Published : 27 Dec 2013 07:08 PM
Last Updated : 27 Dec 2013 07:08 PM

தஞ்சாவூர்: சரஸ்வதி மகால் சுவடிகளை பதிப்பிக்கும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சரஸ்வதி மகால் நூலகத்தின் வாயிலாக சுவடிப்பதிப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள், சுவடிப் பதிப்பில் முன் அனுபவம் உள்ளவர்கள், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள சுவடிகளைப் பதிப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

சரஸ்வதி மகால் நூலகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் என். சுப்பையன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

சரஸ்வதி மகால் நூலக வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தை காண வெளியூரிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும். பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் சரஸ்வதி மகால் நூலக வெளியீடுகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சரஸ்வதி மகால் நூலக இணையதளத்தை விரைவில் புதுப்பித்து, ஆன்-லைன் புத்தக விற்பனை மற்றும் ஆன்-லைன் தகவல் தெரிவிக்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சரஸ்வதி மகால் நூலகத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் சிறிய அளவிலான அழகிய ரதம் ஒன்றை உருவாக்கி, அதனை பல ஊர்களிலும் வலம் வரச் செய்து பொதுமக்களுக்கும் பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கும் நூலகத்தைப் பற்றி எடுத்துக் கூறி, கையேடுகளை வழங்க வேண்டும், சரஸ்வதி மகால் நூலக வெளியீடுகளை ஆந்திரம், மராட்டியம், தில்லி தேசிய நூலகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கவும், தஞ்சாவூர் மத்திய நூலகத்திலும் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மறுபதிப்பு செய்யப்பட வேண்டிய சரஸ்வதி மகால் நூலக வெளியீடுகளை குறுகிய காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்.

தமிழ். சம்ஸ்கிருதம். தெலுங்கு. மாராட்டி மொழிகளில் ஏதேனும் ஒரு முனைவர் பட்டம் பெற்று, சரஸ்வதி மகால் நூலகத்தின் வாயிலாக சுவடிப்பதிப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள், சுவடிப் பதிப்பில் முன் அனுபவம் உள்ளவர்கள், சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள சுவடிகளைப் பதிப்பிக்க விண்ணப்பிக்கலாம். தகுதிகளை ஆராய்ந்து பதிப்பாசியர் பணி வழங்கப்படும். பணி நிறைவடைந்து நூல் அச்சாகி வெளிவந்த பிறகு நூலுக்குரிய மதிப்பூதியம் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுவடிகளை சரஸ்வதி நூலகத்திற்கு அன்பளிப்பாக தரலாம். தஞ்சாவூருக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சரஸ்வதி மகால் நூலகத்தைப் பற்றிய விளம்பர பலகைகள் அதிக அளவில் வைக்க வேண்டும். நூலக அருட்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் மாராட்டிய மொழிகளில் விளக்கங்கள் எழுத வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கிடைக்கக் கூடிய கல் மற்றும் ஐம்பொம் சிலைகளை அருட்காட்சியத்திலேயே வைத்து பராமரிக்க வேண்டும். நூலக அச்சகம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

சரஸ்வதி மகால் நூலகம் என்ற தலைப்பில் பள்ளி – கல்லூரிகளில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார் சுப்பையன். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க. வரதராஜன், மாவட்ட நூலக அலுவலர் ஆர். செல்லாள், அருங்காட்சிய காப்பாட்சியர் எஸ். சிவக்குமார். நூலக ஆளுமை குழு உறுப்பினர் டி. சிவாஜிராஜா போஸ்லே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x