Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

கோவாவில் இந்தியன் பனோரமா எனப்படும் 44 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிறந்து, ஹிந்தியில் முன்னணி நடிகையாக விளங்கிய வஹீதா ரஹ்மானுக்கு இந்திய திரைத்துறையின் நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், ஹிந்தி நடிகைகள் வஹீதா ரஹ்மான், ரேகா, பின்னணிப்பாடகி ஆஷா போன்ஸ்லே, ஹாலிவுட் நடிகை சூசன் சாரன்டோன், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி, போலந்து இயக்குநர் அக்னீஸ்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

328 படங்கள்

வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் 75 நாடுகளைச் சேர்ந்த 328 படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 15 படங்கள் உள்பட 171 சர்வதேச படங்களும் அடங்கும்.

தங்கமீன்கள்

இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்களும், 16 குறும்படங்களும் திரையிடப்படவுள்ளன. இதில், அதிகபட்ச மாக 6 மலையாளப் படங்களும், 5 வங்காளப் படங்கள், 5 ஹிந்திப் படங்கள், மராத்திப் படங்கள் 3, ஆங்கிலப்படங்கள் 2, தமிழ், ஒரியா, கன்னடம், கொங்கணி மற்றும், அசாமில் பேசப்படும் பழங்குடியின மொழிகளில் ஒன்றான மிஷிங் ஆகிய மொழிகளில் தலா ஒரு படமும் திரையிடப்பட உள்ளன. தமிழில் ராம் இயக்கிய தங்கமீன்கள் படம் இடம்பெறுகிறது.

வஹீதா ரஹ்மானுக்கு விருது

தமிழகத்தில் பிறந்து, ஹிந்தியில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த பிரபல ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய திரைத்துறையின் நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, நடிகை ராணி முகர்ஜி ஆகியோர் வழங்கினர். இந்திய திரைத்துறையின் நூற்றாண்டு விருது, நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசை உள்ளடக்கியது. வஹீதா இந்தியில், சி.ஐ.டி., பியாசா, கமோஷி, 12 ஓ கிளாக், சொல்வா சால், பாத் ஏக் ராத் கி, பீஸ் சால் பாத், நீல் கமல் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

மேலும் இந்த விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது செக் நாட்டை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜிரி மென்ஸிலுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஜிரி மென்ஸிலின் சமீபத்திய திரைப்படமான ‘டான் ஜுவான்ஸ்’ இத்திரைப்பட விழாவின் முதல் படமாகத் திரையிடப்பட்டது. தொடக்க விழாவையொட்டி பிரபல கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் குழுவினரின் கதக் நடன நிகழ்ச்சி 30 நிமிடங்கள் நடைபெற்றது. விழாவை நடிகர் ரஜத் கபூர் மற்றும் நடிகை சுஹாசினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

விளம்பர நோக்கமில்லை

தொடக்க விழாவுக்கு முன்னதாக அமைச்சர் மணீஷ் திவாரி செய்தியாளர்க ளிடம் பேசியதாவது: ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. திரைப்படங்களையும், மனிதர்களையும் கொண்டாடுவதே இவ்விழாவின் அடிப்படை நோக்கம். சர்வதேச திரைப்படவிழாவை நடத்துவதன் மூலம் அரசுக்கு விளம்பரம் தேடவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். இது திரைத்துறை சார்ந்த படைப்பாளிகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான தளம். கோவாவில் 2004 ஆம் ஆண்டு முதல் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இதன்மூலம் இவ்விழா நடைபெறும் நிரந்தர இடங்களுள் ஒன்றாக இது மாறிவிட்டது. ஆகவே, கோவாவில் சர்வதேச திரைப்பட விழா இனி நடக்காதா என கவலைப்படத் தேவையில்லை. நிரந்தரமாக கோவாவில்தான் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும்.

குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான திரை விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடைபெறும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x