Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM
பொன்னேரி அருகே இளைஞர் ஒருவர் கண்ணைக் கட்டிக் கொண்டு பைக்கின் உதிரிபாகங்களை இணைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இரண்டு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். தான் செய்யும் தொழிலில் ஏதாவது புதுமை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ராஜா, மூன்று மாதங்கள் கடும் பயிற்சிக்குப் பின், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமையன்று கண்ணைக் கட்டிக் கொண்டு, பிரிக்கப்பட்ட பைக்கின் உதிரி பாகங்களை சரியாகப் பொருத்தினார்.
பொன்னேரி காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பொன்னேரி அரசுப் போக்குவரத்து பணிமனையின் கிளை மேலாளர் சுகுமாறன் ஆகியோரின் முன்னிலையில், ராஜா, இதை நிகழ்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே ராஜா இதை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ராஜா கூறுகையில், சாதாரணமாக, கண்ணைத் திறந்து ஒரு பைக்கின் உதிரி பாகங்களை இணைக்க குறைந்தது மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் ஆகும். நான் கண்ணைக் கட்டிக் கொண்டு இரண்டே முக்கால் மணி நேரத்தில் இப்பணியை செய்து முடித்தேன். இந்தச் சாதனையின் வீடியோ பதிவை லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்’ அமைப்புக்கு அனுப்பியுள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT