிய சஞ்சீவ் ரெட்டி 1977-ல் நடைபெற்றத் தேர்தலில் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1974-ல் பக்ருதீன் அலி அகமதுவை எதிர்த்துப் போட்டியிட்டவர் திரிதிப் சவுத்ரி. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் அவரும் ஒருவர். கோவா சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்.

1977-ல் நீலம் சஞ்சீவ் ரெட்டிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 1982-ல் ஜெயில் சிங்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஹெச்.ஆர்.கண்ணா போட்டியிட்டார். அரசியலமைப்பு சார்ந்து முக்கியமான தீர்ப்புகளை வழங்கியவர் கண்ணா. நெருக்கடி நிலை காலகட்டத்தின்போது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்துத் தீர்ப்புகள் எழுதியவர்.

Neelam sanjeeva reddy நீலம் சஞ்சீவ் ரெட்டி

1987-ல் ஆர்.வெங்கட்ராமனை எதிர்த்து வி.ஆர்.கிருஷ்ணைய்யர் போட்டியிட்டார். இந்திய நீதித்துறையின் மனசாட்சியாக விளங்கியவர் கிருஷ்ணய்யர். பொதுநல வழக்குகளின் வாயிலாக அடிப்படை உரிமைகளைப் பெற முடியாத எந்தவொரு சாமானியனும் உயர் நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகலாம் என்ற நிலையை உருவாக்கியவர்.

1992 தேர்தலில் சங்கர் தயாள் சர்மாவை எதிர்த்து ஜி.ஜி.ஸ்வெல் தேர்தலில் போட்டியிட்டார். மேகாலயாவைச் சேர்ந்த ஸ்வெல், இந்தியத் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றியதோடு, மக்களவையில் துணைத்தலைவராகவும் பதவி வகித்தவர். வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் முகம் அவர்.

இந்திய தேசிய ராணுவப் படைத் தளபதி

1997-ல் நடைபெற்ற தேர்தலில் கே.ஆர்.நாராயணை எதிர்த்து டி.என்.சேஷன் போட்டியிட்டார். தேர்தல் ஆணையத்தை முதன்மையான சுதந்திரம் உள்ள அமைப்பாக வளர்த்தெடுத்ததில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. 2002 தேர்தலில் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை எதிர்த்து நின்றவர் லட்சுமி ஷேகல். சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் படைத் தளபதியாகப் பணியாற்றியவர். சுதந்திரப் போராட்டத்தின் தியாகங்களை நினைவூட்டியது கேப்டன் லட்சுமியின் போட்டி.

gg swell ஜி.ஜி. ஸ்வெல்

2007-ல் பிரதிபா பாட்டீலை எதிர்த்து நின்றவர் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்த பைரோன் சிங் ஷெகாவத். 2012-ல் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பி.ஏ.சங்மா. மேகாலயா மாநிலத்தின் முதலமைச்சராகவும் மக்களவையின் தலைவராகவும் பதவி வகித்த சங்மாவின் போட்டி வடகிழக்கு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

2017-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியுற்ற மீரா குமார், நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகராகப் பதவி வகித்தவர். அவர் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் தோல்வியைத் தழுவியிருக்கலாம். ஆனால், அந்தப் பதவிக்குத் தகுதியான வேட்பாளர் என்பதை மறுக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x