Last Updated : 11 Sep, 2016 11:41 AM

 

Published : 11 Sep 2016 11:41 AM
Last Updated : 11 Sep 2016 11:41 AM

சேனல் சிப்ஸ்: நீலிமாவின் புதிய அவதாரம்!

நீலிமாவின் புதிய அவதாரம்!

சன் டிவியில் ‘தாமரை’, ‘வாணி ராணி’, ஜீ தமிழ் சேனலில் ‘தலையணைப் பூக்கள்’ என்று பிஸியாக இருப்பவர் நீலிமா ராணி. தற்போது வானவில் தொலைக்காட்சியில் ‘பெண்’ என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரை தொகுப்பாளினியாக முகம் காட்டத் தொடங்கியுள்ளார்.

’’சின்னத்திரையில் நாயகி, வில்லி என்று ஒரே நேரத்தில் நடித்து வருவதைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். அதிலும் ‘வாணி ராணி’ தொடரில் நடிப்பில் லெஜண்ட் என்று கொண்டாடப்படும் ராதிகா மேடத்தை எதிர்க்கும் ஆக்ரோஷமான வில்லி பாத்திரம். ‘குற்றம் 23’, ‘மன்னர் வகையறா’, ‘சத்ரு’ என்று திரைப் படங்களிலும் நடித்து வருகிறேன். சின்ன வயது முதலே நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். சினிமா, சின்னத்திரை, நிகழ்ச்சி தொகுப்பு என்று ஒரே நேரத்தில் பிஸியாவேன் என்று நானே நினைத்துப் பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் ரொம்பவே த்ரில்லாக நகர்கிறது!’’ என்கிறார் நீலிமா ராணி.

காதல் கதை

வேந்தர் டிவியின் நெடுந்தொடர் ‘கண்ணே என் கண்மணியே’ இரண்டாம் பாகமாக 100 எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நேர்மை தவறாத போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த நாயகி ஆரோகியை, நிழல் உலக தாதா சின்ஹானியாவின் வளர்ப்பு மகன் அர்ஜுன் ஏமாற்றித் திருமணம் செய்துகொள்கிறான். ஆரோகிக்கு அர்ஜுன் மீது இருக்கும் வெளியே காட்ட முடியாத காதலால் அவனை விட்டுப் பிரியவும் மனம் இல்லாமல், அவனுடன் சேர்ந்து வாழவும் வழியில்லாமல் தவிக்கிறார். ஆரோகி, அர்ஜுன் காதலை சுவாரஸ்யமாகவும் இளமைத் துள்ளலுடனும் சொல்லும் காதல் கதை. இதில் கரண் குன்ரா அர்ஜுனாகவும் கிருத்திகா கம்ரா ஆரோகியாகவும் நடிக்கின்றனர் .

மாடலிங்கில் அப்சரா

ஆயிரம் அத்தியாயங் களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் ‘பொம்மலாட்டம்’ தொடரில் நடித்து வரும் அப்சரா, சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

’’சின்னத்திரை தொடர்களுக்குள் வந்ததால் இடையே சில காலம் மாடலிங்கில் ஈடுபட முடியவில்லை. புகைப்படக் கலைஞர் அஸ்லம் பாஷா, ஃபேஷன் கோரியோகிராஃபர் விக்கி கபூர் ஒருங்கிணைப்பில் மிகப் பெரிய மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து வந்தேன். அது தந்த ஆர்வம் மீண்டும் ஃபேஷன் ஷோ, ரேம்ப் வாக் என்று மாடலிங் உலகத்துக்குள் இழுத்துவிட்டது. திருமணத்துக்குப் பிறகு சின்னத்திரையில் இருந்து மற்றொரு பரிமாணமாக இந்தத் துறையைப் பார்க்கிறேன்!’’ என்கிறார் அப்சரா. ‘பொம்மலாட்டம்’ தொடரில் நடிக்கும் கவுரி லட்சுமிதான் உங்களுக்கு வில்லி. ஆனால் நிஜத்தில் இருவரும்தான் நெருக்கமான பிரண்ட்ஸ் என்று சொல்கிறார்களே என்று கேட்டால், ‘‘ஆமாம். எப்படித் தோழிகளானோம்னு தெரியலை. எல்லோரும் இதைத்தான் கேட்குறாங்க. ஒரு வேளை சீரியலில் வரும் நெகடிவ் கதாபாத்திரம்தான் எங்களை நெருக்கமான தோழிகளா ஆக்கியிருக்குமோன்னு தோணுது. நல்ல நட்பு என்றால் கொண்டாட்டம்தானே!’’ என்று சிரிக்கிறார் அப்சரா.

த்ரில்லர் தொடர்

புதுயுகம் தொலைக்காட்சியில் ‘விழியே கதை எழுது’ மெகா தொடர் சஸ்பென்ஸ் கலந்த குடும்பத் தொடராக வருகிறது. திருமணம், வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய அனுபவமாக அமையவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து சந்தோஷப்படும் தினமாக அமைய வேண்டிய திருமண நாள், பார்வை தெரியாத சந்தியாவுக்கு மட்டும் கறுப்புத் தினமாக மாறிவிடுகிறது. திருமண நாளன்று சந்தியா வாழ்க்கையில் வீசிய புயலை எதிர்த்து எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை.

அரசுப் பள்ளி ஆசிரியரின் ஐந்தாவது மகள் சந்தியா. நான்கு வயதில் கண் பார்வையை இழந்துவிட்ட சந்தியாவை, மூத்த நான்கு சகோதரிகளும் பாதுகாக்கிறார்கள். கண் பார்வையை இழந்துவிட்ட சந்தியாவை எப்படிக் கரை சேர்ப்பது என்று தந்தை கவலைப்படும் நேரத்தில், பெரிய கோடீஸ்வரனான யுவராஜ் மாப்பிள்ளையாக வருகிறான். திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை வீட்டாரின் அன்பு, பாசத்தில் சந்தியாவின் குடும்பம் ஆனந்தத்தில் திளைக்கிறது. பிரமாண்டமாக சந்தியாவின் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்ததும் தந்தையின் ஆசிர்வாதத்துக் காகக் காத்திருக்க, அவர் வரவில்லை. சந்தியா தந்தைக்கு என்ன நேர்ந்தது? தந்தையின் மர்மத்துக்குப் பின்னே தன்னுடைய கணவனும் அவளது குடும்பத்தாரும் இருப்பதை அறியும் சந்தியா, அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பதை நோக்கித் தொடர் நகர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x