Last Updated : 12 Feb, 2017 12:16 PM

 

Published : 12 Feb 2017 12:16 PM
Last Updated : 12 Feb 2017 12:16 PM

முகங்கள்: செல்லப் பிராணிகளின் செல்லம்!

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்க யாருக்குத் தான் பிடிக்காது? நாய்களும், பூனைகளும் வீட்டின் அங்கத்தினராகி, பெரியவர்களையும் சிறியவர்களாக்கி விளையாட வைக்கும் அன்பும் அன்யோன்யமும் தனி சுகத்தைத் தரவல்லது. குழந்தைகளுக்கு இணையாகச் செல்லப் பிராணிகளுக்கு உணவு முதல் சுகாதாரம் வரை பார்த்துப் பார்த்துப் பக்குவமாகச் செய்வதைப் பலரும் விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். செல்லப் பிராணிகளுக்கும், அவற்றை வளர்ப்போருக்கும் இடையேயான இணக்கத்தை அதிகப்படுத்தி, ஐந்தறிவு ஜீவன்களையும் சக உயிராகப் பாவிக்கப் பயிற்சியளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த கிருத்திகா.

நாய்களையும் உரிமையாளரையும் ஓரிடத்துக்கு வரச்செய்து பயிற்சியளிப்பது வழக்கம். ஆனால் இவர் நாய் உரிமையாளர் வீடுகளுக்கே சென்று பயிற்சியளிக்கிறார். நாயுடன் பழகி, உரிமையாளரின் சொற்களை எப்படிப் புரிந்துகொள்வது என்று நாய்க்குப் பயிற்சியளிக்கிறார். விதவிதமாகக் குரைப்பதற்கான காரணங்கள் என்ன, அவற்றுடன் நெருக்கம் பாராட்டுவது எப்படி என்று நிறையப் பயிற்சிகளை உரிமையாளருக்கும் கொடுக்கிறார். வித்தியாசமான துறையைத் தேர்ந்தெடுத்திருக்கும் கிருத்திகா, சென்னையில் குறிப்பிடத்தக்க நாய் பயிற்சியாளர்களில் ஒருவர். வருமானத்தைப் பெருக்கும் வழியாக இதைக் கருதாமல், நாய்களின் மேல் அன்பையும் பரிவையும் செலுத்த கிடைத்த வாய்ப்பாகக் கருதுவதாகக் குறிப்பிடுகிறார்.

“எனக்குச் சின்ன வயசிலிருந்தே நாய்களின் மீது கொள்ளைப் பிரியம். நாங்க குடியிருப்புப் பகுதியில் இருந்ததால நாய் வளர்க்க முடியல. சொந்த வீட்டுக்குக் குடி போனபோது, எப்போ நாய் வாங்கித் தர்றீங்கன்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்புறம் கல்லூரி, திருமணம்ன்னு எனக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இடையே சின்ன இடைவெளி. குழந்தைகள் பள்ளிக்குப் போகும் நேரத்தைப் பயனுள்ளதாக மாத்திக்கணும்னு தோணுச்சு. அப்போதான் என் கணவர் ஏன் நாய் பயிற்சியாளராகக் கூடாதுன்னு கேட்டார். சென்னையில் அதுக்கு மதிப்பிருக்குமான்னு ஒரு தயக்கம் இருந்துட்டே இருந்துச்சு” என்பவர், நாய்களின் ஒவ்வொரு செயல்களுக்கும் பாராட்டி, உணவு கொடுத்துப் பழக்குகிறார்.

“பாவ் பால் என்ற என் நிறுவனத்தைத் தொடங்கியபோதே அளவான வாடிக்கையாளர்கள் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு நாயைப் பழக்குவது அவ்வளவு எளிதல்ல. நிறையப் பொறுமை, தொடர் முயற்சி, அன்பு, பாராட்டும் குணம் வேணும். அப்போதான் நாய்களுக்கும் மனிதனுக்கும் இடையே புரிதல் ஏற்படும். நாய் உரிமையாளரை நான் நாயின் பெற்றோர் என்றுதான் அழைப்பேன். ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்தப் பயிற்சியை நான் தவம் மாதிரி விரும்பிச் செய்றேன்” என்கிற கார்த்திகா, தினமும் 45 நிமிடங்கள் ஒரு நாய்க்குப் பயிற்சியளிக்க எடுத்துக்கொள்கிறார்.

இந்தத் துறையில் வருமானம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். நாய்களின் குணத்தைப் புரிய வைப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி. குழந்தைகளைப் போல் தான் நாய்களும். நாய்களுக்கு ஒருவர் எஜமானராவதும் அவருக்கு நாய் எஜமானராவதும், நாம் பழக்குவதில்தான் இருக்கிறது என்கிறார்

“ஒருமுறை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான ஒரு நாய், கூட்ட நெரிசலான சாலையில் நடந்து செல்லவே பயந்தது. பயத்தை நீக்கித் தொடர்ந்து அளித்த பயிற்சியில், பல நாய் கண்காட்சிகளில் பரிசுகளைத் தட்டிவந்திருக்கிறது. பலரின் பாராட்டுகளும் பார்த்ததும் பாசத்துடன் ஓடி வரும் நாய்களும் தரும் நிம்மதிக்கு ஈடே கிடையாது. சீக்கிரமா ஒரு டாக் கேர் சென்டர் தொடங்கணும்னு இருக்கேன். விடுமுறைக்கு மனிதர்கள் செல்வதுபோல், நாய்களுக்கும் விடுமுறை வேண்டும். அதனால ஊருக்குப் போகும்போது என்னோட சென்டர்ல விட்டுட்டுப் போனால், திரும்பி வரும்வரை பத்திரமாகப் பார்த்துக்குவேன்” என்று சிரிக்கிறார் கிருத்திகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x