Published : 09 Jan 2017 10:50 AM
Last Updated : 09 Jan 2017 10:50 AM

மாற்று நாணயமா பிட்காயின்?

பணமில்லா பொருளாதாரம்தான் இப்போதைய ஹாட் டாபிகாக இருந்தாலும் பிட்காயின் பற்றிய செய்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையின் முன்னோடி என்று சொல்ல முடியாவிட்டாலும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனையை இந்த தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. பிட் காயின் என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது, என்ன மதிப்பு என்பது உள்ளிட்ட பலவற்றை பார்ப்போம். பிட்காயின் மைனிங் (அது என்ன என்பது பிறகு விவரிக்கிறோம்) நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி ஒருவரிடம் நடத்திய உரையாடலின் அடிப்படையிலும் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 1990களில் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்க ஆரம்பித்தன. ஆனால் தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. 100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் பைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். அது வங்கிகளுக்கு பிரச்சினையாக உருவெடுத்தது. ஆனால் பிட்காயின் இயங்கும் தொழில்நுட்பமான பிளாக்செயின் மூலம் பல பிரதிகள் எடுக்க முடியாது.

இதை கண்டு பிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழு உறுப்பினர்களா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் சந்தோஷி நகமோடோ (Satoshi Nakamoto) என்னும் பெயரில் பிட்காயின் மற்றும் அதன் சாப்ட்வேரை இணையதளத்தில் வெளியிட்டார்கள். இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருவர் மற்றவருக்கு நேரடியாக கரன்ஸியை அனுப்ப முடியும். அனுப்பியது யார் என்றும் தெரியாது, பெறுபவர் யார் என்றும் தெரியாது. இந்த தொழில்நுட்பத்தின் பெயர் பிளாக் செயின். கரன்ஸியின் பெயர் பிட்காயின் இந்த பரிவர்த்தைகளை யாரும் திருட முடியாது.

இருந்தாலும் இந்த பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர். இந்த பரிமாற்றங்கள் ஒரு கணக்கு புதிர் வடிவில் இருக்கும். அதனை சரி செய்யும் பட்சத்தில்தான் பரிமாற்றங்கள் நடக்கின்றன. மைனிங் நிறுவனங்கள் அதனை சரி செய்கின்றன. அதற்கு முன்னால் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பார்ப்போம்.

பிளாக்செயின்

உலகம் முழுக்க பிட்காயின் பரிவர்த்தனைகள் ஒவ்வொரு வினாடிக்கும் நடந்து கொண்டிருக்கும். இதனை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம். அல்லது மற்றவர்களுக்கு அனுப்பலாம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் எங்கு இருப்பவர்களும் வினாடிகளுக்குள் பரிவர்த்தனை செய்ய முடியும்.

இந்த அனைத்து பரிவர்த்தனைகளும் புதிர் வடிவில்தான் இருக்கும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும் அத்தனை பரிவர்த்தனைகளும் ஒரு லெட்ஜரில் பதிவு செய்யப்படும். அடுத்த பத்த நிமிடங்கள் அடுத்த லெட்ஜரில் பதிவு (https://blockchain.info/) செய்யப்படும். இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என பெயர். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதுபோல மைனிங் நிறுவனங்கள் பல இருக்கின்றன.

சமீபத்தில் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில வங்கிகள் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் பணப்பரிவர்த்தனைகளை சோதனை செய்தது. இந்த தொழில்நுட்பம் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் பகுதி பகுதியாக பாதுகாக்கப்படும்.

எவ்வளவு பிட்காயின்?

ரூபாய் மதிப்பை அதிகபட்சம் 2 தசமங்களாக பிரிக்கலாம். ஆனால் பிட்காயினை எட்டு தசமங்களாக பிரிக்க முடியும். (0.00000001). பிட்காயின் உருவாக்கும் போதே மொத்தம் 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உருவாக்க முடியும் என புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வெளியிடப்படும் பிட்காயின் அளவு ஒவ்வொரு நான்கு வருடத்துக்கும் குறைந்துகொண்டே இருக்கும். அதாவது பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக மைனிங் நிறுவனங்களுக்கு (பத்து நிமிடத்துக்கு) 12.5 பிட்காயின் வழங்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு முதல் இதில் பாதியாக 6.25 பிட்காயின் மட்டுமே வழங்கப்படும். இதை தவிர பிட்காயின் வேறு எந்த ரூபத்திலும் புழக்கத்துக்கு வராது. இந்த அளவிலே பிட்காயின் புழக்கத்துக்கு வரும்பட்சத்தில் 2140-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த பிட்காயினும் சந்தைக்கு வரும். அதன் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்.

மைனிங் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பிட்காயின்களை தவிர மற்றவற்றை எக்ஸ்சேஞ்சில் விற்றுவிடுவார்கள்.

எங்கு வாங்குவது?

பிட்காயின்கள் வாங்க மற்றும் விற்பதற்காக உலகம் முழுவதிலும் எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. இந்தியாவிலும் ஜெப்பே (https://www.zebpay.com/), காயின்செக்யூர் (https://coinsecure.in/), யுனோகாயின் (https://www.unocoin.com/) உள்ளிட்ட எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. அனுப்புவது யார், எடுப்பது யார் என தெரியாததால் முறையற்ற பணம் இங்கு பதுங்க வாய்ப்பு இல்லை. காரணம் இந்த எக்ஸ்சேஞ்ச்கள் ரொக்கமாக வாங்குவதில்லை. இவை அனைத்தும் டிஜிட்டல் கரன்ஸி. தவிர கேஒய்சி இல்லாமல் பிட்காயின் வாங்க முடியாது.

சர்வதேச கரன்ஸி

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான கரன்ஸி இருக்கிறது. ஆனால் பிட்காயின் என்பது சர்வதேச கரன்ஸி. அனைத்து இடங்களுக்கும் இந்த கரன்ஸியை மாற்ற முடியும். இப்போதுதான் இந்த கரன்ஸியை ஒவ்வொரு நிறுவனங்களாக ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் 1,000 டாலருக்கு மேல் வர்த்தகமானது. ரூபாய், டாலராக வைத்திருக்காமல் பிட்காயின் வைத்திருக்கலாம் என்று வாதாடுபவர்களின் நோக்கம் இந்த மதிப்பு.

ரூபாய், டாலரை வைத்து பொருள் வாங்கலாம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இதையும் பிட்காயினில் செய்ய முடியும். இருந்தாலும் பிட்காயினுக்காக வாதாடுபவர்கள் சொல்லும் காரணம், ஒவ்வொரு நாடுகள் வெளியிடும் கரன்ஸிகள் மதிப்பில் பெரிய மாற்றம் இருக்காது, ஆனால் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயரும். (குறைந்தபட்சம் 2140 ஆண்டு வரை). அதனால் பிட்காயின் என்னும் சர்வதேச கரன்ஸியை வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

எப்படி பயன்படுத்துவது?

எக்ஸேஞ்ச்கள் வைத்திருக்கும் செயலிகளை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகவரி இருக்கும். ஆனால் அந்த முகவரி நிலையானது அல்ல. அடிக்கடி மாறக்கூடியது. யாருக்காவது பிட்காயின் அனுப்பவேண்டும் என்றால் அப்போதைய அவரின் முகவரி/க்யூஆர்கோட் கேட்டு வாங்கிய பிறகு அனுப்ப வேண்டும். அதேபோல உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் உங்களின் தற்போதைய முகவரி/க்யூஆர்கோடு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் இதேபோலதான் பரிமாற்றம் நடக்கும்.ஏற்கெனவே கூறியது போல யார் அனுப்பியது, யார் பெற்றது என தெரியாது.

சமீபத்தில் எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் 4 லட்சம் தகவல்கள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இங்கு இதுபோல தகவல் திருடப்பட வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்தியாவில்?

இப்போதுதான் இந்தியாவில் பயன்பாடு தொடங்கி இருக்கிறது. மொபைல் ரீசார்ஜ், டிடிஹெச் ரீசார்ஜ் போன்றவை பிட்காயின் பயன்படுத்தி செய்ய முடியும். பிட்காயினை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. இப்போதைக்கு அதை நெறிபடுத்தும் திட்டமும் இல்லை என கடந்த 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரவர்த்தி தெரிவித்தார். அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் பிட்காயின் ஏற்ற இறக்கம் சிறிது கவலை தருகிறது, அதற்காக பிட்காயினை மொத்தமாக நிராகரிக்கவும் இல்லை என்று கூறினார். ஆனால் இதுவரை பிட்காயின்களுக்கு விதிமுறைகளை வகுக்கவில்லை. பணத்தின் மதிப்பு என்பதே மக்கள் அதை நம்புகிறார்கள் என்பதால் உருவாவது. பிட்காயினை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்களா என்பதை காலம் தீர்மானிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x