Last Updated : 12 Dec, 2013 12:00 AM

 

Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

3ம் வகுப்பு தரத்தில் எம்.ஏ. வினாத்தாள்! - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் திகைப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய முதல் பருவ எம்.ஏ. தமிழ் தேர்வு வினாத்தாள், மாணவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகை யில், மனோன்மணீயம் நாடகத்தை இயற்றிய சுந்தரம்பிள்ளை பெயரில், திருநெல்வேலி அபிஷேகப்பட்டி யில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 64 கலை அறிவியல் கல்லூரி கள் செயல்படுகின்றன. இக்கல்லூரி களில் சமீபத்தில் இளங்கலை, முதுகலை தேர்வுகள் நடைபெற்றன.

வினாத்தாளால் வியப்பு

எம்.ஏ. தமிழ் முதலாண்டுக்கு, `இக்கால இலக்கியம்- கவிதையும் நாடகமும்’ என்ற பாடத்துக்கான தேர்வை எழுதிய மாணவர்கள் வியப்படைந்தனர். வினாத்தாளை பார்த்ததுமே, இத்தேர்வு 3-ம் வகுப்புக்கா? முதுகலை பட்டத்துக்கா? என்ற கேள்வி அவர்கள் மத்தியில் எழுந்தது.

பள்ளிகளில் பகுதி 1-க்கான வினாத்தாள் அமைவதை போன்று, வினாக்கள் இருந்தன. உதாரணத்துக்கு பகுதி 1-ல் குயில் பாட்டின் ஆசிரியர் யார்? உமக்கு பாடமாக வந்துள்ள பாரதிதாசன் கவிதை நூலை எழுதுக என்று மிக சாதாரணமாக 30 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்கு 4 விடைகளையும் அளித்து, அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதச் சொல்லியிருந்தனர்.

தொடக்கப்பள்ளிகளைப் போன்ற மிகச் சாதாரணமான வினாக்களே, முதுகலை தமிழ் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தது. வினாத்தாளைப் பார்த்து விடைகளை மாணவர், மாணவியர் மளமளவென எழுதி விட்டு சீக்கிரமே தேர்வு அறைகளில் இருந்து வெளியேறினர். பல்கலைக்கழகத்தின் தரம், உயர்கல்வியின் போக்கு, வினாத்தாள் தயாரிக்கும் குழுக்கள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.

தரம் மேம்படுமா?

உயர்கல்வி தர மேம்பாட்டுக் காகவும், பாடத்திட்ட மேம்பாட்டுக் காகவும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவும், உயர்கல்வித்துறையும் பல்வேறு செயல்திட்டங்களை அமல்படுத்தியிருக்கும் நிலையில், முதுகலை தரத்துக்கான வினாத் தாள்களை தயாரிக்காதது, மாணவர்கள் தரத்தை உயர்த்தாது ஏன் என்று தமிழ் பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

துறைசார்ந்த அனுபவம் மிக்க பேராசிரியர்களை கொண்டு வினாத்தாள்களை தயாரிப்பதுதான் வழக்கம். பல்கலைக் கழகத்துக்கு வெளியில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் வினாத்தாள்களை தயாரித்தாலும், பல்கலைக்கழக அளவில் பேராசிரியர்கள் அடங்கிய மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும் என்று தமிழ் பேராசிரியர்கள் வலியுறுத்துகிறார் கள்.

மாணவர்களை மழுங்கடிக்கலாமா?

மாணவர்கள் மத்தியில் தமிழ் பயில அதிக வரவேற்பு இல்லாத நிலையில், இதுபோன்ற வினாத்தாள்களை அளித்து அவர்களை வெறுப்படையச் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும். மாணவர்களின் உயர்கல்வி தரம் மேம்பட பேராசிரி யர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். ஆசிரியர் சங்கங்களும், பல்கலைக்கழத்துடன் ஒத்துழைத்து இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க செய்ய வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x